என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

    இதில், ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.

    சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு பிரவீன் காந்தி உள்ளன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.

    கடந்த முறை இதேபோல் சர்ச்சியாக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அடக்கி வாசித்தார். அதே போல் பிரவீன் காந்தி அடக்கி வாசிப்பாரா இல்லை அடித்து விளையாடுவாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

    • 63 நாயன்மார்கள் குரு பூஜை செய்தருளிய காட்சி.
    • கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-20 (திங்கட்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தசி காலை 11.42 மணி வரை பிறகு பவுர்ணமி

    நட்சத்திரம் : பூரட்டாதி காலை 6.06 மணி வரை பிறகு உத்திரட்டாதி நாளை விடியற்காலை 5.03 மணி வரை பிறகு ரேவதி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம் : கிழக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம்

    இன்று பவுர்ணமி. அவிநாசி ஸ்ரீ அவிநாசி லிங்கேஸ்வரருக்கு பவுர்ணமி பூஜை, சிறப்பு ஆராதனை. 63 நாயன்மார்கள் குரு பூஜை செய்தருளிய காட்சி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

    நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோம வார அபிஷேகம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-நிம்மதி

    மிதுனம்-வெற்றி

    கடகம்-ஆசை

    சிம்மம்-வரவு

    கன்னி-சுகம்

    துலாம்- நன்மை

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- சுபம்

    மகரம்-நிறைவு

    கும்பம்-ஆதரவு

    மீனம்-போட்டி

    • தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
    • இட்லி கடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இட்லிக்கடை திரைப்படத்தை பாராட்டி பேசிய சீமான், "வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ், இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டுள்ளார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்" என்று தெரிவித்தார்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    ரிஷபம்

    முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    கடகம்

    உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் சிநேகமாவார்கள்.

    சிம்மம்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். கூட்டாளிகளால் பிரச்சனை உண்டு. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.

    கன்னி

    பொன்னான நாள். புதிய பாதை புலப்படும். கடிதப் போக்குவரத்து கனிந்த தகவலைத் தரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

    துலாம்

    வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் வெற்றி நடைபோடும். வருமானம் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகவே இருக்கும்.

    விருச்சிகம்

    மலை வலம் வந்து மகத்துவம் காண வேண்டிய நாள். நினைத்தது நிறைவேறும், பிரார்த்தனைகள் பலிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீராகும்.

    தனுசு

    இறை வழிபாட்டில் இதயத்தைச் செலுத்தும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். தொழில் சம்பந்தமாகப் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

    மகரம்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.

    கும்பம்

    வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வருமானம் திருப்தி தரும். குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மீனம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். பயணங்களை மாற்றி அமைப்பீர்கள்.

    • திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள மலைச்சரிவுகளில் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.
    • இந்த மலைச்சரிவுகளில் வெளிநாட்டினர் மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பீஜிங்:

    உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.

    இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
    • அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.

    அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.

    Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.

    அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.

    இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னருக்கு 3வது சுற்றில் காயம் ஏற்பட்டது.

    பீஜிங்:

    ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் 2 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர், நெதர்லாந்தின் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய சின்னர் முதல் செட்டை 7-6 (7-3) என வென்றார். இதற்கு பதிலடியாக கிரீக்ஸ்பூர் 2வது செட்டை 7-5 என வென்றார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் கிரீக்ஸ்பூர் 3-2 என முன்னிலை பெற்றிருந்தார். அப்போது சின்னருக்கு காயம் ஏற்பட்டதால் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கிரீக்ஸ்பூ வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    நடப்பு சாம்பியனான சின்னர் காயத்தால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    • உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை இந்தியா நடத்தியது.
    • இந்தப் போட்டியை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    புதுடெல்லி:

    உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியின் ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றன. 100-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2,200-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

    மொத்தம் 186 பதக்கங்களுக்காக போட்டிகள் நடந்தன. இதில், சர்வதேச பாரா தடகள வீரர்கள், உலக சாம்பியன்கள் மற்றும் இந்திய விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், போட்டியை நடத்திய இந்தியா 6 தங்கம், 9 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

    கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் நாடுகளை தொடர்ந்து உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை நடத்திய 4-வது ஆசிய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

    பதக்கப் பட்டியலில் பிரேசில் முதலிடமும், சீனா 2வது இடமும் பிடித்தன. இந்தியா 10வது இடத்தில் உள்ளது.

    • கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.
    • கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது என்றார் தினகரன்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் சம்பவத்துக்கு தவெக தலைவர் விஜய் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். தார்மீக பொறுப்பு என்பது குற்றத்தை ஏற்பதாக ஆகாது.

    அனைத்துக் கட்சிகளும் பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு நடத்துகிறோம். நம்மை மீறி தவறு நடப்பது இயல்புதான். அதற்கு அனைத்து, தலைவர்களையும் கைது செய்ய வேண்டிய சூழல் உருவாகும். இது பின்னாளில் திமுகவையும் பாதிக்கும்.

    கரூர் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினை உயர்த்திப் பேசவில்லை. உண்மையைப் பேசுகிறேன்.

    தவெக தலைவர் விஜய்யை கைது செய்தால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். பின்னாளில் இது அனைத்து அரசியல் கட்சிகளையும் பாதிக்கும்.

    தூத்துக்குடி சம்பவத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றனர். அப்போது அந்தத் துறைக்கு தலைவராக இருந்த பழனிசாமி பொறுப்பேற்றாரா?

    கரூர் சம்பவத்தை வைத்து தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பழனிசாமி. பழனிசாமி தலைமையை ஏற்று எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும்?

    தவெகவை கூட்டணிக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக கரூர் துயரத்திற்கு ஆட்சியாளர்கள்தான் காரணம் என குள்ளநரித்தனமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார் எடப்பாடி. நாகரீகம் இல்லாமல் கூட்டணி குறித்து பேசுகிறார். இந்த விவகாரத்தில் நடுநிலையாக இருங்கள்.

    2026 தேர்தலில் 4 முனை போட்டி நடக்கும். கரூர் சம்பவம் ஒரு விபத்துதான். இதில் யார் மீதும் பழிபோட முடியாது. 2026 தேர்தலில் பழனிசாமியின் துரோகத்தை வீழ்த்துவோம் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. 2 போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-0 என கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. டார்விஷ் 32 ரன்னும், செடிகுல்லா அடல் 28 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் சயீபுதின் 3 விக்கெட்டும், நவ்சம் அகமது, தன்ஜிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜிம் ஹசன்

    பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் சேர்த்தார்.

    சயீப் ஹாசன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 64 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், வங்கதேசம் 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-0 என முழுவதுமாகக் கைப்பற்றி அசத்தியது.

    • மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
    • இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி திங்கட்கிழமை பார்வையிடுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    கொழும்பு:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    இலங்கையின் கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 247 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஹர்லின் தியோல் 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்னும், பிரதிகா ராவல் 31 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 20 பந்தில் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 35 ரன்கள் அடித்து அசத்தினார்.

    பாகிஸ்தான் சார்பில் டயானா பெய்க் 4 விக்கெட்டும், பாத்திமா சனா, சாதியா இக்பால் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அந்த அணியின் சிட்ரா அமின் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்த அவர் 81 ரன்னில் அவுட்டானார். நடாலியா பர்வேஸ் 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 43 ஓவரில் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் கிராந்தி கவுட், தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டும், ஸ்நே ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ×