search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "adi thabasu"

    சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.
    சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக, அரனும் அரியும் ஒன்று என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், ‘சங்கரநாராயணராக’ தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

    இந்த ஆலயத்தின் தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது. ஒன்பது நிலை கொண்ட ராஜ கோபுரம் மூலவர் சங்கரலிங்கத்தையும், அம்பாள் கோமதி அம்மனையும் காண நம்மை அழைக்கிறது. இத்தல கால பைரவரை அஷ்டமி நாட்களில் சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்தால், முன்ஜென்ம வினைகளும், நாம் செய்த தவறுகளால் உண்டான தோஷங்களும், பாவங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சுவாமி, அம்பாள் சன்னிதிகளுக்கு இடையே சங்கர நாராயணர் சன்னிதி அமைந்துள்ளது.

    மூலவர் சன்னிதி பிரகாரத்தில், புற்று வடிவில் அமைந்த வன்மீகநாதர் சன்னிதி இருக்கிறது. நாகதோஷம் அகல இப்புற்றில் மஞ்சள் பூசி, இங்குள்ள பஞ்ச நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வேண்டிக்கொள்ளலாம். பெரும்பாலும் சிவாலயங்களில் லிங்கோத்பவர், மகாவிஷ்ணு, அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூவரில் ஒருவர் தான் கருவறை பின்புறம் இருப்பார். ஆனால் இங்குள்ள ஈசன் கருவறை சுற்றுச் சுவரின் பின்புறத்தில் யோக நரசிம்மர் அருள் பாலிக்கிறார். இந்த யோக நரசிம்மருக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ நேரத்தில் நெய் தீபம் ஏற்றி, பானகம் படைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் விலகும். ஆலயத்தில் சிவபெருமானின் எதிரில் அழகிய வேலைப்பாடுடன் அமைந்த, ருத்ராட்சப் பந்தலின் கீழ் நந்தி பகவான் அமர்ந்துள்ளார்.

    சங்கரநாராயணர் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறும். ‘தபசு’ என்றால் ‘தவம்’ என்று பெயர். தற்போது அமைந்திருக்கும் கோமதி அம்பாள் சன்னிதி முன்பு, நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர். இதில் சங்கன் என்னும் நாகர், சங்கரனாகிய சிவபெருமான் மீதும், பதுமன் என்னும் நாகர் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தார்கள்.

    இருவரும் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்று தங்களுக்குள் வாதம் செய்து கொண்டனர். அது பற்றி அறிந்து கொள்வதற்காக பார்வதிதேவியிடம் சென்று முறையிட்டனர். அம்பாள் சிவபெருமானை வேண்ட, ஈசன் அம்பாளை பொதிகை மலை பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கரநாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். அன்றைய தினம் ‘ஆடித்தபசு’ ஆகும். அரியும் அரனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

    சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில், தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான். அதே போல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் தருகிறார்கள். பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது. சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது. இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.

    இத்தல உற்சவருக்கே சிவராத்திரி மற்றும் ஏகாதசி நாட்களில் அபிஷேகங்கள் நடைபெறும். ஆடித்தபசு நாளில், இந்த உற்சவரே அம்பாளுக்கு சங்கர நாராயணராக எழுந்தருளி காட்சி தருகிறார். ஆலய வடக்குப் பிரகாரத்தில் சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படும்.

    ஆடித்தபசு விழா இத்தலத்தில் 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அன்றைய தினம் காலையில் தங்கச் சப்பரத்தில் கோமதி அம்மன் எழுந்தருளி தபசு மண்டபம் வந்தருள்வாள். மாலை 4 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக வெள்ளி ரிஷப வாகனத்தில், தெற்கு ரத வீதியில் உள்ள காட்சி மண்டப பந்தலுக்கு வருகை தருவார். தொடர்ந்து அம்பாளும் காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்வாள். அங்கு அம்பாள் தனது வலது காலை உயர்த்தி, இடது காலால் நின்றவாறு தலையில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்தபடி தபசுக் காட்சி அருள்வாள். மாலை 6 மணிக்கு ஈசன், சங்கர நாராயணராக அம்பாளுக்கு காட்சி தருவார். அப்போது பக்தர்கள், தங்கள் வயலில் விளைந்த பொருட்களான நெல், பருத்தி, கம்பு, சோளம், பூ, மிளகாய் போன்றவற்றை ‘சூறை விடுதல்’ என்ற பெயரில் அம்பாள் மீது வீசியெறிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பின்பு அம்மன் மீண்டும் தவக்கோலம் பூணுகிறாள். எதற்காக மீண்டும் தவம்? அம்பாளின் அண்ணன் மகாவிஷ்ணு, சிவபெரு மானின் ஒரு பாதியில் வீற்றிருந்து சங்கர நாராயணராக உள்ளார். ஈசனின் ஒரு பாதியில் அண்ணன் இருப்பதால் ஈசனை எவ்வாறு மணப்பது?. எனவேதான் அம்மன் மீண்டும் ஈசனை வேண்டி சங்கரலிங்கமாக காட்சி அருள வேண்டு கிறாள். இரவு 11.30 மணிக்கு சுவாமி கோவிலில் இருந்து வெள்ளி யானை வாகனத்தில் புறப்பட்டு காட்சி மண்டப பந்தலுக்கு எழுந்தருள்கிறார். சரியாக இரவு 12 மணிக்கு ஈசன், கோமதி அம்மனுக்கு சங்கரலிங்கமாகக் காட்சி கொடுக்கிறார். பின் அம்பாள் ஈசனுக்கு திருமண மாலை மாற்றி மணந்து கொள்கிறார். பின்னர், சுவாமி அம்பாள் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

