என் மலர்tooltip icon

    உலகம்

    • தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என வாலிபர் புலம்பி உள்ளார்.
    • விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர்.

    நடுவானில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் சக பயணி ஒருவருடன் திருமண சடங்கு ஒத்திகையில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் காட்டுத்தீபோல பரவி வருகிறது.

    வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணிக்கும் ஆண் பயணி ஒருவர் தான் மணமகன் என்றும் திருமணம் செய்துகொள்ள பயணிப்பதாகவும் சக பயணிகளுடன் கூறியுள்ளார்.

    மேலும் தனக்கு திருமண சடங்கில் பதற்றம் ஏற்பட்டால் என்ன செய்வது என புலம்பி உள்ளார். அப்போது அதனை கேட்ட விமான பணிப்பெண்கள் நடுவானிலேயே திருமண சடங்கு ஒத்திகையை அந்த வாலிபருக்காக ஏற்பாடு செய்தனர். விமான பணிப்பெண் ஒருவர் புதுபெண்போல அலங்கரிக்கப்பட்டு அந்த வாலிபருடன் திருமண சடங்கில் ஈடுபட்டார். பின்னர் இருவரும் முத்தங்களை பரிமாறி திருமண சடங்கை நிறைவு செய்தனர்.


    • சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும்.
    • போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    நடிகர் வடிவேலு நடித்த திரைப்படம் ஒன்றில் ஒரு காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதில் எந்த வேலையும் பார்க்காமல் சும்மா உட்கார்ந்து இருப்பவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

    இதேபோல் தென்கொரியாவில் அரசு சார்பில், சும்மா இருக்கும் போட்டி ஒன்றை நடத்தி வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி உள்ளது.

    இந்த போட்டியில் அந்த நாட்டின் ஒலிம்பிக் வீரர், பிரபல யூ டியூபர் உள்பட 117 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சரியாக 1½ மணிநேரம் (90 நிமிடங்கள்) செல்போன் பார்க்காமலும், யாரிடமும் பேசாமலும் கண்களை விழித்தவாறு சும்மாவே உட்கார வேண்டும். அவர்களின் இதய துடிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.


    பின்னர் போட்டியாளர்களில் 10 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் நிலையான இதயத்துடிப்புடன் உள்ளவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.

    • கடந்த வாரம் ரபா பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியதால் எல்லையை கடந்துசெல்லும் பகுதி மூடப்பட்டது.
    • ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் சிக்கிக்கொண்டனர்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேலைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தது. நூற்றுக்கணக்கானோரை பிணைக் கைதிகளாக சிறை பிடித்தது.

    போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இதற்கிடையே, ரபா பகுதியை கடந்த வாரம் இஸ்ரேலின் ராணுவம் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து காசாவின் ரபா நகரில் இருந்து எகிப்து செல்லும் எல்லைப்பகுதி மூடப்பட்டதால் வெளிநாட்டவர்கள் பலர் சிக்கிக் கொண்டனர்.

    இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், காசாவில் 20 அமெரிக்க டாக்டர்கள் சிக்கி இருந்தனர். அவர்களில் 17 அமெரிக்க டாக்டர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் வெளியேற விருப்பம் தெரிவித்தனர். காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என விரும்பியவர்கள் வெளியேறி வந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

    • தற்போது அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
    • கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன.

    அமெரிக்காவில் ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் அதிக ஆபத்து கொண்ட பொதைப்பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஹெராயின் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் கடத்தல் போன்ற சம்பங்களில் ஈடுபடுவோருக்கு அதிகமான தண்டனை வழங்கப்படுகிறது.

    கஞ்சா பயன்படுத்துவது தொடர்பான கைது நடவடிக்கை குறைந்த அளவே உள்ளன. இந்த நிலையில் கஞ்சாவை குறைந்த ஆபத்து கொண்ட போதைப்பாருள் என மறுவகைப்படுத்த ஜோ பைடன் தலைமையிலான அரசு முன்மொழிந்துள்ளது.

