search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரத்தில் கடலில் குதித்து கணவன்-மனைவி தற்கொலை
    X

    அக்னி தீர்த்த கடலில் வயதான தம்பதி பிணமாக மிதந்த காட்சி.


    ராமேசுவரத்தில் கடலில் குதித்து கணவன்-மனைவி தற்கொலை

    • கடலில் பிணமாக கிடந்த கோவிந்தராஜ்-தனலட்சுமி உடலை போலீசார் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர்.
    • போலீசாரின் விசாரணையில் கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நான்கு பக்கம் கடல் சூழ்ந்த தீவில் அமைந்துள்ளது. இந்துக்கள் புனித நீராடும் இடமாக திகழ்கிறது. இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

    அவ்வாறு வரும் பக்தர்கள் அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் ராமேசுவரத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை தினமான நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் பகுதியில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வயதான முதியவர் மற்றும் மூதாட்டி ஆகிய இருவர் கடலில் பிணமாக மிதந்தனர். அவர்கள் இருவரது உடலும் இடுப்பு பகுதி துணியால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

    இதனை அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முதியவர் மற்றும் மூதாட்டி கடலில் பிணமாக மிதப்பது பற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

    கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டி பிணங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது.

    பிணமாக கிடந்த முதியவரின் உடையில் சோதனை செய்து பார்த்த போது அவரிடம் ஆதார் அட்டை இருப்பது தெரிய வந்தது. அதில் கோவிந்தராஜ் (வயது62), தந்தை பெயர் ஆறுமுகம், கோவை மாவட்டம் பொன்னாபுரம் சமத்தூர் என்ற முகவரி குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதையடுத்து இறந்து கிடந்தவர் கோவிந்தராஜ் மற்றும் அவரது மனைவி என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதில் கோவிந்தராஜனின் மனைவியின் பெயர் தனலட்சுமி (59) என்பதும், அவர் காதிகிராப்பில் ஊழியராக பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது.

    கடந்த 3-ந் தேதி கோவிந்தராஜூம் அவரது மனைவியும் ராமேசுவரம் வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் கோவிந்தராஜூம் அவரது மனைவியும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். இதுபற்றி தங்களது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.

    அதன் பின்னர் தான் இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் ஆழமான பகுதிக்கு சென்று தற்கொலை செய்து உள்ளனர். மேலும் தங்களது உறவினர்களுக்கு அனுப்பிய தகவலில் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட தங்களது மகன் பெயரில் அறக்கட்டளை அமைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். அறக்கட்டளை அமைக்க தங்களது சொத்தை விற்று விடுமாறும் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி கோவை மாவட்ட போலீசாருக்கு ராமேசுவரம் போலீசார் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவிந்தராஜ் உறவினர்களுக்கு கணவன்-மனைவி கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் ராமேசுவரத்திற்கு புறப்பட்டு வருகின்றனர். கடலில் பிணமாக கிடந்த கோவிந்தராஜ்-தனலட்சுமி உடலை போலீசார் ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். இதில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

    மேலும் போலீசாரின் விசாரணையில் கோவிந்தராஜ் பொள்ளாச்சியில் ஊரக வளர்ச்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    Next Story
    ×