என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    • நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

    2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அடுத்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    அதனைத்தொடர்ந்து மறுநாள் (மார்ச் 15-ந்தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 12 மணி அளவில் கூடுகிறது.

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.

    பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்ட நிலையில் அடித்தட்டு மக்கள், பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இன்னும் கூடுதலாக ஏதேனும் திட்டங்களை அமல்படுத்த முடியுமா? என்பது குறித்து ஆலோசித்து அதனையும் பட்ஜெட்டில் சேர்ப்பது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாமல் இருந்து வரும் வாக்குறுதிகளையும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    • சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள்.
    • இரணிய தீவு அருகே தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு.

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை நேற்று சிறைபிடித்தது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது.

    சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் இரணிய தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தது. ஏற்கனவே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை ஏலத்தில் விடுவதாக அறிவித்து இருக்கிறது.

    இந்த நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், நேற்று 32 மீனவர்களை சிறைபிடித்த சம்பவத்தை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

    • 1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது.
    • கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது

    1971 ஆம் ஆண்டு பிரிந்த பிறகு பாகிஸ்தானுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே நேரடி வர்த்தகம் முதல் முறையாகத் தொடங்கியது.

    இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் வர்த்தகக் கழகம் (TCP) மூலம் 50,000 டன் பாகிஸ்தான் அரிசியை வாங்க வங்கதேசம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தின் கீழ் முதற்கட்டமாக 25,000 டன் அரிசியுடனான கப்பல் கடந்த சனிக்கிழமை கராச்சியில் உள்ள காசிம் துறைமுகத்திலிருந்து வங்கதேச துறைமுகத்திற்குப் புறப்பட்டது. 2 ஆம் கட்ட இறக்குமதி,  25,000 டன் அரிசியுடன் அடுத்த மாத துவக்கத்தில் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971 ஆம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்து சுதந்திர நாடாக மாறியது. கடந்த ஆண்டு வங்கதேச சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்துக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்தது.

    இது கலவரமாக மாறிய நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.

    அதன்பிறகு, முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பாகிஸ்தான் உடனான வர்த்தக உறவுகளை உருவாக்க தங்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்குப் பாகிஸ்தான் ஆதரவளித்து வருவதாக வங்கதேசம் கூறுகிறது. 

     

    • ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
    • இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போரில் லெபனானின் கிளர்ச்சி அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை எதிர்த்து சண்டையிட்டு வந்தது. இதனால் கோபமடைந்த இஸ்ரேல் லெபனான் நகரங்கள் மீது நடத்திய கொடூர தாக்குதல்களில் பொதுமக்கள் உள்பட 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும், லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்தனர்.

    நான்கு மாதங்கள் வரை தாக்குதல் தொடர்ந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில், உயிரிழந்து கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து ஹசன் நஸ்ரல்லாவுக்கு பெய்ரூட்டில் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. இதற்காக நேற்று ஆயிரக்கணக்கானோர் பெய்ரூட்டில் கூடியிருந்தனர். உயிரிழந்த நஸ்ரலாவுக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் பொது மக்கள் கூடியிருந்த நிலையில், இறுதி சடங்கின் போது இஸ்ரேல் போர் விமானங்கள் வான்வெளியில் வட்டமடித்தன.

    இறுதி சடங்கில் பொது மக்கள் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்தும் கோஷங்களை எழுப்பிய நிலையில், போர் விமானங்களின் சத்தத்தால் மக்களின் கோஷங்கள் கேட்க முடியாத நிலை உருவானது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோக்களில் இஸ்ரேல் வான்படைக்கு சொந்தமான நான்கு எஃப்-16 ரக போர் விமானங்கள் இறுதி சடங்கு நடைபெற்ற இடத்தின் மேல்பரப்பில் வட்டமடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இன்று ஹசன் நஸ்ரல்லாவுக்கு இறுதி சடங்கு. உலகம் இன்று சிறந்த இடமாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளது.

    பெய்ரூட்டில் உள்ள கேமிலி சமௌன் மைதானத்தில் இறுதி சடங்கு நடைபெற்றது. இதில், இறுதி சடங்கு தொடங்க சில மணி நேரங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நஸ்ரல்லாவுக்கு மரியாதை செலுத்த மைதானத்தில் ஒன்றுகூடியிருந்தனர்.

    • வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.
    • பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் மங்களூரில் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பிணி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மகப்பேறு நடந்துள்ளது. குழந்தை பிறப்புக்கு பின் டிஸ்சார்ஜ் ஆன 1 வாரத்தில் அப்பெண்ணுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

    மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் அசாதரணமான உணர்வு இருப்பதாக பெண் தெரிவித்த நிலையில் அவருக்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் 10 செமீ அளவில் ஏதோவொன்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வயிற்றில் ஹீமோடோமா கட்டி போன்ற பொருள் இருப்பதாக மட்டுமே மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து அப்பெண்ணுக்கு CT ஸ்கேன் எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் செலவுக்குப் பயந்த தம்பதி கட்டி காலப்போக்கில் சரியாகிவிடும் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால் பெண்ணுக்கு அதன் பிறகும் நிற்க, நடக்க குழந்தையை சுமக்க, தாய்ப்பால் கொடுக்க சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து CT ஸ்கேன் செய்யப்பட்டபோது அந்த அதிர்ச்சி உண்மை வெளிவந்தது.