    இதனால் அமெரிக்காவில் இனிமேல் கஞ்சா பயன்படுத்துவது அதிகாரப்பூர்வாக்கப்படலாம் எனத எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில் "கஞ்சா (marijuana) பயன்படுத்தியதற்காக யாரும் சிறையில் இருக்கக்கூடாது. கஞ்சாவை அணுகுவதில் தோல்வியுற்றதால், பல உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த தவறுகளை சரிசெய்வதில் நான் உறுதியாக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.
    • முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டோவா. இந்நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள சிறிய கிராமம் தான் உஸ்தியா. இந்த கிராமத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயங்களுடன் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிறகு, மூதாட்டி உயிரிழப்பு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போது, அந்த இளைஞர் மதுபோதையில் மயக்க நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இளைஞர் கைதை தொடர்ந்து ஆதாரங்களை சேகரிக்க போலீசார் வீட்டை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது வீட்டின் பின்புறம் யாரோ உதவி கேட்கும் குரல் போலீசாருக்கு கேட்டது. எங்கிருந்து குரல் வருகிறது என போலீசார் தேடினர். சிறிது நேரத்தில் உதவி கேட்கும் குரல் மண்ணுக்குள் இருந்து வந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். அதன்பின், சம்பவ இடத்தை குழி தோண்டும் பணியில் போலீசார் இறங்கினர். அப்போது 62 வயது முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

    உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரை மீட்ட போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மீட்கப்பட்ட முதியவரும், போலீசார் சற்று முன் கைது செய்த 18 வயது இளைஞரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஒன்றாக இணைந்து மது அருந்தியுள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

    உடனே முதியவரை கடுமையாக தாக்கிய இளைஞர் அவரை கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்போது மயக்கமடைந்த முதியவரை, அந்த இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள கீழ்தளத்தில் மறைத்துவைத்துள்ளார். அதன்பிறகு இளைஞர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி, முதியவரை அதில் தள்ளி புதைத்துள்ளார். மது போதையில் முதியவர் உயிருடன் புதைக்கப்பட்டு, நான்கு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.
    • எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினியை கட்டுப்படுத்தலாம்.

    உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவர் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் நியூராலிங்க் என பல்வேறு நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார். இவரது நியூராலிங்க் நிறுவனம் கை, கால் போன்ற உடல் உறுப்புகள் செயலிழந்தவர்கள் மொபைல், கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலம் இயக்க செய்யும் சிப் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.

    இந்த சிப் மனித மூளையில் பொருத்தி கொண்டால், பயனர்கள் கை, கால் உதவியின்றி எண்ணங்களாலேயே கர்சர் மூலம் மொபைல் போன் மற்றும் கணினி உள்ளிட்டவைகளை இயக்கிவிட முடியும். முதற்கட்டமாக விலங்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் நியூராலிங்க் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்தி சோதனை செய்வதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்தது.

    அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் நியூரிங்க் உருவாக்கிய டெலிபதி சிப் நோலன் ஆர்பா என்ற நபரின் மூளையில் பொருத்தப்பட்டது. இந்த நிலையில், டெலிபதி சிப் பொருத்திக் கொள்ள இரண்டாவது நபர் தற்போது விண்ணப்பிக்கலாம் என்று நியூராலிங்க் அறிவித்து இருக்கிறது.

    "எங்களின் டெலிபதி சைபர்நெடிக் சிப் கொண்டு நீங்கள் உங்களது மொபைல் போன் மற்றும் கணினி போன்ற சாதனங்களை எண்ணங்கள் மூலமாகவே கட்டுப்படுத்த முடியும்," என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், மூளையில் சிப் பொருத்திக் கொண்ட நோலன் தனது அனுபவத்தை இரண்டாவதாக சிப் பொருத்திக் கொள்பவரிடம் தெரிவிப்பார்.

    இம்மாத துவக்கத்தில் சிப் பொருத்தி 100 நாட்களை கடந்த நிலையில் நோலன், தற்போது எண்ணங்கள் மூலமாக மொபைல் போன், கணினி மற்றும் ஐபேட் உள்ளிட்டவைகளை இயக்கி கேம்களை விளையாடுவதோடு பிரவுசிங் செய்கிறார்.

