search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fifa World Cup"

    • இன்றைய போட்டிகளின் முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.
    • இரண்டாவது சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

    தோகா:

    உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன.

    லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

    நெதர்லாந்து , செனகல் (குரூப் ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி), அர்ஜென்டினா, போலந்து (சி), பிரான்ஸ், ஆஸ்திரேலியா (டி), ஜப்பான், ஸ்பெயின், (இ), மொராக்கோ , குரோஷியா (எப்) , பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்) ஆகிய நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளன.

    இன்றுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. இன்றைய போட்டி முடிவில் மேலும் 2 அணிகள் 2-வது சுற்றுக்கு நுழையும்.

    'எச்' பிரிவில் உள்ள தென்கொரியா இன்று இரவு 8.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் கானா-உருகுவே அணிகள் மோதுகின்றன.

    இதில் போர்ச்சுக்கல் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. மற்ற அணிகள் வெற்றி கட்டாயத்தில் உள்ளன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் ஆட்டங்களில் 'ஜி' பிரிவில் செர்பியா-சுவிட்சர்லாந்து அணிகளும், பிரேசில்-கேமரூன் அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. அடுத்த சுற்றுக்கு பிரேசில் தகுதி பெற்று விட்ட நிலையில் மற்ற அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

    ஈக்வடார், கத்தார், ஈரான், வேல்ஸ், மெக்சிகோ, சவுதி அரேபியா, துனிசியா, டென்மார்க், ஜெர்மனி , கோஸ்டாரிகா , பெல்ஜியம், கனடா ஆகிய நாடுகள் வெளியேற்றப்பட்டன.

    2-வது சுற்று ஆட்டங்கள் நாளை (3-ந்தேதி) தொடங்குகிறது. இந்த சுற்றில் 16 நாடுகள் விளையாடும். இதில் இருந்து 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும்.

    நாளை (சனிக்கிழமை) நடைபெறும் 2-வது சுற்று ஆட்டங்களில் 'ஏ' பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து-'பி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்கா (இரவு 8.30), 'சி' பிரிவில் முதல் இடத்தை பிடித்த அர்ஜென்டினா-'டி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்த ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.

    வெற்றி பெறும் நாடுகள் காலிறுதிக்கு தகுதி பெறும். தோல்வி அடையும் அணிகள் வெளியேற்றப்படும்.

    • முதல் பாதியில் ஜெர்மனி அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜெர்மனி, கோஸ்டா ரிகா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 10-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் செர்கே நாப்ரி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் ஜெர்மனி 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 58-வது நிமிடத்தில் கோஸ்டா ரிகா அணியின் யெல்ட்சின் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். 70-வது நிமிடத்தில் மானுவல் நியூர் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜெர்மனி வீரர் ஹெவர்ட்ஸ் 73 மற்றும் 85வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து அசத்தினார். மற்றொரு வீரர் நிக்லஸ் புல்குர்க் 89வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிகாவை வீழ்த்தியது. போட்டியில் வெற்றி பெற்றாலும் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்ததால் தொடரில் இருந்து ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் வெளியேறின.

    • முதல் பாதியில் ஸ்பெயின் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
    • ஆட்டநேர முடிவில் ஜப்பான் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஜப்பான், ஸ்பெயின் அணிகள் மோதின.

    ஆட்டத்தின் ஆரம்பத்தில் 11வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைபடுத்தினார். இதனால் முதல் பாதியில் ஸ்பெயின் 1-0 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியில் ஜப்பான் வீரர்கள் சிறப்பாக ஆடினர். ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஜப்பானின் ரிட்சு டான் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். மற்றொரு வீரர் டனகா 51-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

    ஸ்பெயின் அணி தோல்வி அடைந்தாலும் கோல்கள் அதிகமாக அடித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • குருப்-எப் பிரிவில் மொராக்கோ 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    • கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் போட்டியில் இருந்து வெளியேறியது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில், குரூப்-எப் பிரிவில் உள்ள கனடா, மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் ஆதிக்கம் செலுத்திய மொராக்கோ அணி, 4வது நிமிடம் மற்றும் 23வது நிமிடத்தில் கோல் அடித்தது. இந்த கோல்களை ஹக்கிம் ஜியேச், யூசப் யென்-நெசிரி அடித்தனர். அதன்பின்னர் 40வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் கனடா வீரர் நயீப் கோல் அடித்தார். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் மொராக்கோ அணி 2-1 என முன்னிலை பெற்றது.

    இரண்டாவது பாதி ஆட்டத்தில் கனடா வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். குறைந்தபட்சம் ஆட்டத்தை சமன் செய்துவிட வேண்டும் என்றும் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களின் முயற்சியை மொராக்கோ வீரர்கள் முறியடித்தனர். அதேசமயம் அவர்களும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இறுதியில் 2-1 என மொராக்கோ அணி வெற்றி பெற்றது. அத்துடன், குருப்-எப் பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. கனடா அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் வெளியேறியது.

