search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cricket play confiscate"

    வில்லியனூர் அருகே கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதலில் வீடு புகுந்து தாக்கியதில் என்ஜினீயர் உள்பட 4 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே ராமநாதபுரம் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (வயது24). என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். விபத்தில் சிக்கியதால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    நேற்று இவரும் இவரது நண்பர் அபிஷேக் உள்ளிட்ட சிலர் அங்குள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடினர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ரமேஷ் மற்றும் பிரபு ஆகியோர் அபிஷேக்கிடம் தகராறு செய்தனர். இதில் இருதரப்பினர் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அருண்பாண்டியன் ரமேசை தாக்கினார். பின்னர் அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    ஆனால் தன்னை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பழிக்கு பழியாக அருண்குமாரை தாக்க எண்ணினார். நேற்று இரவு ரமஷ் பிரபு மற்றும் விஜயசங்கர் (26), நாகராஜ் (30) ஆகிய 4 பேரும் அருண்பாண்டியனின் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை சூறையாடினர். பின்னர் வீட்டின் உள்ளே புகுந்து அருண்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    மேலும் இதனை தடுக்க முயன்ற அருண்குமாரின் மாமா சுந்தரமூர்த்தி, இவரது மனைவி ரமா, பாட்டி தமிழரசி ஆகியோரையும் தாக்கினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த 3 மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த அருண்பாண்டியன், சுந்தரமூர்த்தி, ரமா, தமிழரசி ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து அருண்பாண்டியன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விஜயசங்கர், நாகராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரமேஷ், பிரபு ஆகியோரை தேடிவருகிறார்கள்.

    ×