    • உக்கரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
    • சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் இரண்டு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் ரஷ்யா எந்த சமரசமுமின்றி தொடர்ந்து போரை முன்னெடுத்து வருகிறது. உக்ரைனும், மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

    இந்த நிலையில் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்திக்க சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அங்கு உரையாற்றுகையில், ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் உக்ரைன் சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் தொடர் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    மேலும் ரஷ்ய படை திட்டமிட்டபடி உக்ரைனுக்குள் தொடந்து முன்னேறி வருவதாகவும், கார்கிவை கைப்பற்றுவது தங்களின் நோக்கமில்லை என்றும் தெரிவித்தார். அதற்கு பதிலாக இரண்டு நாடுகளுக்கும் பொதுவானதொரு இடைப்பட்ட பாதுகாப்பு பகுதியை ( BUFFER ZONE) உருவாக்குவதே தங்களின் திட்டமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

    மேற்கு நாடுகளின் ஒன்றிணைந்த நேட்டோ நாடுகளில் உக்ரைன் சேரும் பட்சத்தில் உக்ரைன் வழியாக எளிதில் ரஷ்யாவுக்குள் நேட்டோ படைகள் வந்துவிடும் என்ற அச்சுறுத்தல் இருப்பதாலேயே இந்த போர் நடந்து வருகிறது. எனவே இரண்டு நாடுகளுக்குமாக BUFFER ZONE உருவாகும் பட்ச்சத்தில் இந்த அச்சுறுத்தல் விலகும் என்பதாலேயே ரஷ்யா இந்த போரை அதை நோக்கி கொண்டு செல்வதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

    முன்னதாக சீனா சென்றுள்ள ரஷ்ய அதிபர் புதின், அந்நாட்டு அதிபர் ஜீ ஜிங் பிங்கை சந்தித்து பேசி, போரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது பற்றியும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

    • அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    தைவான் நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த வாக்கெடுப்பின்போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பு சண்டையாக மாறி தைவான் பாராளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்தது. அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டனர். தைவானில் பிரதான எதிர்க்கட்சியான KMT கட்சி மற்றோரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் DPP கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.

    இன்னும் சில நாட்களில் ஜனாதிபதியாக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே அரசை பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரம் வழங்குதல், அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட KMT கட்சி முயன்றதே இந்த கைகலப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

     

    தைவான் நானடாளுமன்றத்தில் கைகலப்பு நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு KMT கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

     

    • அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது.
    • விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மற்றும் இண்டியானா மாகாணங்களுக்கு இடையே போக்குவரத்துக்கான இணைப்பு பாலமாக கிளார்க் மெமோரியல் பாலம் உள்ளது. ஓஹியோ நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள கிளார்க் பாலத்தை செகென்ட் ஸ்ட்ரீட் பாலம் என்றும் அழைக்கின்றனர்.

    இந்த பாலத்தில் கடந்த மார்ச் 18 ஆம் தேதி டிரக் ஒன்று எதிரில் வந்த கார் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு ஆற்றை நோக்கி பாய்ந்து அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்து சம்பவத்தில் மீட்புக்குழு விரைந்து செயல்பட்டதால் அதிர்ஷ்டவசமாக பெண் ஓட்டுநர் உயிர்தப்பினார்.

    சினிமாவில் வரும் கட்சிகளுக்கு இணையாக இந்த விபத்து மற்றும் மீட்புப் பணி தொடர்பான காட்சிகள் அந்த சமயத்தில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் விபத்துக்குள்ளான டிரக்கில் பொருத்தப்பட்டிருந்த டாஸ் காம் கேமராவில் விபத்துக்கு சில நொடிகளுக்கு முன் ஓட்டுநர் டிரக்கை இயக்கிய காட்சிகளும் பாலத்தின் பக்கவாட்டு தடுப்பை உடைத்துக்கொண்டு டிரக் ஆற்றை நோக்கி பாயும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

    விபத்தை மிக அருகில் இருந்து அது எப்படி நடக்கிறது என்பதை விறுவிறுப்பான இந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. இதனால் இந்த வீடியோ X தளத்தில் 13 மில்லியன் பார்வைகளைத் தாண்டி வைரலாகி வருகிறது. டாஸ்காம் என்பது கார், டிரக் உள்ளிட்ட வாகனங்களில் விண்ட் ஸ்க்ரீனில் பொருத்தப்படும் வீடியோ பதிவு செய்யும் கருவி என்பது குறிப்பிடத்தக்கது.

    • இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும்.
    • சர்வதேச விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும்.

    2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப்போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் (தற்போது அவர் உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்டரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது). பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த இலங்கை ராணுவம் கூறியதுடன் ஈழ இறுதிப்போர் முடிவுக்கு வந்தது.