    அற்புத சக்கரம்

    கோமதி அம்பாள் சன்னிதியின் முன் மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்திற்கு ‘ஆக்ஞா சக்கரம்’ என்று பெயர். அதில் உட்கார்ந்து அம்மனை வேண்டி தியானித்தால் சகலமும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம். கூடவே நிலையான மன அமைதியும் பெறலாம். அம்பாளுக்கு திங்கட்கிழமைகளில் மலர் பாவாடை, வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அணிவித்து அலங்காரம் செய்விக்கிறார்கள். அம்பாளுக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத் தடை, புத்திரதோஷம், நாகதோஷம் முதலியவை அகலும் என்று கூறப்படுகிறது.

    நோய் தீர்க்கும் புற்றுமண்

    இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு, புற்று மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், இந்த புற்று மண்ணை நீரில் கரைத்து குடித்து வந்தால் விரைவில் நோய் தீர்ந்து விடுவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புற்று மண்ணை வயல் வெளிகளில் தூவினால், பயிர்கள் மிகவும் செழிப்பாக வளரும், அதிக விளைச்சல் கிடைக்கும் என்பதும், புற்று மண்ணை வீட்டிற்கு வெளியே ஒரு துணியில் கட்டி தொங்கவிட்டால், தீவினைகள், தீய சக்திகளை அண்ட விடாமல் குடும்பத்தை காக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. வீடுகளில் கொடிய விஷ ஜந்துகள் தொல்லை இருந்தால், இறைவனை வேண்டிக் கொண்டு அவற்றின் வெள்ளி உருவங்களை வாங்கி நேர்ச்சையாக செலுத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விஷ ஜந்துகள் தொல்லை தீரும்.

    திருநெல்வேலியில் இருந்து வடமேற்கே 48 கிலோமீட்டர் தூரத்தில் சங்கரன்கோவில் அமைந்துள்ளது. 
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தவசு திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 25-ந்தேதி நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 5 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு விளா பூஜை நடந்தது. மதியம் 12.05 மணிக்கு மேல் தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதிஅம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து 2.45 மணிக்கு மேல் சங்கரநாராயண சுவாமி சப்பரத்தில் தெற்குரதவீதியில் உள்ள தவசு காட்சி கொடுக்கும் பந்தலுக்கு புறப்பட்டார்.

    அப்போது விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்டவற்றை சப்பரத்தில் போட்டனர். பின்னர் சுவாமியை அம்பாள் மூன்று முறை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 5.14 மணிக்கு சிவபெருமான், கோமதிஅம்பாளுக்கு ரி‌ஷப வாகனத்தில் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. அப்போது பக்தர்கள், ‘சங்கரா, நாராயணா‘ என்று விண்ணதிர பக்தி கோ‌ஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசு காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு மேல் சிவபெருமான் கோமதிஅம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடந்தது. விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது.
    தென்காசி காசிவிசுவநாதர் கோவிலை சார்ந்துள்ள மேலச்சங்கரன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடித்தபசு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடித்தபசு திருவிழா வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக கொடியேற்று விழா நேற்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

    ஆடித்தபசு திருவிழா வினை முன்னிட்டு திருவிழா நாட்களில் தினமும் காலை , மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் மற்றும் ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி வருகிற 27-ந் தேதி மாலை 5 மணிக்கு தென்காசி தெற்கு மாசி வீதியில் நடைபெறும். இந்த தபசுக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தென்காசிக்கு வருகை தருவார்கள்.

    இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சுவாமி சங்கர நாராயணராக காட்சி கொடுக்கும் தபசுக்காட்சி நடைபெறும். பின்னர் 3 முறை சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.

    இந்த விழாவில் 28 -ந் தேதி மாலை 5 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சங்கர், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகிறார்கள்.
    சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 27-ந்தேதி தபசு காட்சி நடைபெறுகிறது.
    தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சைவ-வைணவ திருத்தலங்களில் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா, திருவாதிரை திருவிழா, நவராத்திரி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இங்கு கோமதியம்மனுக்கு சங்கரநாராயணராக சிவபெருமான் காட்சி அளிக்கும் ஆடித்தபசு திருவிழா பிரசித்தி பெற்ற விழாவாகும்.

    இந்த நிகழ்வை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது உண்டு. ஆண்டு தோறும் ஆடிமாதம் ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெறும். கோவில் நிர்வாகம் சார்பிலும் மற்றும் மண்டகப்படிதாரர்கள் சார்பிலும் கலைநிகழ்ச்சிகள், கூட்ட அரங்குகள் பொது இடங்களில் நடைபெறும்.

    இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8.15க்கு மேல் 8.35க்குள் கோமதி அம்பாள் சன்னதி முன்பு அமைந்துள்ள தங்ககொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11-ம் திருநாளான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சிவபெருமாள் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 9 மணிக்கு சிவபெருமாள் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் பரஞ்சோதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

    ஆண்டு தோறும் ஆடித்தவசு திருநாளில் முதல் காட்சி 6 மணிக்கும், இரண்டாவது காட்சி நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜூலை 27 அன்று இரவு சந்திரகிரகணம் 11.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.30 மணி வரை உள்ளதால் இரவு 12 மணிக்கு நடைபெறும் இரவு காட்சி இந்த ஆண்டு இரவு 9 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    ×