search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட தலிபான், நிராகரித்த ஆப்கானிஸ்தான் அரசு
    X

    ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட தலிபான், நிராகரித்த ஆப்கானிஸ்தான் அரசு

    ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக ரஷியா விடுத்த அழைப்பை தலிபான்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பை நிராகரித்துள்ளது. #Afghanistan #Taliban
    காபுல் :

    முன்னர் சோவியத் யூனியனாக இருந்த தற்போதைய ரஷியா, ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் குழாய் பதிப்பதற்காக ஆப்கானிஸ்தானை பகடைகாயாக பயன்படுத்தி அந்நாட்டிற்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியனை வெளியேற்ற திட்டம் தீட்டியது.

    இதனால், பாகிஸ்தானின் மதரசாக்களில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு அமெரிக்காவின் துணையோடு ஆயுதப் பயிற்சி அளித்து சோவியத் யூனியன் படைகளை எதிர்த்துப் போரிடத் தயார் செய்தது பாகிஸ்தான் அரசு. அவர்களே பின்னாளில் தலிபான்களாக மாறினர்.

    தலிபான்கள் என்றால் மாணவர்கள் என்று அர்த்தம். பின்னர், 90-களில் அவர்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு  அமெரிக்கா தொடர்ந்து அவர்களுக்கு உதவி செய்து வந்தது. இந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கையில் சிக்கி நாடு சின்னாபின்னாமானது. ஆனால், தலிபான்களின் மனித உரிமை மீறல் கொடுமைகளை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை. ஆனால், இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு பிறகுதான் அமெரிக்காவிற்கு எதிரியாக மாறிப்போனது தலிபான் அமைப்பு.

    அப்போது முதலாக ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே சுமார் 17 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பகுதிகளை பிடித்து வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள் தினம்தோறும் பாதுகாப்பு படையினருடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வருகின்றனர்.

    அவ்வப்போது ஆப்கானிஸ்தான் அரசு அறிவிக்கும் போர் நிறுத்தங்களுக்கும் சம்மதிக்காமல் ரத்த வெறியுடனே தலிபான் பயங்கரவாதிகள் சுற்றித் திரிந்தனர். சமீபத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மீண்டும் ஒரு இடைக்கால போர்நிறுத்தத்துக்கு அதிபர் அஷ்ரப் கானி கடந்த 19-ம் தேதி அழைப்பு விடுத்தார். ஆனால் அதை தலிபான்கள் நிராகரித்தனர்.



    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

    ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் இதில், மூன்றாவது நபரின்(நாட்டின்) தலையீடு தேவையில்லை என அந்நாடு ரஷியாவிற்கு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தான் அரசு அழைக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் வேண்டுமானால் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க தலிபான் அமைப்புக்கு ரஷியா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் என கூறி ரஷியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

    இதற்கிடையே, ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள் அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு ரஷியா வான்வழி உதவிகளை வழ்ங்கி வருகிறது என சமீபத்தில் அமெரிக்க தளபதி ஒருவர் குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Afghanistan #Taliban
    Next Story
    ×