    பெண்ணின் வயிற்றில் 10 சென்டி மீட்டர் அளவுக்கு அறுவை சிகிச்சை துணி (Surgical mop) இருப்பது CT ஸ்கேனில் தெரியவந்தது. இதுதொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை கேட்டபோது அவர், பொறுப்பேற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

    எனவே மங்களூரு புத்தூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அப்பெண் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஜனவரி 25 அன்று அறுவை சிகிச்சை மூலம்  வயிற்றில் இருந்த சர்ஜிக்கல் மாப் அகற்றப்பட்டது. தொடர்ந்து அவர் பிப்ரவரி 15 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இருப்பினும் அந்த பெண் அசௌகரியங்களுக்கும், தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளார். பெண்ணின் சிகிச்சைக்காக குடும்பம் லட்சக்கணக்கான ரூபாயை செலவிட்டுள்ளது.

    இந்நிலையில் தற்போது மருத்துவரின் அலட்சியத்தால் ஏற்பட்ட இந்த சங்கடம் குறித்து தேசிய நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தட்சிண கன்னடா மாவட்ட சுகாதார மற்றும் குடும்ப நல அதிகாரி திம்மையா தெரிவித்துள்ளார். பெண்ணின் கணவர் தங்கள் நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
    • அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.

    1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.

    ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?

    சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • நைஜீரியாவில் முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது பஸ் மோதியது.
    • இந்த விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கின்ஷாசா:

    நைஜீரிய நாட்டின் நைஜர் மாகாண நெடுஞ்சாலையில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    குசோபோகி என்ற பகுதி அருகே சென்றபோது முன்னால் சென்ற வாகனத்தை அந்த பஸ் முந்த முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது வேகமாக மோதியது. இதில் அந்த பஸ் தீப்பிடித்து எரிந்தது.

    இந்த விபத்தில் சிக்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சில மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒருநாள் கிரிக்கெட்டில் 14,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இது கோலியின் 51-வது சதம் ஆகும்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் துபாயில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய பாகிஸ்தான் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    அடுத்து ஆடிய இந்தியா விராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கு முன்னேறியது. விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலி வென்றார்.

    இந்நிலையில், ஐ.சி.சி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 முறை ஆட்ட நாயகன் விருதை வென்று விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

    அதன்படி, 2012 டி20 உலகக்கோப்பை, 2015 உலகக் கோப்பை ஒருநாள் போட்டி, 2016 டி20 உலகக் கோப்பை, 2022 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய ஐசிசி தொடரில் ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார்.

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    ஹராரே:

    அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

    முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என அயர்லாந்தும், ஒருநாள் தொடரை 2-1 என ஜிம்பாப்வேவும் கைப்பற்றின.

    இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் லோர்கன் டக்கர் 46 ரன்கள் எடுத்தார்.

    ஜிம்பாப்வே சார்பில் ட்ரெவர் குவாண்டு 3 விக்கெட்டும், ரிச்சர்ட் ங்வாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிக்கந்தர் ராசா 22 ரன், ரியான் பர்ல் 27 ரன் எடுத்து அவுட்டாகினர்.

    அந்த அணியின் டோனி முன்யோங்கா ஒருபுறம் நிலைத்து நின்று ஆடினார்.

    இறுதியில் ஜிம்பாப்வே அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. டோனி முன்யோங்கா 43 ரன் எடுத்து களத்தில் இருந்தார். இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என ஜிம்பாப்வே முன்னிலை வகிக்கிறது.

    இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

    • சட்டவிரோத குடியேறிகளை நாடுகடத்தும் நடவடிக்கையில் டிரம்ப் அரசு மேற்கொண்டு வருகிறது.
    • இதுவரை அமெரிக்காவில் இருந்து மூன்று கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அப்போது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அந்நாட்டு அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் பிப்ரவரி முதல் வாரம் முதல் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தி வருகிறது. இதுவரை 3 கட்டமாக இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நான்காவது கட்டமாக 12 இந்தியர்களுடன் துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் நேற்று டெல்லி வந்தடைந்தது. இவர்களில் 4 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள், அரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர் ஆவர்.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
    • இதைத் தொடர்ந்து அந்த விமானம் ரோமுக்கு திருப்பி விடப்பட்டது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து புதுடெல்லி செல்லும் தினசரி விமானத்தை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் நேற்று முன்தினம் இரவு 8.14 மணிக்கு நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் சுமார் 285 பயணிகள் பயணம் செய்தனர்.

    காஸ்பியன் கடலுக்கு மேலே சென்று ஐரோப்பா நோக்கித் திரும்பியது.. பாதுகாப்பு அச்சுறுத்தலால் விமானிகள் நடுவானில் யு-டர்ன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இத்தாலியின் ரோம் நகருக்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது.

    இதுதொடர்பாக, அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏஏ 292 விமானத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக ரோமுக்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம். நிலைமை சரியானதும் அடுத்த தகவல் வழங்குவோம். பயணிகளின் பொறுமை மற்றும் ஒத்துழைப்பை பாராட்டுகிறோம் என தெரிவித்துள்ளது.

    • ஜெர்மனியில் இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது.
    • ஆளும் கட்சியின் ஒலாப் ஸ்கால்ப்ஸ் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    பெர்லின்:

    ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளது என்றும், அவரது கட்சி முன்னிலையில் இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஏ.எப்.டி. இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஜெர்மனி தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன் எனக்கூறி தோல்வியை ஒப்புக் கொண்டார் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ்.

    ×