என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.
- விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்:-
அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களை தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.
- கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார்.
- பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடத்தில் இருப்பவர் நடிகர் கவின். கவின் விஜய் டி.வியில் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' சீரியலின் மூலம் சின்னத்திரை பயணத்தை துவங்கினார். பின் 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையனாக வந்து மக்கள் அனைவரையும் கவர்ந்தார். இதனால் கவினுக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
பின்னர், கவின் 'நட்புனா என்ன தெரியுமா'படத்தில் கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகினார். கவின் பிக்பாஸ் மூன்றாம் சீசனில் பங்கேற்றார். பிக்பாஸ் கவினுக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிக்பாஸிற்கு பிறகு 'லிஃப்ட்' என்ற படத்தில் நடித்தார். ஓடிடி- யில் மட்டும் வெளியான 'லிஃப்ட்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து 'ஸ்டார்', 'கிஷ்', 'டாடா', 'ப்ளடி பக்கர்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா மற்றும் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
வயதில் சிறியவன் தனக்கு மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் இன்று மாலை 05.04 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்.
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றார்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார்.
மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றனர்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது.
சென்னை:
பிரதமர் மோடி, குஜராத் முதல்-மந்திரியாக பதவி வகித்து, பின்னர் பிரதமராக பொறுப்பேற்று நேற்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.
- சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
- நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சூது கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
கார்த்தியின் 26-வது படம் இதுவாகும். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், 'வா வாத்தியார்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பட வெளியீட்டு தேதி தொடர்பான புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

- கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
- நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விஜய் ஆறுதல் கூறாமல் இருந்து வந்தார்.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் விஜய் மீது கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களை 'வீடியோ கால்' மூலம் தொடர்பு கொண்டு நேற்று முன்தினமும், நேற்றும் விஜய் ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் த.வெ.க. தலைவர் விஜய் பேசினார்.
அப்போது, இது ஈடு செய்ய முடியாத இழப்பு. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக வெற்றிக்கழகம் செய்து தரும். நான் விரைவில் உங்களை சந்திக்க வருகிறேன் என கூறினார்.
இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் கரூர் செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்டோரை சந்தித்து நேரில் ஆறுதல் கூற த.வெ.க. தலைவர் விஜய் செல்ல உள்ளார். கரூர் செல்லும் அவருக்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி டி.ஜி.பி. அலுவலகத்தில் த.வெ.க.வினர் இன்று மனு அளிக்க உள்ளதாக கட்சியின் கொ.ப.செ. அருண்ராஜ் தகவல் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே நேற்று மெயில் மூலம் மனு அளித்த நிலையில் இன்று நேரில் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்க அதிபர் டிரம்பின் அடாவடி முடிவுகளால் உலக நாடுகள் வர்த்தகப் போரை சந்தித்து வருகின்றன. இதனால், பெரும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.167-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,600
06-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 89,000
05-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
04-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600
03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-10-2025- ஒரு கிராம் ரூ.167
06-10-2025- ஒரு கிராம் ரூ.167
05-10-2025- ஒரு கிராம் ரூ.165
04-10-2025- ஒரு கிராம் ரூ.165
03-10-2025- ஒரு கிராம் ரூ.162
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூருக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறப்புக்குழு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறுவதையொட்டி 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வருகிறார். இந்த சந்திப்பின் போது முக்கிய ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
அப்போது அவர், தொகுதி வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? என கேட்டறிந்தார். பின்னர், தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் இன்று விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்க உள்ளார்.
- சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்ததாக வழக்கு.
- சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக பூடானில் இருந்து கார்கள் இறக்குமதி செய்த வழக்கில் ஏற்கனவே சுங்கத்துறை அதிகாரிகள் நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர்.
இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் காலை முதலே துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் சோதனையில் ஈடுபட்ட நிலையில் தற்போது சென்னையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகள் கைகூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
ரிஷபம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொருளாதார நிலை உயரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
மிதுனம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.
கடகம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றிக்கொள்ள வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். விட்டுப்போன விவாக பேச்சுகள் மீண்டும் வந்து சேரும்.
சிம்மம்
யோகமான நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்குச் செவிசாய்ப்பர்.
கன்னி
யோசித்து செயல்பட வேண்டிய நாள். பொறுப்புகள் அதிகரிக்கும். கையிருப்பு கரையும். வாகன பழுதுச்செலவுகளால் வாட்டம் ஏற்படும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க கொஞ்சம் அலைச்சல்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்
தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும் நாள். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.
தனுசு
சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உடன்பிறப்புகள் வழியில் நல்ல தகவல் வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது.
மகரம்
செல்வநிலை உயரும் நாள். கடமையை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். பயணம் பலன் தரும்.
கும்பம்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்துசேரும்.
மீனம்
ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். அதிகாலையிலேயே நல்ல தகவல் வரலாம். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு. பொதுவாழ்வில் பொறுப்புகள் அதிகரிக்கும்.






