search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தீபாவளிக்கு புதிதாக அறிமுகம்: 2 மணி நேரம் தொடர்ந்து வானில் வண்ணமயமாக வெடிக்கும் 1000 ஷாட் வெடிகள்
    X

    தீபாவளிக்கு புதிதாக அறிமுகம்: 2 மணி நேரம் தொடர்ந்து வானில் வண்ணமயமாக வெடிக்கும் 1000 ஷாட் வெடிகள்

    • குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
    • ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் சென்னை நகரம் முழுவதும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தற்போது, சென்னை தீவுத்திடலில் மட்டும் பட்டாசுகள் விற்பனை நடந்து வருகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்தனர். அங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில், கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, மயில் பட்டாசு, மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால் , பேட் , ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் பிளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன.

    புதிய ரக பட்டாசுகள் குறித்து பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு குழந்தைகளுக்காக மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, பிளையிங் பேர்டு, பிளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும் ரெயின்போ, ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே இலக்கு வைத்து அவர்களுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை விற்பனைக்கு வந்திருக்கிறது. 1,000 ஷாட் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 24 வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. ரூ.250 முதல் ரூ.3,500 வரை கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது தீவுத்திடலில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் 100 சதவீதம் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விடும் என எதிர் பார்க்கிறோம். தீவுத்திடலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசு களை வாங்கி செல்கின்றனர். கடையில் பட்டாசுகளை வாங்கினால், அதற்கான பில்லை பொதுமக்கள் கட்டாயம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். ஆன்லைனில் சீன பட்டாசுகள் அதிகம் விற்பனையாவதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம்.

    தமிழக அரசு கடந்த ஆண்டை விட தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசு கடைகளுக்கான ஷெட் அமைப்பதில் பல கெடுபிடிகள் உள்ளன. இதனால், சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தமிழக அரசு தளர்வு அளித்து, கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×