    குரூப்-எப் பிரிவில் மற்றொரு ஆட்டத்தில் குரோஷியா, பெல்ஜியம் அணிகள் விளையாடின. இப்போட்டியின் இறுதி வரை இருஅணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. இதனால் கோல் இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 புள்ளிகளுடன் குரோஷியா அணி நாக் அவுட் சுற்றை உறுதி செய்தது.

    • 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார்.
    • பிரான்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவு லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-டென்மார்க் அணிகள் விளையாடின. இப்போட்டியின் முதல் பாதியில் கோல்கள் பதிவாகவில்லை. இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்தது.

    ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ லெக்கி கோல் அடித்தார். அதன்பின்னர் இறுதி வரை கோல்கள் அடிக்கப்படவில்லை. எனவே, ஆஸ்திரேலிய அணி 1-0 என வெற்றி பெற்றதுடன், நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகளில் 2 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

    குரூப் டி பிரிவில் உள்ள பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது.
    • 3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது.

    கத்தார்:

    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-டி பிரிவில் உள்ள துனிசியா-பிரான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் துனிசியா அணியின் காஸ்ரி 58வது நிமிடத்தில் கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். அதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது.

    அதன்பின்னர் ஆட்டநேர இறுதி வரை இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. கூடுதல் நேரத்திலும் கோல் முயற்சி கைகூடவில்லை. எனவே, துனிசியா அணி 1-0 என வெற்றி பெற்றது. அத்துடன், பிரான்சை வீழ்த்திய ஆறுதலுடன் போட்டியில் இருந்து வெளியேறியது.

    3 போட்டிகளில் விளையாடிய துனிசிய அணி ஒரு வெற்றி, ஒரு டிரா என மொத்தம் 4 புள்ளிகளை பெற்றது. பிரான்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறியது. 

    • முதல் பாதியில் செனகல் அணி ஒரு கோல் அடித்தது.
    • ஆட்டநேர முடிவில் செனகல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் ஈகுவடார், செனகல் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் செனகல் அணி சிறப்பாக ஆடியது . ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் செனகல் அணியின் இஸ்மைலா சர் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் முதல் பாதியில் செனகல் 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் ஈகுவடார் அணியின் மொய்சஸ் கைசெடொ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். இதற்கு பதிலடியாக செனகல் அணியின் கலிடோ கவுலிபலி 70-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

    இறுதியில், செனகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    இந்த தோல்வியின் மூலம் ஈகுவடார் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    • முதல் பாதியில் நெதர்லாந்து அணி ஒரு கோல் அடித்தது.
    • கத்தார் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

    தோகா:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ஏ பிரிவில் இரு லீக் ஆட்டங்கள் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்றது.

    இதில் நெதர்லாந்து, கத்தார் அணிகள் மோதின.

    தொடக்கம் முதல் நெதர்லாந்து அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் கோடி காக்போ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது.

    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரெங்கி டி ஜாங் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வென்றது. அத்துடன் புள்ளிப்பட்டியலில் முதலிடமும் பிடித்தது.

    கத்தார் அணி தான் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து கடைசி இடத்தில் உள்ளது.

    • வீரர்கள் அறையில் மெக்சிகோ ஜெர்சியால் தரையை மெஸ்சி சுத்தம் செய்ததாக பாக்சர் குற்றச்சாட்டு
    • மெக்சிகோவை அர்ஜென்டினா 2-0 என வீழ்த்தியது

    கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவிடம் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மெக்சிகோவிற்கு எதிராக களம் இறங்கியது. இதில் வெற்றி பெற்றால்தான் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற முடியும் என நிலையில் அர்ஜென்டினா 2-0 என மெக்சிகோவை வீழ்த்தியது.

    இந்த போட்டி முடிந்த பின்னர் அர்ஜென்டினா வீரர்கள் தங்களது அறையில் வெற்றி மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது மெக்சிகோ வீரர் அணியும் ஜெர்சிக்கு மேல் அர்ஜென்டினா வீரர்கள் குதிப்பது போன்றும், மெஸ்சி ஜெர்சியை காலால் மிதித்துக் கொண்டிருப்பது போலவும், ஜெர்சியால் அறையை க்ளீன் செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகின.


    இது மெக்சிகோ நாட்டின் குத்துச் சண்டை வீரர் கனாலோ அல்வாரேஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ''நம்முடைய ஜெர்சி மற்றும் தேசியக்கொடியால் அறையை மெஸ்சி சுத்தம் செய்வதை பார்த்தீர்களா? என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அத்துடன், ''நான் மெஸ்சியை பார்த்துவிடக் கூடாது என கடவுளிடம் வேண்டிக் கொண்டால் அவருக்கு நன்றாக இருக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.

    இது டுவிட்டரில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மெஸ்சியின் ரசிகர்கள் சிலர், மெஸ்சி தரையை சுத்தம் செய்வது போன்று அதில் காட்டப்படவில்லை. மேலும், மெக்சிகோ கொடி அங்கு இல்லை எனத் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அல்வாரஸ், மெக்சிகோவை அவமானப்படுத்தினர் எனக் குறிப்பிட்டார்.

