search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்லாதபடி போலீசார் தடுப்பு அமைத்துள்ளதை படத்தில் காணலாம்
    X
    திருவண்ணாமலை-செங்கம் சாலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் செல்லாதபடி போலீசார் தடுப்பு அமைத்துள்ளதை படத்தில் காணலாம்

    திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ரத்து: ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பக்தர்கள்

    ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கோவிலில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பல்வேறு விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதத்தில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பஸ் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் விடப்பட்டு உள்ளதால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் கிரிவலமும் சென்று வருகின்றனர்.

    இந்த நிலையில் போக்குவரத்து அனைத்தும் விடப்பட்டு உள்ளதால் இந்த மாத பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 1.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 2.55 மணிக்கு நிறைவடைந்தது. மாவட்ட நிர்வாகம் கொரோனா ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நடைமுறையில் இருப்பதால் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதித்தது. அதனை தொடர்ந்து கிரிவலப்பாதையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

    மேலும் வெளியூரில் இருந்து கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் கிரிவலம் செல்ல முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். போலீசார் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர். கிரிவலப் பாதையில் நேற்று மக்கள் யாரும் கிரிவலம் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×