search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தச்சங்குறிச்சியில் நாளை இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: மைதானத்தில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு
    X

    ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ரகுபதி பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் - டோக்கன் வாங்க குவிந்த மாடுபிடி வீரர்கள்

    தச்சங்குறிச்சியில் நாளை இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு: மைதானத்தில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு

    • ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
    • ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் நடைபெறுவது வழக்கம். தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலய ஆண்டுத்திருவிழா, புத்தாண்டையொட்டி நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு, நிகழாண்டில் நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஆட்சியர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் ஜல்லிக்கட்டை, மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.

    இந்த ஜல்லிக்கட்டுக்காக தச்சங்குறிச்சியில் வாடிவாசல், பார்வையாளர்கள் அரங்கு அமைத்தல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளும் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளை பரிசோதிப்பதற்காக கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவர்கள் குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காயம் அடையும் காளைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக ஆம்புலன்ஸ் வசதி, காயம் அடையும் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஜல்லிக்கட்டையொட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 415 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஜல்லிக்கட்டை கண்காணிக்க பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு விழா ஏற்பாட்டாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தச்சங்குறிச்சி விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் நேற்று திரண்டனர். இந்த ஜல்லிக்கட்டில் 650 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள திடல், சி.சி.டி.வி கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவற்றை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேற்று ஆய்வு செய்தார். இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர்கள் கூறியபோது, "போதைப்பொருள் கொடுத்து கொண்டு வரப்படும் காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படமாட்டாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே காளைகள் அவிழ்க்கப்பட வேண்டும். ஜல்லிக்கட்டு முடிந்ததாக அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே காளைகளை அவிழ்த்து விடக்கூடாது என ஏற்பாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    காளைகளின் கொம்புகள் கூர்மையாக இருந்தால் அதன் மீது பிளாஸ்டிக் குப்பி அணிந்திருக்க வேண்டும். அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் முன்னேற்பாடு பணி நடைபெற்றுள்ளது. ஆகையால், பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்" என்றனர்.

    Next Story
    ×