search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annamalai University Scam"

    அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழல்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சிதம்பரம் அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் கடந்த 2009-11-ம் ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் தொடர்பாக அப்போதைய துணைவேந்தர் ராமநாதன், பதிவாளர் ரத்தினசபாபதி உள்ளிட்டோர் மீது கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். பல்கலைக் கழக சீரழிவுக்கு காரணமானவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது ஆகும்.

    அதேநேரத்தில் பல்கலைக் கழக ஊழலுக்கு 2011-ம் ஆண்டுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை; பல்கலைக்கழக நிர்வாகம் புனிதமடைந்து விடவில்லை என்பதையும் கையூட்டுத் தடுப்புப் பிரிவு அறிந்து கொள்ள வேண்டும்.

    அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கணினி புரோகிராமர்களாக பணியாற்றி வந்த 189 பேரும், ஆசிரியர் அல்லாத பணியில் இருந்த 30 பேரும், 2016-ம் ஆண்டு பேராசிரியர்களாக மாற்றப்பட்டனர். அவர்களிடமிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.10.95 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது;

    பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூர கல்வி இயக்கத்திற்கான புத்தகங்கள் அச்சிடுதல், பொருட்களை கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தங்களை வழங்குவதில் 30 சதவீதம் கையூட்டு பெறப்பட்டது;

    தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பணியாற்றியவர்களை இடமாற்றம் செய்து, அதை ரத்து செய்வதற்காக ஒவ்வொருவரிடமிருந்தும் லட்சக்கணக்கில் கையூட்டு பெறப்பட்டுள்ளது.

    மருத்துவக் கல்வியை தரமாக மாற்ற வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகளாக மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற முடியாமல் தவித்து வந்த மாணவர்கள் 150 பேரிடம் தலா ரூ.25 லட்சம் வீதம் கையூட்டு பெறப்பட்டு அவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.37.5 கோடி கையூட்டாக பெறப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளுக்கு கருவிகளை வாங்குவதற்காக அப்போதைய துணை வேந்தர் மணியனின் மகனுக்கு நெருக்கமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் நடைபெற்ற ஊழல்கள் குறித்த ஆவணங்களை கடலூர் கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் சதீஷ் சில ஆண்டுகளுக்கு முன் பறிமுதல் செய்த போதிலும் மேல்நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    பல்கலைக்கழகத்தின் உபரி பணியாளர்கள், பேராசிரியர்களை அவர்களுக்கு விருப்பமான இடத்துக்கு மாற்றுவதற்கு கையூட்டு, பல்கலைக் கழகத்திற்கு முதல்வர்கள், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், துணைத் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துறைத் தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பதில் ஊழல், பல்கலைக்கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் 3 உணவகங்களுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல், நூலகங்களுக்கு புத்தகங்களை வாங்கியதிலும், கண்காணிப்பு கேமிராக்களை வாங்கியதிலும் ஊழல் என முந்தைய துணைவேந்தர் மணியன் மீதான ஊழல் பட்டியல் வரிசை நீள்வதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களே குற்றம்சாட்டியிருக்கின்றன.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழல் புற்றுநோயாய் ஊடுருவியுள்ள நிலையில், குறிப்பிட்ட காலம் வரையிலான ஊழல்கள் குறித்து மட்டும் விசாரணை நடத்துவது நிர்வாகத்தை தூய்மைப்படுத்த உதவாது. மாறாக, மேலும் துணிச்சலுடன் ஊழல் செய்யவே வழி வகுக்கும்.

    எனவே, சில மாதங்களுக்கு முன்பு வரை துணைவேந்தராக பதவி வகித்த மணியன் மற்றும் அவரது குழுவினர் நடத்திய ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். அதேநேரத்தில் இந்த ஊழல்களில் ஆட்சியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதால் விசாரணை நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை. ஆகவே, அண்ணாமலை பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றி சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #Ramadoss

    ×