என் மலர்tooltip icon

    உலகம்

    • லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
    • 2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.

    தென் கொரியாவில் அதிபராக இருந்த யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி திடீரென்று அவசர ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்தார்.

    இதற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அச்சட்டத்தை திரும்ப பெற்றார். இதையடுத்து பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் தற்காலிக அதிபராக ஹான் டக்-சூ நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே தென் கொரியாவில் ஜூன் 3-ந் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    இதில் எதிர்க்கட்சியான லிபரல் கட்சி வேட்பாளர் லீ ஜே மியூங்க் 49.20 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார். இதன்மூலம் அவர் தென் கொரியாவின் புதிய அதிபர் ஆகிறார்.

    அவருக்கு அடுத்தபடியாக மக்கள் கட்சி தலைவர் கிம் மூன் சூவுக்கு 41.46 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    இதற்கிடையில் புதிய அதிபராக நேற்று பதவியேற்ற லீ ஜே மியூங்க், நீண்ட கால பகையாளி ஆன வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்த விழைந்துள்ளார்.

    வெற்றிபெற்ற பின்பு பேசிய மியூங்க், "வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை மூலம் நாட்டை ஒன்றிணைக்க பாடுபடுவேன். மற்றொரு இராணுவ சதி அல்லது இராணுவச் சட்ட நெருக்கடி மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வேன்" என உறுதியளித்தார்.

    61 வயது வழக்கறிஞரான லீ ஜே மியூங்க், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, சியோங்னாமின் மேயராக எட்டு ஆண்டுகளும், கியோங்கி மாகாணத்தின் ஆளுநராக மூன்று ஆண்டுகளும் பணியாற்றினார்.

    2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில், யூன் சுக்-இயோலிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும், தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்து செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார்.

    2024 ஆம் ஆண்டு, லீ ஜே-மியுங் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டார், ஆனால் உயிர் பிழைத்தார்.

    இராணுவச் சட்ட நெருக்கடியின்போது, லீ ஜே-மியுங் உட்படப் பல அரசியல்வாதிகள் தேசிய சட்டமன்றத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

    அப்போது, அவர் தேசிய சட்டமன்றத்தின் சுவர்களில் ஏற முயன்ற காட்சி வைரலானது, மேலும் அதைத் தொடர்ந்து இராணுவச் சட்டம் நீக்கப்பட்டது.

    • சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது.
    • இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. துல்லியமான இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

    இதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ஆயுதச் சண்டை நடைபெற்றது. பின்னர் இருநாட்டின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சண்டை நிறுத்தப்பட்டது.

    இந்த சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. ஆனால் இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்த முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாவது:-

    சண்டை நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு தரப்புகளிலும் இருந்தும் படைகளை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, என்னுடைய கருத்தின்படி புதிய சண்டைக்கு வாய்ப்பு இல்லை. எனினும், இந்தியா ஆயுத சண்டையை மீண்டும் தொடங்கினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

    நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால், அதற்காக விருப்பப்படவில்லை. பயங்கரவாதி, சிந்து நதி நீர் பிரச்சினை உள்ளிட்ட மற்ற பிரச்சினைகள் தொடர்பாக கூட்டு பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நாடுகிறது. சிந்து நதி நீர் பிரச்சினையை சஸ்பெண்ட் செய்ய முடியாது.

    இவ்வாறு இஷாக் தர் தெரிவித்தார்.

    • ஐ.எஸ்.ஐ.- ரா இணைந்து செயல்பட்டால் பயங்கரவாதத்தை குறைக்க முடியும்.
    • இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது.

    பாகிஸ்தான்- இந்தியா இடையிலான புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு, தெற்காசியாவில் குறிப்பிடத்தகுந்த வகையில் பயங்கரவாதத்தை குறைக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பிலாவல் கூறியதாவது:-

    ஐ.எஸ்.ஐ. (பாகிஸ்தான் புலனாய்வு). ரா (RAW- இந்திய புலனாய்வு) பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து பணியாற்ற தயாராக இருந்தால், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் போதுமான அளவு பயங்கரவாதம் குறைவதை நம்மால் பார்க்க முடியும. இதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

    இந்தியா- பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா முக்கிய பங்காற்றியது. இந்த முதல்படியை நான் வரவேற்கிறேன். ஆனால், இது முதல்படி மட்டும்தான்.

