என் மலர்
நீங்கள் தேடியது "அமித்ஷா"
- குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.
- சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை.
புதுடெல்லி:
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லியில் ஆங்கில தொலைக்காட்சி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பல்வேறு தலைப்புகளில் எழுந்த கேள்விகளுக்கும் விடையளித்தார். அவரது பேச்சு விவரம் வருமாறு:-
ராகுல்காந்தி குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்துள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தை அவமானப்படுத்தி உள்ளார். அதற்காகவே அவருக்கு கோர்ட்டு தண்டனை வழங்கி உள்ளது.
2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டால் மக்கள் பிரதிநிதி பதவி தானாக காலியாகி விடும் என்று நமது நாட்டின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இதற்காக பா.ஜ.க. தலைவர்களை ராகுல் தொடர்ந்து குறை கூறி வருகிறார்.
அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமானால் மீண்டும் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். அதைவிடுத்து அடம்பிடித்து கொண்டிருந்தால் எந்த பலனும் இல்லை.
நாடு முழுவதும் பா.ஜ.க. பல்வேறு கட்சிகளுடன் தோழமையுடன் உள்ளது. 2024-ம் ஆண்டு தேர்தலிலும் அந்த தோழமை தொடரும் தமிழ்நாட்டில் பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி வலுவான நிலையில் உள்ளது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜனதா கொண்டுள்ள கூட்டணியும் தொடர்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அ.தி.மு.க. கூட்டணியில் தான் பா.ஜனதா இருக்கிறது.
நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்களை விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு குறி வைத்து செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் சொல்கிறார்கள். இப்போதுகூட ராகுல் பதவி இழப்பு விஷயத்தில் நாங்கள் அழுத்தம் கொடுத்ததாக சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை.
ஆனால் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இல்லாத மற்ற கட்சி தலைவர்களை அவர்கள் எந்த அளவுக்கு குறிவைத்து செயல்பட்டனர் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர் வழக்கில் மோடியை சிக்க வைப்பதற்கு கடுமையான முயற்சிகள் நடந்தன.
சி.பி.ஐ. மூலம் எனக்கு மிக கடுமையான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. மோடிக்கு இருந்த நல்ல பெயரை சீர்குலைக்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு எனக்கு அந்த அழுத்தத்தை கொடுத்தனர். ஆனால் அதற்கு பணியவில்லை.
நான் அப்போது குஜராத் மந்திரியாக இருந்ததால் என்மீதும் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை அமைப்புகள் அனைத்தையும் அந்த கால கட்டத்தில் காங்கிரஸ் மிக மிக மோசமாக, தவறாக கையாண்டது.
காங்கிரஸ் அரசு எங்களுக்கு எதிராக ஒரு சிறு ஊழல் வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை. எனவேதான் விசாரணை அமைப்புகளை தூண்டி விட்டு எங்களை சிக்க வைக்க முயற்சி நடந்தது. கடைசியில் சி.பி.ஐ. மூலம் என்னை கைது செய்யவும் வைத்தனர்.
என்னை கைது செய்வதற்கு முன்பு சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு நான் சரியான விளக்கமான பதிலை சொன்னேன். ஆனால் அவர்கள் மோடி பெயரை குறிப்பிடும்படி வலியுறுத்தினார்கள். ஆனால் நான் உண்மையைத்தான் சொன்னேன்.
சி.பி.ஐ. கைது செய்ததற்காக நான் போராட்டம் நடத்தவில்லை. கருப்பு சட்டை அணிந்து கொண்டு அலையவில்லை. சபை நடவடிக்கைகளை முடக்கவில்லை. கடைசியில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
ஆனால் விசாரணை அமைப்புகளை எங்களுக்கு எதிராக தூண்டிவிட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று அதே காரணத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் வெற்றிபெறும். தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
சுதந்திரப் போராட்ட வீரர் சவார்கர் பற்றி ராகுல் அவதூறாக பேசுகிறார். சுதந்திரப் போராட்ட தியாகிகளை இப்படி அவமரியாதை செய்யக்கூடாது. அவர்கள் கட்சி மூத்த தலைவர்கள் இதுபற்றி ராகுலுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
- 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது.
- போதைப்பொருள் கடத்தல் ஒரு தேசிய பிரச்சினை.
பெங்களூரு :
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் பெங்களூருவில் 'போதைப்பொருள் கடத்தல் தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு' தொடர்பான தென்மண்டல மாநாடு நேற்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதில் அமித்ஷா பேசும்போது கூறியதாவது:-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க போதைப்பொருளுக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. சுதந்திர தின பவள விழாவையொட்டி 75 நாள் பிரசாரத்தின்போது, 75 ஆயிரம் கிலோ போதைப்பொருளை அழிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு, ரூ.8,409 கோடி மதிப்பிலான 5 லட்சத்து 94 ஆயிரத்து 620 கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டு, இலக்கைவிட பன்மடங்கை எட்டி விட்டோம். இதுவரை அழிக்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களில், போதைப்பொருள் தடுப்பு படை (என்.சி.பி.) மட்டும் ரூ.3 ஆயிரத்து 138 கோடி மதிப்புள்ள ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 363 கிலோ போதைப்பொருளை அழித்துள்ளது.
பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் மும்முனை அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. இந்த மும்முனை அணுகுமுறையில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நிறுவனங்களுக்கும் அதிகாரமளித்தல் மற்றும் அவர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்குதல் ஆகியவை அடங்கும்.
போதைப்பொருள் கடத்தல் என்பது ஒரு மாநிலம் அல்லது மத்திய அரசுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஒரு தேசிய பிரச்சினை. அதை சமாளிப்பதற்கான முயற்சிகள் தேசிய மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். போதைக்கு எதிரானது போராட்டம் மட்டுமல்ல, அரசால், மக்களால் இந்த பிரச்சினையை சமாளிக்க, மாவட்ட மற்றும் மாநில அளவிலான விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியம்.
போதைப்பொருளின் ஒட்டுமொத்த வலையமைப்பையும் ஒடுக்க, போதைப்பொருள் வழக்குகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தை முழுமையாக அணுக வேண்டும். போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கடந்த 2006-2013-ம் ஆண்டில் மொத்தம் 1,257 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இது 2014-2022-ம் ஆண்டில் 152 சதவீதம் அதிகரித்து 3,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதே காலக்கட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 260 சதவீதம் அதிகரித்தது.
அதாவது கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,362-ல் இருந்து 4,888 ஆக அதிகரித்தது. 2006-2013-ம் ஆண்டில் 1.52 லட்சம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது, இது 2014-2022-ம் ஆண்டில் 3.30 லட்சம் கிலோவாக அதிகரித்துள்ளது. 2006-2013-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மதிப்பு ரூ.768 கோடியாக இருந்த நிலையில், அது 2014-2022-ம் ஆண்டில் 25 மடங்கு அதிகரித்து ரூ.20 ஆயிரம் கோடியாக இருக்கிறது.
போதைப்பொருள் பயன்பாட்டை நமது நாட்டில் இருந்து ஒழிக்க பிரதமர் மோடி அரசின் பிரசாரத்திற்கு 4 தூண்கள் உள்ளன. போதைப்பொருள் கண்டறிதல், வலையமைப்பை அழித்தல், குற்றவாளிகளை கைது செய்தல், போதைப்பொருள் பயன்பாட்டால் பாதித்தோருக்கு மறுவாழ்வு அழித்தல் ஆகிய 4 ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு பணிக்குழுவை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. இது தவிர, போதைப்பொருள் தடுப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். 60 முதல் 70 சதவீத போதைப்பொருள் கடல் வழியாக கடத்தப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் பெரிய நபர்கள் கைதாகும்போது, ஒட்டுமொத்த வலையமைப்பு குறித்தும் விசாரிக்க வேண்டும். போதைப்பொருளுக்கு அடிமையானவரை பிடிக்கும்போது, அவருக்கு அதை வினியோகம் செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இந்த மாநாட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களின் பிரதிநிதிகள், கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து இதே விஷயம் குறித்து பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இதில் 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மற்றும் பல்வேறு பத்திரிகை அதிபர்கள், ஊடக செய்தி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.
- எதிர்க்கட்சிகள் முன் வந்தால் பாராளுமன்ற முடக்கத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின் முதல் 5 நாட்களும் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் நடைபெறவில்லை. ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு, அதானி விவகாரத்தால் பாராளுமன்றம் தினமும் முடங்கி வருகிறது.
இந்நிலையில், பாராளுமன்ற முடக்கத்துக்கு அரசும், எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என உள்துறை மந்திரி அமித்ஷா யோசனை தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடந்த 'இந்தியா டுடே' மாநாட்டில் பேசும்போது இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
வெறும் ஆளுங்கட்சி அல்லது வெறும் எதிர்க்கட்சியால் மட்டும் பாராளுமன்ற அமைப்பு இயங்காது. ஏனெனில் இரு தரப்பும் ஒருவருக்கொருவர் பேசவேண்டும். எனவே பாராளுமன்ற முட்டுக்கட்டைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இரு தரப்பும் சபாநாயகர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்காக அவர்கள் (எதிர்க்கட்சி) 2 அடி முன்வந்தால், நாங்களும் 2 அடி முன்னோக்கிச் செல்வோம். இதன்மூலம் பாராளுமன்றம் இயல்பு நிலைக்கு திரும்பும். ஆனால் எதையும் செய்யாமல் வெறும் செய்தியாளர் சந்திப்பு மட்டும் நடத்தினால் எந்தப் பலனும் இருக்காது.
