என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400-ம், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.240-ம் நேற்றுமுன்தினம் சவரனுக்கு ரூ.520-ம் நேற்று சவரனுக்கு ரூ.280-ம் உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.64,560-க்கு விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து கடந்த 4 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,025-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.64,200-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,560
19-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,280
18-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,760
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-02-2025- ஒரு கிராம் ரூ.109
19-02-2025- ஒரு கிராம் ரூ.108
18-02-2025- ஒரு கிராம் ரூ.108
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
- லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் அடித்துள்ளார்.
- விபத்தின்போது வாகனங்கள் அதிவேகத்தில் செல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. மேற்கு வங்காளத்தை சேர்ந்த அவர் நேற்று இரவு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் சென்றார். மேலும் சில கார்கள் அவரது காருடன் அணிவகுத்து சென்றன.
ஹூக்ளி புறநகரில் தேசிய நெடுஞ்சாலையில் தாதுபூர் என்ற பகுதியில் சென்றபோது கங்குலி பயணித்த கார் விபத்தில் சிக்கியது. வேகமாக வந்த லாரி ஒன்று கங்குலியின் கார் மீது மோதியது.
இதனால் லாரி மீது மோதாமல் இருக்க கார் டிரைவர் பிரேக் போட்டார். இதில் கங்குலி காரை தொடர்ந்து வந்த 2 கார்களும் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டன.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கங்குலி காயமின்றி உயிர் தப்பினார். அதேபோல் மற்ற யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் கார்கள் மட்டுமே சேதமடைந்தது என்றும் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய கங்குலி, 20 நிமிடங்களில் வேறொரு காரில் புறப்பட்டு பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
- உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது.
- ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம், 2000ம் ஆண்டிலிருந்து, பிப்ரவரி 21ம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத்திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
உலக நாடுகள் கூட்டமைப்பான யுனெஸ்கோ, தாய்மொழி வழியிலான பன்மொழிக்கற்றலை வலியுறுத்துகிறது. தாய்மொழியில் கற்பது அடிப்படை உரிமை என்றும் தெரிவித்துள்ளது. இதன்படியே, நமது பிரதமர் நரேந்திர மோடிகொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை, ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வலியுறுத்துகிறது.
இன்றைய டிஜிட்டல் உலகில், மொழிகளை இணைப்பதும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பை உருவாக்குவதும் இன்றியமையாதது. நம் தாய்மொழியாம் தமிழை அடிப்படையாகக் கொண்டு, பல மொழிகள் கற்போம். தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்வோம் என்று கூறியுள்ளார்.
- ரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும்
- "காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு"
தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் தங்கி வேலை செய்து வருகின்றர். வேகாமான நகரமயமாக்கல் அதீத போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெங்களூரு திணறி வருகிறது.
இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பெங்களூரு குறித்து தெரிவித்துள்ள கருத்து விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று பெங்களூரு மாநகராட்சி ஏற்பாடு செய்த செய்த சாலை கட்டுமானம் குறித்த பட்டறையில் பேசிய சிவகுமார், கடவுள் சொர்க்கத்திலிருந்து இறங்கி பெங்களூரு தெருக்களில் நடந்தாலும், ஒன்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் எதுவும் மாறாது என்பதை இங்குள்ள ஊடகவியலாளர்களிடம் நான் கூற விரும்புகிறேன்.
நகரத்தின் நிலைமை மிகவும் சவாலானது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதை மாற்ற முடியும். எதிர்காலத்திற்காக சிறந்த சாலைகளை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று தெரிவித்தார்.
சிவகுமாரின் கருத்து குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலில் காங்கிரஸ் அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளுக்கு பணம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டது.
இப்போது பகுதி நேர பெங்களூரு மேம்பாட்டு அமைச்சர் டி.கே. சிவகுமார் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு நகரத்தில் எந்த மாற்றமும் சாத்தியமில்லை என்று கூறுகிறார். காங்கிரஸ் அரசு கர்நாடகாவிற்கும் பெங்களூருவிற்கும் ஒரு சாபக்கேடு. இந்த தோல்வியுற்ற அரசாங்கத்தை அகற்ற மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்" என்று விமர்சித்துள்ளார்.
- பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
- பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.
டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அதிஷி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்லி பெண்களுக்கு, ரூ.2,500 வழங்கப்படும் திட்டத்தை, முதல் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றுவோம் என டெல்லி பெண்களுக்கு பா.ஜ.க. உறுதியளித்தது.
புதிய முதல்வர் ரேகா குப்தாவும், அவரது அமைச்சரவை அமைச்சர்களும் நேற்று பதவியேற்றனர். முதல் அமைச்சரவை கூட்டத்தில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து இருந்தனர். டெல்லி மக்களை ஏமாற்ற பா.ஜ.க. முடிவு செய்துள்ளது என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறுகையில்,
பிரதமர் மோடியின் கனவை நிறைவேற்றுவது தலைநகரில் உள்ள 48 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பொறுப்பாகும்.
ஆம் ஆத்மி கட்சி தலைவரின் கருத்துக்கள் வந்தன. மேலும், தனது கட்சி மக்களுக்கு அளித்த ஒவ்வொரு உறுதிமொழியையும் புதிய அரசாங்கம் நிறைவேற்றும்.
பெண்களுக்கான நிதி உதவி உட்பட எங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாக்குறுதி அளிக்கப்பட்டபடி பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 உதவித்தொகை மார்ச் 8 ஆம் தேதிக்குள் கிடைக்கும். 100 சதவீதம் பெண்கள் மார்ச் 8 ஆம் தேதிக்குள் அவர்களின் வங்கிக் கணக்குகளில் பண உதவியைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கிய உள்ள 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை இயக்கிய தனுஷ் எக்ஸ் தள பக்கத்தில், காதல், சிரிப்பு, நட்பை கொண்டாட வாருங்கள்... இன்று முதல்... ஓம் நமச்சிவாய.. என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்.
- அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார்.
திருமண வரன் தேடும் மேட்ரிமோனி தளத்தில் பெண்களுடன் நட்பு கொண்டு நேரில் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்த குஜராத் இளைஞர் பிடிபட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் 26 வயதான ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஹிமான்ஷு ஒரு திருமண தளம் மூலம் பெண்களிடம் தன்னை டெல்லி காவல்துறையின் சைபர் பிரிவு அதிகாரி என்று அறிமுகப்படுத்தி நட்பு கொள்வார்.
மேட்ரிமோனியில் நட்பாக பேசி பழகியபின் நேரில் சந்தித்து அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை வழங்கி, பின்னர் திருமணம் செய்துகொள்வதாக கூறி அவர்களை ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துவந்தார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஹிமான்ஷுவை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஹிமான்ஷு கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், சுமார் 15 பெண்களை அவர் ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்தது.
மோசடிக்கு ஹிமான்சு பயன்படுத்திய ஐந்து உயர் ரக தொலைப்பேசிகள் மற்றும் மடிக்கணினியை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
- அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன்,
- நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது?
சென்னை :
என் வீட்டை முற்றுகையிடுவேன் என்று கூறும் அண்ணாமலைக்கு, தைரியம் இருந்தால் அண்ணா சாலைக்கு வரச்சொல்லுங்கள் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், அறிவாலயத்திற்கு அண்ணாமலை ஏன் வரவேண்டும்? நானே வருகிறேன், வரக்கூடாது என்றால் அது என்ன ரெட் லைட் ஏரியாவா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து, இன்று அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், நட்பு பாராட்டுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவாலயம் வரலாம், செங்கலை பிடுங்க வருவேன் என்றால் எப்படி அனுமதிப்பது? மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் ரெட் லைட் ஏரியா என சொல்வது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கிறது.
GET OUT என்ற வார்த்தைக்கு உகந்தவராக இருப்பவர் பிரதமர் மோடி தான் என்றார்.
- தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றவிட்டது.
- தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது.
சென்னை:
சேலத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாளை (இன்று) காலை 6 மணி வரை ஒட்டு மொத்த தி.மு.க. மற்றும் தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி 'கெட் அவுட் மோடி' என்று டுவீட் போடுங்கள். நானும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என்று டுவீட் போடுகிறேன். யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று பாருங்கள்.