    200 மில்லியன் மக்களின் நீர் விநியோகத்தை துண்டிப்பதாக மிரட்டுவது ஐ.நா. சாசனத்தை மீறுவதாகும். இந்த அச்சுறுத்தல், பாகிஸ்தானால் போர் நடவடிக்கையாக கருதப்படும்.

    இவ்வாறு பிலாவல் பூட்டோ-சர்தாரி தெரிவித்துள்ளார்.

    • குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடந்தன.
    • பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்தது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை எடுத்தது.

    இந்த நடவடிக்கை தொடர்பாகவும், பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது தொடர்பாகவும் உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு அனுப்பியது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசினர்.

    இதில் ஜே.டி.யு. கட்சி எம்.பி. சஞ்சய் ஜா தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அபராஜிதா சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பருவா, ஹேமங் ஜோஷி, திரிணாமுல் கட்சியின் அபிஷேக் பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஜான் பிரிட்டாஸ், காங்கிரசின் சல்மான் குர்ஷித், முன்னாள் தூதர் மோகன்குமார் ஆகியோர் அடங்கிய குழு மலேசியாவுக்கு சென்றது.

    இந்த நிலையில் இந்திய எம்.பி.க்கள் குழுவின் மலேசிய பயணத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இந்திய பிரதிநிதிகளின் அனைத்து பயண திட்டங்களையும் ரத்து செய்யுமாறு மலேசியாவை பாகிஸ்தான் வலியுறுத்தியது.

    இதுதொடர்பாக மலேசிய அரசாங்க அதிகாரிகளிடம் பாகிஸ்தான் தூதரகம், நாங்கள் ஒரு இஸ்லாமிய நாடு, நீங்கள் ஒரு இஸ்லாமிய நாடு. இந்திய பிரதிநிதிகளின் பேச்சைக் கேட்காதீர்கள். மலேசியாவில் அவர்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்யுங்கள் என்று தெரிவித்தது.

    மேலும் காஷ்மீர் விவகாரத்தையும் மேற்கோள் காட்டி தனது கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா திட்டவட்டமாக மறுத்து விட்டது.

    மேலும் இந்திய குழுவுக்கு மலேசியா முழு ஆதரவு அளித்தது. அக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடந்தன. மலேசிய பாராளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை சபாநாயகர் ஒய்.பி. டான் ஸ்ரீ டத்தோஜோஹாரி பின் அப்துல்லை இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்து பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து விளக்கியது. மேலும் மலேசிய எம்.பி.க்களையும் சந்தித்து பேசியது. பாகிஸ்தானின் கோரிக்கையை மலேசியா நிராகரித்தது இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    • புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு அவர் கடத்தி வந்துள்ளார்.
    • இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அமெரிக்காவுக்கு ஆபத்தான உயிரியல் நோய்க் கிருமியை கடத்தியதாக சீனாவை சேர்ந்த 2 ஆராய்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை அமெரிக்க எப்.பி.ஐ இயக்குனர் காஷ் பட்டேல் உறுதிப்படுத்தினார்.

    அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் சீனாவை சேர்ந்த யுன்கிங் ஜியான் என்ற பெண் பணிபுரிந்து வந்தார். இவரது காதலரும் சீனாவில் ஆராய்ச்சியாளருமான ஜூன்யோங் லியு, தனது காதலியை பார்க்க அமெரிக்காவுக்கு வந்து உள்ளார்.

    அப்போது அவர் புசேரியம் கிராமினேரம் என்ற உயிரியல் நோய்க்கிருமியை அமெரிக்காவுக்கு கடத்தி வந்துள்ளார். இந்த நோய்க்கிருமியை மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆய்வு செய்து மேலும் மேம்படுத்த திட்டமிட்டு இருந்தனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்த நோய்க்கிருமி விவசாய பயங்கரவாத ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் புசேரியம் கிராமினேரமின் நச்சுகள் மனிதர்கள் மற்றும் கால்நடைகளில் வாந்தி, கல்லீரல் பாதிப்பு மற்றும் இனப்பெருக்க குறைபாடுகளையும் ஏற்படுத்தும்.

