என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
    • அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர்.

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!

    அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
    • எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.

    இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற "வளமிக்க" துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.

    மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.

    எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளார். 



    • தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
    • அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    சென்னை :

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

    இதனிடையே இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

    21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    • பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை.
    • காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:

    * பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது.

    * பராசக்தி ஒரு கமர்ஷியல் திரைப்படம் அவ்வளவு தான். இதை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம்.

    * காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    * நிர்வாகிகளுக்கு பலவித கருத்து இருக்கலாம். தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

    • 5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார்.
    • தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    பொங்கல் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த குண்டுக்குளம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான செந்தில்குமார் என்பவர் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளைகள் என பல்வேறு வகையில் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அவர் விவசாயிகள் பயிரிட்டு வரும் செங்கரும்பினை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக 5 டன் செங்கரும்பினால் ஆன பிரம்மாண்டமான திருத்தேரை தயார் செய்து உள்ளார்.

    5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார். தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது, உழவர்களின் உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீட்டை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக கோவில் தேர் அமைத்தது மட்டுமல்லாமல் விவசாயிகள் பயிரிடும் செங்கரும்பை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்து உள்ளார். இந்த செங்கரும்பு திருத்தேர் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை 10 நாட்கள் அப்பகுதி மக்கள் நேரில் பார்வையிட பார்வைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது.

    • சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசார குழுவை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள, பின்வரும் முறையில், தேர்தல் பிரசாரக் குழு அமைக்கப்படுகிறது.

    தேர்தல் பிரசாரக் குழு விவரம்:

    1. N.ஆனந்த்

    2. ஆதவ் அர்ஜுனா B.A.

    3. K.A.செங்கோட்டையன்

    4. A.பார்த்திபன்

    5. B.ராஜ்குமார் DME

    6. K.V.விஜய் தாமு

    7. S.P.செல்வம் DCE

    8. K. பிச்சைரத்தினம் கரிகாலன்

    9. M.செரவு மைதின் (எ) நியாஸ்

    10. J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed.

    மேற்கண்ட குழு, 234 தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்கள், பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ளும். இக்குழுவிற்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
    • பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது. இன்றும் நாளையும் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது. வழக்கம்போல அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

    மேலும் பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒரு சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பொங்கலை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர் சென்றதாலும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருப்பதாலும் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.

    • பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
    • பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    வண்டலூர்:

    காணும் பொங்கல் விழா நாளை (17-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பூங்கா, கடற்கரை மற்றும் சுற்றுலாதலங்களுக்கு குடும்பத்துடன் சென்று தயார் செய்து கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது வழக்கம்.

    இன்று மாட்டுப்பொங்கல் மற்றும் நாளை காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்காவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று காலை முதல் ஏராளமானோர் வண்டலூர் பூங்காவில் குவிந்தனர்.

    பார்வையாளர்களுக்கான பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியாக வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. வாகன நிறுத்துமிடங்களில் இருந்து பூங்காவிற்கு செல்ல 10 கூடுதல் பஸ்கள், பார்வையாளர்களின் வசதிக்காக மின்னணு நுழைவுச்சீட்டு வழங்கும் முறை, பார்வையாளர்கள் கியாஸ்க், வாட்ஸ்அப் இணையதளம் மற்றும் வண்டலூர் பூங்கா மொபைல் செயலி மூலம் நுழைவுச் சீட்டு பெற இலவச வைபை வசதி வழங்கப்படுகிறது. மேலும், பணமாகவும் டிக்கெட் வாங்க ஒரு கவுன்டர் மட்டும் செயல்படுகிறது.

    பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், கரும்பு, பீடி, சிகரெட், மது மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பூங்காவிற்குள் கொண்டு வர அனுமதி இல்லை. நுழைவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுப்பினர். பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 65 வனத்துறை பணியாளர்கள் மற்றும் 60 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மாற்றுத்திறனாளி பார்வையாளர்களின் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி மற்றும் அவர்களுக்கு ஏற்ற நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் வகையில் கூடுதல் தகவல் பலகைகள் மற்றும் திசை குறிப்பு பலகைகள் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. 4 புதிய கழிப்பறை வளாகங்கள் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகள் கழிப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளது.

    பூங்காவில் புதிதாக பிறந்த நீர்யானை, இந்திய காட்டு மாடு, சதுப்புநில மான், வெளிமான், கடமான், அனுமன் குரங்கு, நீலகிரி கருங்குரங்கு, நெருப்புக் கோழி மற்றும் அனகோண்டா பாம்புகள் ஆகியவை பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கிறது. தினமும் மாலை 4 மணிக்கு யானைகளுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். மேலும், பார்வையாளர்களுக்காக 7 டி திரையரங்கு இயக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்களின் நடமாட்டத்தை கண்காணிக்க 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

    • கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.
    • தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    ஆந்திர மாநிலம் அதலாபாத் பகுதியை சேர்ந்தவர் பாலகுருதி சத்யநாராயணா (வயது62). இவரது மனைவி ரமா (வயது 60). இவர்களும் அதே பகுதியை சேர்ந்த 50 ஐயப்ப பக்தர்களும் ஒரு பஸ்சில் சபரிமலைக்கு சென்று விட்டு நேற்று இரவு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.

    இவர்கள் வந்த பஸ் கன்னியாகுமரி நான்கு வழி சாலை பகுதியில் நிறுத்தி வைத்துவிட்டு அனைவரும் பஸ்ஸிலிருந்து இறங்கி அந்தப் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். இதில் கணவன்- மனைவியான பாலகுருதி சத்யநாராயணா மற்றும் ரமா ஆகியோர் ரோட்டை கடந்து செல்ல முயன்றனர்.

