search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Water opening increased"

    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கடந்த 29-ந் தேதியிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கண்டலேறு அணையில் வினாடிக்கு 1200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 595 கனஅடி வீதம் வருகிறது.

    கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர் மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும் தான் இருப்பில் இருந்தது. தற்போது கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.

    கிருஷ்ணா நதி நீர்வரத்து காரணமாக கடந்த 6-ந் தேதி இணைப்பு கால்வாயில் புழல் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 300 கனஅடி வீதம் திறக்கப்பட்டது.

    இன்று காலை முதல் நீர் திறப்பு 400 கனஅடியாக உயர்த்தப்பட்டது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 20 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர் மட்டம் 24.08 அடியாக பதிவாகியது. 720 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
    நீர்வரத்து அதிகரிப்பால் பெருஞ்சாணி அணையில் இருந்து காலை 10 மணிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #perunchanidam
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இதன் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

    பெருஞ்சாணி அணை நிரம்பியதால் அங்கிருந்து 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் புகுந்தது.

    மழை குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதனால் மாமுகம், இஞ்சிக்கடவு, மங்காடு, ஏழூர், வைக்கலூர் பகுதிகளில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது. வைக்கலூர் பகுதியில் வாழைத் தோட்டங்களை சூழ்ந்த மழை வெள்ளம் வடியாமல் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    தெரிசனங்கோப்பு, ஞாலம், அருமநல்லூர் போன்ற பகுதிகளில் மழை வெள்ளத்தில் நெல், வாழை பயிர்கள் மூழ்கின. தற்போது அங்கும் வெள்ளம் வடியத் தொடங்கி உள்ளது.

    ஏற்கனவே மழை காரணமாக சுமார் 125 வீடுகள் இடிந்து விழுந்தன. இவர்களுக்கும் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் நேற்று நிவாரண உதவிகளை வழங்கினார்கள். தொடர்ந்து பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் 11 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதனால் வீடுகளை இழந்த பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

    மழை வெள்ளத்தால் இடிந்த வீடுகள், பயிர் சேதங்களை வருவாய்த்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல மழையால் சேதம் அடைந்த மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்கும் பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.

    பெருஞ்சாணி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் நேற்று அந்த அணை மூடப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை பெருஞ்சாணி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 1454 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் 75 அடியானது.

    இதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு பெருஞ்சாணி அணை மீண்டும் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, வள்ளியாறு, கோதையாறு, குழித்துறையாறுகளில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திற்பரப்பு அருவியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

    இதேபோல பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளில் இருந்து 4 ஆயிரத்து 688 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  #perunchanidam

    கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.
    ஒகேனக்கல்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி அணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

    ஏற்கனவே கபினி அணையில் 83 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் ஒரு அடி மட்டுமே மீதம் உள்ளது.

    நேற்று மாலை 6 மணி முதல் நீர்திறப்பு 3 ஆயிரம் கன அடியில் இருந்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த 15 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும்.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று 4 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று 2 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்தது. இன்றும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
    ×