    இந்த போரின்போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. போருக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் வசித்த இடங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இளைஞர்களை பிடித்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

    இந்த நிலையில் ஈழ இறுதிப்போர் தொடர்பாக ஐ.நா. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் "இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும். போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும்.

    காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியில் சீர்திருத்தங்களை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளில் நீடிக்க அனுமதிக்க கூடாது. தொடர்புடையவர்களை பெரிய பதவிகளில் நியமிக்கவும் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றும் கனக் பழங்குடியினர் 3 பேர் கொல்லப்பட்டனர்.
    • 2 விமான நிலையங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

    கலிடோனியா:

    பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் தீவு கூட்டமான நியூகால டோனியா அமைந்துள்ளது. பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வரும் இந்த மாகாணத்தில் சுமார் 2.7 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் நீண்ட காலமாக அடக்கு முறைக்கு ஆளாகி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்த நிலையில் நியூகால டோனியாவில் 10 ஆண்டுக்கு மேலாக வசித்து வருபவர்கள் அந்த பிரதேச தேர்தலில் வாக்களிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட்டது.

    இந்த சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட திருத்தத்துக்கு அங்குள்ள கனக் பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதனால் தங்கள் உரிமைகள் புறக்கணிக்கப்படும் எனக்கூறி அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

    அதே சமயம் மற்றொரு பிரிவினர் இந்த சட்டதிருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறியது.

    பிரான்சு ஆதரவு கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகளும் கொளுத்தப்பட்டன. இதனால் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

    இந்த கலவரத்தில் ஒரு போலீஸ்காரர் மற்றும் கனக் பழங்குடியினர் 3 பேர் கொல்லப்பட்டனர். இதனால் நிலைமை இன்னும் மோசமானது.

    இதையடுத்து கலவரத்தை ஒடுக்க நியூகாலடோனியாவில் அவசர நிலை பிறப்பித்து பிரான்சு அரசு உத்தரவிட்டது. தலைநகர் நவுமியாவில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவைகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த அவசரநிலை பிரகடனம் வருகிற 12-ந் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதலாக ராணுவ படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    அங்குள்ள 2 விமான நிலையங்கள் பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

    • பலமுறை மோசடி காலர்களை அவர் அலறவிட்டுள்ளார் எனக்கூறிய பும்மாவின் பேத்தி இதுதொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
    • வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மோசடிகள் பல்வேறு வகைகளிலும் நடைபெறுகிறது. செல்போனுக்கு வரும் சில அழைப்புகளில் பேசுபவர்கள் நூதனமாக பேசி வங்கி கணக்கு எண்ணை பெற்று அதன் மூலம் மோசடிகளை அரங்கேற்றி வருகிறார்கள்.

    போலீசார் எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடிக்காரர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி பணத்தை பறிகொடுக்கும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அவ்வாறு நூதன மோசடியில் ஈடுபடுபவர்களையும் பும்மா என்று அழைக்கப்படும் 92 வயது மூதாட்டி ஒருவர் அலறவிட்டுள்ளார்.

    அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியை சேர்ந்த 92 வயது மூதாட்டி ஒருவருக்கு இதுபோன்று மோசடிக்காரர் ஒருவர் போன் செய்து பேசி உள்ளார். அவரை வெறுப்பேத்தும் வகையில் மூதாட்டி பேசிய வீடியோவை அவரது பேத்தி செய்யேனி தோனி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து பும்மாவின் பேத்தி கூறுகையில், எனது பாட்டி பிறரை சிரிக்க வைக்கும் குணம் படைத்தவர். அவர் எங்களுக்கு ஏராளமான பொழுதுபோக்குகளை தருவார். ஒருமுறை மோசடி காலர் அவரிடம் போன் செய்த போது, 'என்னை யாரோ கடத்தப்போகிறார்கள் என்று நினைக்கிறேன். உனக்கு தெரியுமா? ஜீசஸ் கூடிய விரைவில் வருகிறார். அவர் என்னை மேகங்களோடு அழைத்து செல்லப்போகிறார். நீ செல்வதற்கு தயாராக உள்ளாயா?' என்று கேட்டார். இதைக்கேட்ட மோசடி காலர் உடனே போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதுபோன்று பலமுறை மோசடி காலர்களை அவர் அலறவிட்டுள்ளார் எனக்கூறிய பும்மாவின் பேத்தி இதுதொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×