    இதுகுறித்து எப்.பி.ஐ. இயக்குனர் காஷ் பட்டேல் கூறியதாவது:-

    யுன்கிங் ஜியான் என்பவர் தான் பணிபுரியும் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்வதற்காக புசாரியம் கிராமிநேரம் என்ற ஆபத்தான பூஞ்சையை அமெரிக்காவிற்குள் கடத்தி உள்ளார். இந்த பூஞ்சை கோதுமை, பார்லி, சோளம் மற்றும் அரிசி விளைச்சலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் கோடிக் கணக்கான டாலர்கள் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்திவிடும். ஜியானின் காதலன் சீனாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். அங்கு அவர் இந்த நோய்க்கிருமி குறித்து ஆராய்ச்சி நடத்துகிறார்.

    முதலில் குற்றச்சாட்டை மறுத்த அவர் பின்னர் அமெரிக்காவுக்கு நோய்க் கிருமியை கடத்தியதை ஒப்புக்கொண்டார். யுன்கிங் ஜியான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருந்துள்ளார். அவர் இந்த நோய்க்கிருமி குறித்த ஆராய்ச்சிக்காக சீன அரசாங்கத்திடமிருந்து நிதி பெற்ற ஆதாரங்கள் உள்ளன என்றார்.

    சீன ஆராய்ச்சியாளர்கள் மீது சதித்திட்டம், அமெரிக்காவிற்குள் பொருட்களை கடத்துதல், தவறான கருத்துக்களை வெளியிட்டது மற்றும் விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள

    • பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.
    • படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அபுஜா:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய போகோ ஹரம் உள்ளிட்ட பயங்கரவாதிகள் பொதுமக்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்தும் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

    15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு அட்டூழியம் செய்து வரும் இந்த பயங்கரவாத அமைப்பினர் இதுவரை ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை அவர்களது வீடுகளில் இருந்து விரட்டியடித்து உள்ளனர்.

    எனவே பயங்கரவாத குழுக்கள் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. இதனை கட்டுப்படுத்த ராணுவம் பல்வேறு நடவடிக்கை எடுத்தும் தொடர்ந்து தாக்குதல் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் போர்னோ மாகாணம் மைராரி பஸ் நிலையத்தில் பலர் நின்று கொண்டிருந்தனர். அங்கு பஸ் வந்ததும் பயணிகள் பலர் அதில் ஏற முயன்றனர். அப்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

    இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
    • தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உலன்பட்டர்:

    மங்கோலியாவில் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் தலைமையிலான மங்கோலிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவரது மகன் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதற்கிடையே அவர் தனது காதலியுடன் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூகவ லைதளங்களில் வைரலாகின. இதில் விலை உயர்ந்த பேக் மற்றும் ஏராளமான பைகள் இருந்தன. இது பெரும் விவாத பொருளான நிலையில் பிரதமர் பதவி விலக கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் பிரதமர் லவ்சன்னம்ஸ்ரைன் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.

    தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் போதிய பெரும்பான்மையை அவர் பெறவில்லை. எனவே தனது பதவியை லவ்சன்னம்ஸ்ரைன் ராஜினாமா செய்துள்ளார்.

    • இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
    • சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனாவை உறவினர்கள் எதிர்த்தனர்.

    பாகிஸ்தானில் டிக்டாக் நட்சத்திரம் சனா யூசுப் (17) சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத ஒரு ஆசாமி அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

    கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ராலைச் சேர்ந்த சனாவுக்கு டிக்டோக்கில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவரது வீடியோக்கள் ஏராளமான பின்தொடர்பவர்களைப் பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் மட்டும் சனாவுக்கு 500,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. சமூக ஊடகங்களில் தீவிரமாக இருந்ததற்காக சனா தனது உறவினர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது ஒரு கௌரவக் கொலை என்றும் சந்தேகிக்கப்படுதுகிறது.