    அப்போது அந்த வழியாக தண்ணீர் கேன் ஏற்றி வந்த டெம்போ இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களை பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டார்கள் என்று தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் அவர்கள் இருவரின் உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவர்கள் இருவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவர்கள் இருவரின் உடலும் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு நேர்ந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது.
    • அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன்.

    பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றியது தொடர்பாக யூகங்கள் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அண்ணாமலை மற்றும் பா.ஜ.க. மேலிடம் விளக்கம் அளிக்காமல் உள்ளனர். இந்த நிலையில், அண்ணாமலை மாற்றப்பட்டு அரசியல் யுக்தி என்று ஆடிட்டர் குரூமூர்த்தி பேசியுள்ளார்.

    'துக்ளக்' நாளிதழின் 56-வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

    அண்ணாமலை பொறுத்தவரை அது பா.ஜ.க.வின் முடிவு. அண்ணாமலையும், பா.ஜ.க.வும் சேர்ந்து தான் முடிவு எடுத்துள்ளார்களே தவிர அண்ணாமலையை கலக்காமல் எதையும் எடுக்கலை. காரணம் என்னவென்றால் பா.ஜ.க.வால் மட்டும் தனியாக தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்கிற நிலைமை இருப்பதினால்.

    எடப்பாடி எந்த விஷயத்திலும் பா.ஜ.க.வோடு நெருங்ககூடாது என்று 2024-ல் அவர் எடுத்த முடிவை அவர் மாற்றிக்கொண்டு பா.ஜ.க. ஒத்துழைக்க வந்திருப்பதானால் தான் இன்னிக்கு தி.மு.க.வை வீழ்த்த முடியும் என்ற ஒரு எண்ணம் ஏற்பட்டு இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலில் எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. எல்லாமே ஐடிலிசம் கிடையாது. பா.ஜ.க. தனியாக நின்று 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எழுச்சி பெற்று வெற்றி பெறும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? 10 ஆண்டு தி.மு.க. இருக்கும் என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள்ள முடியாது.

    தி.மு.க. போயே ஆக வேண்டும் என்றால் அதற்கு உண்டான யுக்திகளை தயார்படுத்த வேண்டும். அமித்ஷாவை விட இதைப்பற்றி விஷயம் தெரிந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. 2014-ல் மகாராஷ்டிரா தேர்தலின் போது உத்தவ் தாக்கரே என்கிட்ட போன் செய்து கேட்கிறார். அமித்ஷா எங்க இருக்காரு சார் என்னால பார்க்கவே முடியலை சார் என்று. அப்போ மாட்டுங்காவில் ஒரு சின்ன வீட்டில் இருந்தார் அந்த சமயத்தில். அங்கிருந்து தான் யுக்திகளை கையாண்டு பா.ஜ.க. நம்பர் 2 கட்சியாகவும், சிவசேனா நம்பர் 1 கட்சியாகவும் இருந்தது. அதனை அப்படியே மாத்தினார் அமித்ஷா. இன்றைக்கு பா.ஜ.க. மகாராஷ்டிராவை கைப்பற்றி இருக்கிறது என்றால் அன்னிக்கு அவர் எடுத்த யுக்தி. அதனால் அவருக்கு தெரியும். சில பேருக்கு அந்த அஸ்ட்ராலானி என்று கூறுவார்கள். அதாவது எல்லாவிதமான திறமையும் இருக்கும். அந்த மாதிரி திறமை உள்ளவர். தமிழ்நாட்டை கையில் எடுத்து இருக்கார். நம்பிக்கையுடன் இருங்கள். அண்ணாமலையும் அவருக்கு ஒத்துழைப்பார். அண்ணாமலை என்னுடைய ஃப்ரண்ட். அவர்கிட்டயும் நான் பேசிக்கொண்டு தான் இருக்கேன். அதனால அண்ணாமலைக்கு எதிராக ஏதோ ஒரு முடிவு எடுக்கப்பட்டதாக நினைத்துக்கொண்டு பேசுவது தவறு என்று கூறினார். 

    • சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.
    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்து முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட நாளிலோ தண்ணீர் திறப்பது வழக்கம். ஜூன் 12-ந் தேதி திறக்கப்படும் தண்ணீர் ஜனவரி மாதம் 28-ந் தேதி நிறுத்தப்படும்

    இதே போல் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தொடர்ந்து அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால் கடந்த ஆண்டு தண்ணீர் அதிகளவில் வந்ததால் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் பாசனத்தேவை நிறைவடைந்ததை அடுத்து நேற்று மாலை 6 மணி முதல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இதுவரை ஜூன் 1-ந் தேதி முதல் நேற்று வரை 199 நாட்களுக்கு 8.6 டி.எம்.சி, தண்ணீர் வெளியேற்றப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.25 அடியாக உள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 61.33 டி.எம்.சி, தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

    பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுவதையொட்டி போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

    இந்நிலையில் உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசிப்பதற்காக நடிகர் சூரி வந்து இருந்தார்.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளும், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் களம் காண உள்ளனர். ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரர்களுக்கு, காளை உரிமையாளர்களுக்கு கார், டிராக்டர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது.

    பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. வெற்றி பெறும் காளை உரிமையாளருக்கு டிராக்டர், கன்றுடன் கூடிய நாட்டு பசுமாடு வழங்கப்படுகிறது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காளை சிலையை நடிகர் சூரி பரிசளித்து சிறப்பித்தார்.

    ×