என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

    தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600

    06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000

    05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    07-10-2025- ஒரு கிராம் ரூ.167

    06-10-2025- ஒரு கிராம் ரூ.167

    05-10-2025- ஒரு கிராம் ரூ.165

    04-10-2025- ஒரு கிராம் ரூ.165

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    கரூர் கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    இதுகுறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    நீதிபதி அருணா ஜெகதீசன் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து, இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூருக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறப்புக்குழு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    • நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
    • அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

    அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

    இந்த நிலையில், 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார். 

    • சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததாக வழக்கு.
    • சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.

    இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் காலை முதலே துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சென்னையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    ரிஷபம்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.

    மிதுனம்

    முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

    கடகம்

    தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரும்.

    சிம்மம்

    யோகமான நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.

    கன்னி

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுதுச்செலவுகளால் வாட்டம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    துலாம்

    கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.

    விருச்சிகம்

    தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    தனுசு

    சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.

    மகரம்

    செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். பயணம் பலன் தரும்.

    கும்பம்

    யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.

    மீனம்

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

    • ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக சில விதிகளை ரெயில்வே வாரியம் விதித்துள்ளது. குறிப்பாக, ரெயில்களில் விபத்து ஏற்படுத்தும் வகையிலான பொருட்களை கொண்டு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

    அந்தவகையில், ரெயில்களில் எளிதில் தீப்பற்றும் பொருட்களான அடுப்புகள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், கழிப்பறை சுத்தம் செய்யும் அமிலம், டீசல், பெட்ரோல், சிகரெட் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை உள்ளது. இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. ஆனால், தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் வியாபாரிகள் மற்றும் பயணிகள் பட்டாசு உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

    ரெயில்களில் ஆபத்தான பொருட்களை எடுத்துச்செல்வது தண்டனைக்குரிய குற்றம் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லாமல் பயணிக்க வேண்டும் எனவும் தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பண்டிகை காலங்களில் இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், ஒவ்வொரு ஆண்டும் முன்னதாகவே ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் ரெயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியபோது, 'ரெயில்களில் பட்டாசு உள்பட தீ விபத்து ஏற்படுத்தும் பொருட்கள் கொண்டு செல்ல தடை உள்ளது. இதுகுறித்து பெரும்பாலான பயணிகளுக்கு விழிப்புணர்வு இருப்பதால் ரெயில்களில் எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் எடுத்து செல்வதில்லை. சிலர் பண்டிகை காலங்களில் விதிமுறைகளை மீறி பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து வருகின்றனர். இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிறது.

    எனவே, தடையை மீறி பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சென்று, முதல் முறையாக பிடிபட்டால் ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து, விதிமீறல்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்' என்றார்கள்.

    • காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது.
    • 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனராக வலம் வரும் ராஜமவுலி தற்போது மகேஷ்பாபு நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்காக கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் மகேஷ்பாபு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

    பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். காசியின் வரலாற்றை பேசும் கதைக்களமாக உருவாகி வரும் இப்படம் 2 பாகங்களாக வெளியாக இருக்கிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    இந்த படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கவுள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தவகையில் மகேஷ்பாபுவை தொடர்ந்து ராஜமவுலியுடன் அல்லு அர்ஜூன் கூட்டணி சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • திருமலைவாசன் நகர், அசோக் நகர், ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (08.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    ஆவடி : திருமலைவாசன் நகர், அசோக் நகர், பூம்புழில் நகர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் சாலை, ராமகிருஷ்ணா நகர், பாரதி நகர்.

    திருமுல்லைவாயல்: ஆர்ச் ஆன்டணி நகர், பொத்தூர் இன்டஸ்ட்ரீஸ்.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு புரட்டாசி-22 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : பிரதமை காலை 7.40 மணி வரை பிறகு துவிதியை பின்னிரவு 3.48 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.08 மணி வரை பிறகு பரணி

    யோகம் : மரண, சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்கு திருமஞ்சனம்

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி. ருத்தர பசுபதியார் குரு பூஜை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சனம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளிங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை தலத்தில் திருமஞ்சனம். கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.

    விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-பரிசு

    சிம்மம்-உற்சாகம்

    கன்னி-வரவு

    துலாம்- உயர்வு

    விருச்சிகம்-சாந்தம்

    தனுசு- லாபம்

    மகரம்-பயணம்

    கும்பம்-நற்செயல்

    மீனம்-புகழ்

    • டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் PIN (இரகசிய எண்) மூலம் நிதி மோசடிகள் மற்றும் அருகில் உள்ளவர்களால் திருட்டுத்தனமாக PIN பார்க்கப்படுவது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன.

    இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் இதை தடுக்க தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பருக்குப் பதிலாக பயோமெட்ரிக் அங்கீகார வசதி (Biometric Authentication) அறிமுகப்படுத்தப்படுகிறது.

    பயனர்கள் இனி PIN நம்பரை உள்ளீடு செய்வதற்கு மாற்றாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் (Face Recognition) மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்

    இந்த அங்கீகாரச் சரிபார்ப்புக்கு, ஆதார் சிஸ்டமில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தரவுகள் பயன்படுத்தப்படும். இந்த புதிய முறை இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    இந்த புதிய முறை, பயனர்களின் பரிவர்த்தனைகளை வேகமாகவும், பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வழிவகுக்கும் என்று கருதப்படுகிறது. 

    • காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.
    • வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, பாலஸ்தீன நகரமான காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை மதிப்பீடு செய்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அறிக்கைபடி, இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவின் 80% கட்டிடங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன.

    மொத்த சேத மதிப்பு 4.5 டிரில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 373.5 டிரில்லியன்) ஆகும்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் காசாவில் இடிபாடுகள் உள்ளிட்ட 51 மில்லியன் டன் குப்பைகள் குவிந்துள்ளன. இவற்றை அகற்ற மட்டும் ரூ.99.6 டிரில்லியன் செலவாகும்.

    போரினால் ஏற்பட்ட இடிபாடுகளை முழுமையாக அகற்ற 10 ஆண்டுகள் ஆகலாம். மேலும், காசாவின் வளமான நிலப்பரப்பை மீட்டெடுக்க 25 ஆண்டுகள் வரை ஆகலாம்.

    குப்பைகளை அகற்றுவதற்கான உபகரணங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களே மறுகட்டமைப்புக்கு நீண்ட காலம் எடுக்கக் காரணம்.

     இஸ்ரேலியத் தாக்குதல்களால் காசாவில் உள்ள 94% மருத்துவமனைகள் மற்றும் 90% பள்ளிகள் அழிக்கப்பட்டுள்ளன.

    காசாவின் 2.3 மில்லியன் மக்கள்தொகையில் 90% பேர் வீடற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர். காசாவின் 80% பகுதி இராணுவ மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    காசாவில், 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. போருக்கு முன் பயிரிடப்பட்ட நிலங்களில், தற்போது 232 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யக்கூடியதாக உள்ளது. அதாவது, வேளாண் நிலங்களில் 98.5% இப்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

     வளமான மண் இல்லாதது உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. போருக்கு முன்பு காசா தனது மொத்த ஏற்றுமதியில் 32% ஸ்ட்ராபெர்ரிகள், 28% தக்காளி மற்றும் 15% வெள்ளரிகளை ஏற்றுமதி செய்து வந்தது.

    இஸ்ரேலியத் தாக்குதல்கள் 83% பாசனக் கிணறுகளை அடைத்துள்ளன. வெடிபொருட்கள் மற்றும் இரசாயனங்கள் காரணமாக காசாவின் மண்ணில் ரசாயன அளவு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

    ஒட்டுமொத்தமாக இந்த போரினால் ஏற்பட்ட சமூகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கம் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்று ஐ.நா. அறிக்கை எச்சரித்துள்ளது.

    இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 66,158 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா முன்னதாக தெரிவித்திருந்தது.

    ஐநாவின் சுயாதீன விசாரணை கமிஷன் காசாவில் இஸ்ரேல் செய்து வருவது இனப்படுகொலை என வரையறுத்துள்ளது.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்பது குறித்து எகிப்தில் இஸ்ரேல், ஹமாஸ் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    ×