    சில மாதங்களுக்கு முன்பு, குவெட்டாவைச் சேர்ந்த ஹிரா என்ற 15 வயது சிறுமி டிக்டோக்கில் தீவிரமாக இருந்ததற்காக அவரது தந்தை மற்றும் மாமாவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    2016 ஆம் ஆண்டில், சமூக ஊடக நட்சத்திரம் கந்தீல் பலோச் அவரது சகோதரரால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சகோதரருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    • பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • கராச்சி சிறையில் இருந்து 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றனர்.

    கராச்சி:

    பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் குழப்பம் ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 1000க்கும் மேற்பட்ட கைதிகள் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது கைதிகளில் ஒரு குழுவினர் திடீரென கதவைத் திறந்துகொண்டு தப்பிச்சென்றனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் கைதி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 3 சிறைத்துறை அதிகாரிகள், ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர்.

    விசாரணையில், 216 கைதிகள் தப்பிச் சென்றது தெரியவந்தது. அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் சுமார் 80 கைதிகளை சிறைபிடித்தனர். தப்பியோடிய கைதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சிந்து மாகாண அதிகாரிகள் கூறுகையில், நிலநடுக்கத்தால் சிறையின் சுவரில் விரிசல் ஏற்பட்டது. சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பினர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என தெரிவித்தனர்.

    • கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.
    • இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    ஐ.டி. நிறுவனங்கள் மீண்டும் தங்கள் ஊழியர்களை குறைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, AI-ஐ பயன்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் தேவையற்ற நிர்வாக ஊழியர்களை குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாக கூறி கடந்த மாதம் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1985 பேர் வாஷிங்டனை சேர்ந்தவர்கள்.

    இந்த நிலையில், நேற்று 300-க்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.

    மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றி பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக கடந்த மாதம் மைக்ரோசாப்ட் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து இம்மாதமும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சுமார் 2,28,000 முழுநேர ஊழியர்கள் இருந்தனர். அவர்களில் 55% பேர் அமெரிக்காவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சேமிப்பை விட 14,888 கனஅடி குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
    • இரண்டு முக்கிய அணைகளில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு பற்றாக்குறை உள்ளது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

    பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஜூன் 2, 2024 உடன் ஒப்பிடும்போது, ஜூன் 2, 2025 நிலவரப்படி, சிந்து நதி நீர் அமைப்பில் (பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குள்) கிடைக்கும் நீரின் சதவீதம் 10.3 சதவீதம் குறைந்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை வருவதற்கு இன்னும் நான்கு வாரங்கள் இருப்பதால், வரும் நாட்களில் நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையில், சிந்து நதி நீர் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் சிந்து நதி அமைப்பு ஆணையம் (IRSA), இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி நிலவரப்படி பஞ்சாப் மாகாணத்தில் 1,28,800 கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு இதே தேதியில் இருந்த நீர் சேமிப்பை விட 14,888 கனஅடி குறைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று அது தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் காரீப் பயிர் விதைப்பு பருவம், தென்மேற்கு பருவமழை ஜூலை இறுதி வரை பஞ்சாப் மாகாணத்தை அடைய வாய்ப்பில்லை. மேலும் கடுமையான வெப்ப அலைகள் ஆகியவற்றால் விவசாயத் துறை கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் ஆணையம் கூறியுள்ளது.

    இந்த கோடையில் நாட்டின் மொத்த நீர் ஓட்டத்தில் 21 சதவீத பற்றாக்குறையையும், இரண்டு முக்கிய அணைகளில் சுமார் 50 சதவீத நீர் இருப்பு பற்றாக்குறையையும் எதிர்கொள்வதாக பாகிஸ்தான் கடந்த மாதம் கூறியது. அணை அதிகாரிகள் மற்றும் நீர்ப்பாசன விநியோக கண்காணிப்பு நிறுவனங்கள் நீர்த்தேக்கங்களில் இருந்து தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

    • சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

    சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.

    கடந்த பேச்சுவார்த்தையிலும் போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    ×