இந்த விவகாரத்தில் எங்கள் முயற்சிகள் இருந்தபோதும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான எந்தப் பரிந்துரையும் வரவில்லை. அப்படியிருக்க, நாங்கள் யாரிடம் பேச முடியும்? அவர்கள் ஊடகங்களிடம் பேசுகிறார்கள். பாராளுமன்றத்தில் பேச்சு சுதந்திரம் வேண்டும் என கோஷமிடுகிறார்கள். பாராளுமன்றத்தில் முழுமையான பேச்சு சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் பேசுவதை யாரும் தடுக்க முடியாது. ஆனால் பாராளுமன்றத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டே விவாதங்கள் நடத்தப்படும். நீங்கள் சாலையில் பேசுவது போல பாராளுமன்றத்தில் பேசமுடியாது. இந்த அடிப்படை புரிதலே அவர்களுக்கு இல்லையென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும்?
சில பிரச்சினைகள் அரசியலுக்கு மேற்பட்டவை. இந்திரா காந்தி கூட உள்நாட்டு விவகாரங்களை வெளிநாட்டில் பேசுவதற்கு மறுத்தார். வெளிநாடுகளிலும், பிற நாடுகளின் பாராளுமன்றங்களிலும் இந்தியா குறித்து அவதூறு பேசுவதா? இதற்கு காங்கிரஸ் பதிலளிக்கும் என நான் நம்புகிறேன்.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட்டு வருகின்றன என குறிப்பிட்டார்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

நாட்டு நாட்டு (ஆர்.ஆர்.ஆர்.)
இதையடுத்து, இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. இது படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ராம் சரண் -அமித்ஷா- சிரஞ்சீவி
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலில் நடனமாடிய நடிகர் ராம் சரணை நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது நடிகர் சிரஞ்சீவியும் உடனிருந்தார். மேலும், அமித்ஷா தனது சமூக வலைதளத்தில் 'இந்திய சினிமாவின் ஜாம்பவான்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என பதிவிட்டுள்ளார்.
Delighted meeting @KChiruTweets and @AlwaysRamCharan - two legends of Indian Cinema.
— Amit Shah (@AmitShah) March 17, 2023
The Telugu film industry has significantly influenced India's culture & economy.
Have congratulated Ram Charan on the Oscar win for the Naatu-Naatu song and the phenomenal success of the 'RRR'. pic.twitter.com/8uyu1vkY9H
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
- இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
புதுடெல்லி:
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆா்ஆா்ஆா் திரைப்படம், கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இதற்கிடையே, ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) பிரிவில் ஆஸ்கர் விருது வென்றது.
இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை ராகுல் மற்றும் கால பைரவா பாடினர்.
ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்ற நிலையில் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலில் நடனமாடிய ஆர்.ஆர்.ஆர். திரைப்பட நடிகர் ராம் சரணை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து, வாழ்த்தினார். இந்தச் சந்திப்பின்போது ராம் சரணுடன் அவரது தந்தை சிரஞ்சீவி உடன் இருந்தார்.
- கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள்.
- தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
கேரள மக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். கம்யூனிஸ்டுகளின் வன்முறை அரசியலையும் அவர்கள் ஏற்கவில்லை. இது எனக்கு நன்றாக தெரியும்.
கேரள மாநில மக்களை பாதுகாக்கவே மத்தியில் ஆளும் மோடி அரசு பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை விதித்தது. இது தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை.
ஆனால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதால் இதனை விரும்பவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சுரேஷ் கோபியும் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:
திருச்சூர் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிட தயாராக இருக்கிறேன். இல்லையேல் கம்யூனிஸ்டுகள் பலம் வாய்ந்ததாக கருதும் கண்ணூர் தொகுதியிலும் போட்டியிட நான் தயார் என்றார்.
திருச்சூர் தொகுதியில் சுரேஷ் கோபி ஏற்கனவே போட்டியிட்டு தோல்வியை தழுவி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்.
3 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா பெற்ற வெற்றிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வடகிழக்கு பகுதிக்கு இது வரலாற்று சிறப்புமிக்க நாள். பா.ஜனதா மீது மீண்டும் ஒருமுறை நம்பிக்கை வைத்ததற்காக திரிபுரா மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜனதா முன்னெடுத்த வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி.
வளர்ச்சி மற்றும் வளமைக்காக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதாதான், மக்களின் முதல் விருப்பம் என்பது நிரூபணமாகி விட்டது.
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் தேர்ந்தெடுத்த மக்களுக்கு இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன். மேகாலயா மக்களுக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும் என அமித்ஷா கூறினார்.
- பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சம்பாரன் பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது:
பீகார் மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பீகாரில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
முதல் மந்திரி நிதிஷ்குமாருக்கு பீகார் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும்.
பீகார் மாநிலத்திற்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
மத்திய மந்திரிகளாக இருந்த நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் பீகாருக்கு செய்தது என்ன?
காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து வந்த முதல் மந்திரி நிதிஷ்குமார், பிரதமர் பதவி மீது கொண்ட பேராசை காரணமாக சோனியாவிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, லாலுவின் ஜாதி வெறி மற்றும் ஊழல் அரசியலுக்கு எதிராக போராட வேண்டிய நிதிஷ்குமார் பிரதமர் பதவி மோகத்தில் லாலுவின் மடியில் அமர்ந்துள்ளார் என குற்றம்சாட்டினார்.
- காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார்.
- பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா தேசிய தலைவர்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், பல்லாரி மாவட்டம் சண்டூரில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபைக்கு நடைபெறும் தேர்தலில் பா.ஜனதாவை மக்கள் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி கிடைத்தால், தென்னிந்தியாவில் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். ராகுல்காந்தி கூட்டத்தை கூட்டிக் கொண்டு நாட்டை பிளவுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பான அரசு செயல்பட்டு வருவதால், நாட்டை இணைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு நீங்கள் ஓட்டுப் போட்டால், அது காங்கிரஸ் கட்சிக்கு சென்று விடும்.
காங்கிரசுக்கு வாக்களித்தால், கர்நாடகத்தை ஏ.டி.எம்.மாக சித்தராமையா மாற்றி விடுவார். குடும்ப அரசியலில் ஈடுபடும் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சியினர், ஊழலிலும் மூழ்கி விட்டார்கள். குடும்ப அரசியலில் ஈடுபடும் கட்சிகளால் நாட்டின் வளர்ச்சி, மக்கள் பணிகளில் ஈடுபடுவது சாத்தியமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரசால், பாகிஸ்தானுக்கு அறிவுரை சொல்ல கூட முடியாமல் போனது.
பா.ஜனதா ஆட்சியில் தான் துல்லிய தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் எடியூரப்பா மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள். ஊழல் மற்றும் முறைகேடுகள் இல்லாத தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகம் மாற்றப்படும். பா.ஜனதாவுக்கு மாநில மக்கள் அபாரமான ஆதரவு அளித்து வருவது, இங்கு கூடி இருக்கும் மக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. கர்நாடகத்தில் காங்கிரசில் முதல்-மந்திரி பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. அவர்களால் கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சாத்தியமில்லை.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
- அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது.
- சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான்.
மும்பை :
தேர்தல் ஆணையம் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என அறிவித்தது. இதனால் கட்சியின் பெயர், சின்னத்தை முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கட்சி பறிகொடுத்துள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமையாக மாறி உள்ளது என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்தார். அவர் தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா வந்து இருந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, உத்தவ் தாக்கரேயை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்தநிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தான் மகாராஷ்டிராவின் முதல் எதிரி என உத்தவ் தாக்கரேயின் கட்சி நாளேடான 'சாம்னா' பத்திரிகையில் கடுமையாக தாக்கி எழுதப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சிவசேனாவின் பெயர், சின்னத்தை வாங்கிய பிறகு, தாமரையின் கால்கள் உடையும் வரை பா.ஜனதா ஆட்டம் போட்டது. ஏக்நாத் ஷிண்டே அணியை விட பா.ஜனதா தான் மகிழ்ச்சி அடைந்தது. டெல்லியின் கால் அடியில் விழுந்து கிடக்கும் மனநிலையில், தாக்கரேயால் உருவாக்கப்பட்டு, வளர்க்கப்பட்ட சிவசேனாவை தேர்தல் ஆணையம் ஒப்படைத்து உள்ளது.
சத்ரபதி சிவாஜி ஜெயந்தி அன்று ஷிண்டேக்கு சிவசேனா சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார். அமித்ஷாவின் கருணை இருந்ததால் ஷிண்டேக்கு சின்னம் கிடைத்தது. அதை தற்போது அவர் மறைக்கிறாரா?. இந்த மனிதர் (அமித்ஷா) மகாராஷ்டிரா, மகாராஷ்டிரா மக்களுக்கு முதல் எதிரி. தங்கள் சொந்த ஆசைகளை அமித்ஷாவுக்கு பின்னால் நின்று மறைப்பவர்களும் மகாராஷ்டிராவின் எதிரிகள் தான். சிவசேனா இப்பொழுதும், எப்போழுதும் தாக்கரேக்கு சொந்தமானது தான். மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்கவும். வில், அம்பு சின்னத்தை வாங்கவும் ரூ.2 ஆயிரம் கோடி பேரம் நடந்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.