தி.மு.க. ஐ.டி. விங்கிற்கு சவால் விடுகிறேன். 24 மணி நேரம் தருகிறேன். பா.ஜ.க. மற்றும் தி.மு.க. 2 கட்சிகளும் போடும் டுவீட்டில் எவ்வளவு வித்தியாசம் என்று நாளை மறுநாள் (சனிக்கிழமை) கணக்கு பார்ப்போம் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் #GetOutStalin என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள செய்தியில்,
ஒரு குடும்பத்தின் ஆதிக்கம், கறைபடிந்த அமைச்சரவை, ஊழலின் மையமாக இருப்பது, சட்டவிரோதத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது, தமிழகத்தை போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தின் புகலிடமாக மாற்றுவது, பெருகிவரும் கடன், பாழடைந்த கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல், சாதி மற்றும் மத அடிப்படையிலான பிரிவினைவாத அரசியல், நல்லாட்சியை வழங்குவதில் இடைவிடாத தோல்விகள், குறைபாடுள்ள கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் உள்ள இந்த தி.மு.க. தலைமையிலான அரசு விரைவில் மக்களால் பதவி நீக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
- ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர்
- ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக நேற்று (வியாழக்கிழமை) உத்தரப் பிரதேசத்துக்கு வருகை தந்தார்.
ரேபரேலியில் பேரணியின்போது பேசிய அவர், இரண்டு இந்தியாக்கள் உருவாக்கப்படுகின்றன. ஒரு பக்கம், தாங்கள் விரும்பியதைப் பெறும் பணக்காரர்கள் உள்ளனர். அவர்களுக்காக கொரோனாவின் போது, லட்சக்கணக்கான பெருநிறுவன கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மறுபுறம், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் கடின உழைப்பாளிகளுக்கான இந்தியா உள்ளது. நமக்கு இரண்டு இந்தியாக்கள் இருக்க முடியாது. நமக்கு ஒரே இந்தியா வேண்டும்.
நாம் எப்படி இந்த நிலையை அடைந்தோம்?. மோடி அரசாங்கம் பணமதிப்பிழப்பு போன்ற கொள்கைகளை செயல்படுத்தியதன் மூலம் சிறு வணிகங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த நாட்டில் ஏழை மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காண குரல் இன்னும் இருக்கிறதென்றால் அதற்கு அரசியலமைப்பே காரணம்.
காந்தி, அம்பேத்கர், நேரு ஆகியோர் இந்த அரசியலமைப்பை நமக்குக் கொடுத்தார்கள். அவர்கள் சிறைக்குச் சென்று ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.
இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் இந்த அரசியலமைப்பைத் தாக்குகிறார்கள். யாராவது இந்தியாவைப் பிரிக்க முயற்சித்தால், அதை நீங்கள் நிறுத்த வேண்டும். இந்த நாட்டை வெறுப்பு நிறைந்ததாக மாற்றும் அவர்களின் முயற்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். இந்த நாடு அன்பின் நாடு, எப்போதும் அன்பின் ஒன்றாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தலித் மாணவர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி, ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். ஆர்எஸ்எஸ் தலைவர் ஆங்கிலம் பேச மாட்டேன் என்று கூறுகிறார். தலித் மாணவர்கள் ஆங்கிலம் கற்று உயர் இடங்களுக்கு சென்றுவிடக்கூடாது என்பதே ஆர்எஸ்எஸ் எண்ணம். அதிகாரத்துக்கு வர ஆங்கிலம் ஒரு கருவி என்று தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் எத்தனை தலித் தலைவர்கள் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய ராகுல், இந்த அமைப்பு உங்களை ஒவ்வொரு நாளும் தாக்குகிறது, பாதிக்கும் மேற்பட்ட நேரங்களில் அது உங்களை எப்படித் தாக்குகிறது என்பது கூட உங்களுக்குத் தெரியாது.
அரசியலமைப்பின் சித்தாந்தம்தான் உங்கள் சித்தாந்தம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் தலித்துகள் இல்லையென்றால், இந்த நாட்டிற்கு அரசியலமைப்புச் சட்டம் கிடைத்திருக்காது என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.
- இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
- பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகத் தாய்மொழி தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி! என்று தெரிவித்துள்ளார்.






