search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chandrapriyanka"

    • தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
    • கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.

    கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.

    இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-

    சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.

    ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

    விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.

    தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

    சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.

    அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.

    மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    • கவர்னர் தமிழிசை பரபரப்பு தகவல்
    • அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா நேற்று முன்தினம் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதல்-அமைச்சர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்தார்.

    தொடர்ந்து தொகுதி மக்களுக்கு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் ஜாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாவதை உணர்ந்ததால் ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் சந்திரபிரியங்கா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாகத்தான் தகவல் வெளியானது.

    ஆனால் அமைச்சர் சந்திரபிரியங்காவின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்ததால் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அவரை நீக்க பரிந்துரைத்ததாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

    மேலும், 6 மாதத்திற்கு முன்பே சந்திரபிரியங்கா நீக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால் தான் அதை தடுத்ததால், அவர் நீக்கப்படவில்லை. ஏனெனில் கடந்த 6 மாதம் முன்பு சந்திரபிரியங்காவின் பணியில் திருப்தியில்லை என்பதால் நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் ரங்கசாமி விரும்பினார்.

    ஒரே பெண் அமைச்சர் என்பதால் அழைத்து பேசி பணியாற்ற சொல்லுங்கள் என நான் கூறினேன் என கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதன்மூலம் சந்திர பிரியங்கா 6 மாதம் முன்பே முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் வலியுறுத்தல்
    • பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மக்கள் பாதுகாப்பு பேரியக்கத் தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது:-

    அமைச்சர் சந்திர பிரியங்கா ராஜினாமா செய்திருப்பது அவரது சொந்த விருப்பம் என்றாலும், ஆனால் அதற்காக அவர் கூறிய காரணங்களை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் கடுமை யான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

    சாதி ரீதியாகவும், பாலின ரீதியாகவும் அவர் துன்பு றுக்கப்பட்டு ள்ளதாகவும் மேலும் பணத்திமிர் பிடித்தவர்களுக்கு எதிராக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியிருப்பது மாநிலத்திற்கு பெரிய அவமானமாக உள்ளது. ஒரு பெண் அமைச்சருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உண்மையாக இருக்குமானால் அதற்கு இந்த அரசு முழுவதுமாக பொறுப்பேற்க வேண்டும்.

    மேலும் அவரது ராஜினாமாவை இது தொடர்பான விசாரணை முழு அளவில் முடிவு வரும் வரை இந்த அரசு ஏற்க கூடாது, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முழு அளவில் விசாரணை செய்து அவருக்கு சாதிய ரீதியாகவும் , பாலின ரீதியாகவும் தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்த அந்த பண முதலை யார் என்பதை அமைச்சர் சந்திரபிரியங்காவிடம் விசாரணை செய்து கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    33 சதவீத பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்ட நிலையில் இருக்கின்ற ஒரு பெண் அமைச்சரை நீக்காமல் தொடர்ந்து பணியாற்ற அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    • புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.
    • இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் சுற்றுலா பயணிகள் இருசக்கர வாகனங்களில் உலா வருவதை பெரிதும் விரும்புகின்றனர்.

    இவர்களுக்காக அங்கீ காரமின்றி பலர் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுகின்றனர். இதனால் பல சமூக விரோத செயல்களும் அரங்கேறின. இதையடுத்து இருசக்கர வாகனங்களை அங்கீகரித்து கருப்பு நிறத்தில் நம்பர் பிளேட், மஞ்சள் நிற எழுத்துக்களுடன் அனுமதி அளித்து வரி வசூலிக்கலாம். இதனால் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என போக்குவரத்து போலீசார் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

    இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, வாடகை இருசக்கர வாகனங்களுக்கு உரிமம் வழங்க நடவடிக்கை எடுத்தது. இருசக்கர வாகன வாடகை நிலையங்கள் நடத்துவதற்காக வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது.

    இருசக்கர வாகன வாடகை நிலையம் நடத்த குறைந்த பட்சம் 5 வாகனங்கள் வைத்திருக்கவேண்டும். தனி பார்க்கிங் வசதி இடம் இருக்க வேண்டும். ஒரு வாகனத்திற்கு ஆண்டிற்கு ரூ.1000 அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது.

    இதன்படி இருசக்கர வாடகை வாகனங்களுக்கு உரிமம் வழங்கும் பணியை அமைச்சர் சந்திர பிரியங்கா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில்,

    அரசின் விதிகளுக்கு உட்பட்டு இருசக்கர வாகனங்கள் வாடகை விட விரும்புவோர், வட்டார போக்குவரத்து அலுவ லகத்தில் விண்ணப்பித்தால், ஆய்வு செய்து உரிமம் வழங்கப்படும்.

    அரசின் உரிமமின்றி, வாடகைக்கு விடப்படும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.

    • புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள்.
    • அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை யூனியன் பிரதேசத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் தொகையில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். புதுவையின் 2-வது மிகப் பெரிய சமுதாயமாக இவர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமுதாயத்திற்கென்று இன்று புதுவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரில் ஒரு தனி அமைச்சர் இல்லை என்பது மிகவும் வேதனைக்குரியது.

    அதற்காக நியமிக்க ப்பட்டுள்ள அமைச்சர், போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று தான் அழைக்கப்படுகிறார். அவருக்கு போக்குவரத்து, ஆதிதிராவிடர் நலத்துறை, வீட்டு வசதித் துறை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, கலை கலாச்சாரத்துறை புள்ளியல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    இத்துறைகளில் மிக முக்கிய துறையும், 16 சதவீதம் உள்ள மக்களை காப்பாற்றும் பொறுப்புடைய துறையும் ஆதிதிராவிடர் நலத்துறை தான்.

    எனவே இவரை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று மட்டுமே அழைக்க வேண்டும்.அம்பேத்கரின் இட ஒதுக்கீடு முறை மூலம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியுள்ள பெண்மணி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்ற பெயரை ஏன் கேட்டு வாங்கவில்லை?

    ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவதில் அவருக்கு ஏதேனும் தயக்கம் உள்ளதா?தமிழகத்தில் மற்ற துறைகளுக்கு அமைச்சராக இருந்தாலும் அங்கு கயல்விழி செல்வராசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்று அழைக்கப்படுகிறார். இது ஏன் புதுவையில் நிகழவில்லை?ஆதிதிராவிட மக்களுக்கான சிறப்புக்கூறு நிதி திட்டத்தை 1980-ல் இருந்து 2005 வரை சரியாக முறையாக செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு இந்த மக்களை வஞ்சித்த அரசு இன்றைக்கு இந்த மக்களுக்கென்று ஒரு முதன்மை அமைச்சர் இல்லாமல் செய்து விட்டது வருத்தத்திற்குரியது.

    மாநில உரிமைகளுக்கு மாநில அந்தஸ்து கூறும் நமது முதல்-அமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு உரிமை தர வேண்டும் அவர்களுக்கு பெருமை தர வேண்டும் என்று நினைத்தால் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்ற பெயரை நீக்கிவிட்டு பெண் அமைச்சருக்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் என்று பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் இது இம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் திட்டங்கள் அனைத்தும் முறையாக கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×