    முன்னாள் அர்ஜென்டினா வீரர் செர்ஜியோ, ''நீங்கள் பிரச்சினையை தேடாதீர்கள். விளையாட்டு முடிந்த பின்னர், வீரர்கள் அறையில் என்ன நடக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. விளையாடிய பின்னர், வியர்வையால் நனைந்திருக்கும் ஜெர்சியை வீரர்கள் தரையில் போட்டு வைப்பது வழக்கமானதுதான் எனத் தெரிவித்தள்ளார்.

    அல்வாரேஸ் ''நான் அர்ஜென்டினாவிற்கு மரியாதை அளிக்கிறேன். மெக்சிகோவிற்கும் மரியாதை அளிக்க வேண்டும். நான் அர்ஜென்டினாவை பற்றி பேசவில்லை. மெஸ்சி செய்த மோசமான காரியத்தை பற்றி பேசுகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    • முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதியில் தென் கொரியா 2 கோல் அடித்தும் 3-2 என்ற கணக்கில் தோற்றது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68- து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    • முதல் பாதியில் செர்பியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2வது பாதியில் அதிரடியாக ஆடிய கேமரூன் இரு கோல் அடித்து சமன் செய்தது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில் செர்பியா, கேமரூன் அணிகள் மோதின.

    போட்டியின் 29வது நிமிடத்தில் கேமரூன் வீரர் காஸ்டெலொடோ ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் கூடுதலாக அளிக்கப்பட்ட நேரத்தில் செர்பியா இரு கோல்கள் அடித்து அசத்தியது. 46-வது நிமிடத்தில் பாவ்லோவிக் ஒரு கோலும், 48வது நிமிடத்தில் சாவிக் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதி முடிவில் செர்பியா 2-1 என முன்னிலை வகித்தது.

    இரண்டாவது பாதியின் 53-வது நிமிடத்தில் செர்பியாவின் அலெக்சாண்டர் மிட்ரோவிக் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கேமரூன் வின்செண்ட் அபுபக்கர் 63 வது நிமிடத்திலும், எரிக் மாக்சிம் 66வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    ஆட்டநேர இறுதியில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. இதன்மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

    • நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்.
    • கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.

    நியூசிலாந்து மண்ணில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றது. அடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடர் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் இதில் காலம் காலமாக வாய்ப்புக்காக காத்துக் கிடக்கும் கேரளாவை சேர்ந்த இளம் வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.


    கடந்த 2015-ல் அறிமுகமானாலும் 2-வது கிரிக்கெட் போட்டியை 2019-ல் விளையாடினார். பின்னர் 2021 வரை இந்திய அணியில் பயன்படுத்தப்பட்டு மீண்டும் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்திய அவர் இந்த வருடம் ராஜஸ்தானின் கேப்டனாகவும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டதால் ஓரளவு நிலையான வாய்ப்புகளை பெற்றார். அதில் பெரும்பாலான போட்டிகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல ரன்களை குவித்து நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு டி20 உலக கோப்பையில் ரிசர்வ் பட்டியலில் கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் கொந்தளித்த ரசிகர்களின் கோபத்தை தணிக்க அடுத்ததாக நடைபெற்ற நியூசிலாந்து ஏ ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரை அறிவித்து பிசிசிஐ மழுப்பியது.


    அதில் 3 -0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து சமீபத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் 3 போட்டியிலும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்தலாக செயல்பட்ட சஞ்சு சாம்சனுக்கு நடைபெற்று வரும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் டி20 தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 36 ரன்கள் எடுத்தார் சஞ்சு சாம்சன். ஆனாலும் 6வது பவுலர் தேவை என்பதற்காக அடுத்த போட்டியிலேயே மனசாட்சியின்றி இந்திய நிர்வாகம் அவரை அதிரடியாக நீக்கியது.


    சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு எவ்வளவு மறுக்கப்படுகிறதோ அந்தளவுக்கு அநீதிக்கு எதிராக ரசிகர்கள் ஒன்று திரண்டு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக இந்த நியூசிலாந்து டி20 தொடரில் சஞ்சு என்ற பொன்னெழுத்துக்களை கொண்ட பதாகைகளை தாங்கி பிடித்து ஆதரவு கொடுத்து வரும் ரசிகர்கள் தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள்.


    ஆம் கத்தாரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் நிறைய ரசிகர்கள் மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் "கத்தாரில் இருந்து நிறைய அன்பும் ஆதரவும் கொண்ட நாங்கள் சஞ்சு சமசனுக்கு ஆதரவு கொடுக்கிறோம்" என்றும் "எந்த போட்டியாக இருந்தாலும் எந்த அணியாக இருந்தாலும் அல்லது வீரராக இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் சஞ்சு சாம்சன்" என மிகப்பெரிய பதாகைகளில் தங்களது ஆதரவு வசனங்களை கையில் பிடித்து ஆதரவு கொடுத்தார்கள்.

    இதை அவரின் ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உட்பட ஏராளமானவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது ஆதரவை கொடுத்து வருகிறார்கள். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகத்திற்கு எதிராகவும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். 

    ×