search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காளை கருப்பனுடன் ஓட்டல் அதிபர்.
    X
    காளை கருப்பனுடன் ஓட்டல் அதிபர்.

    ஜல்லிக்கட்டில் காளையர்களை பந்தாட காத்திருக்கும் மதுரை ‘கருப்பன்’ காளை

    ஜல்லிக்கட்டில் காளை கருப்பன் களமிறங்கினால் வாடிவாசல் அதிரும், அடக்க நினைக்கும் இளைஞர்கள் கூட அடங்கி விலகியோடும் வீரமும் தீரமும் காளை கருப்பனுக்கு உண்டு.
    மதுரை:

    ஜல்லிக்கட்டு போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட பரிசுகளை வென்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்களை பந்தாட காத்திருக்கும் மதுரை கருப்பன் காளைக்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து மதுரை தொழிலதிபர் அழகு பார்த்து வருகிறார்.

    தமிழர் திருநாளாம் பொங்கல் என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான் அந்த அளவுக்கு பொங்கலும், ஜல்லிக்கட்டும் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல களைகட்டும் உன்னதமான திருநாள் தை திருநாள் ஆகும். ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை மாவட்டத்தில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலகலப்பு ஜோராக இருக்கும்.

    ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கான காளைகள் வாடிவாசலில் அணிவகுத்து தனது திமிலை நிமிர்த்தி கர்ஜனை காட்டி அடக்க நினைக்கும் காளையர்களிடம் வீரத்தைக்காட்டி பார்வையாளர்களை மனமகிழ செய்யும் உன்னதமான போட்டியாக ஜல்லிக்கட்டு திகழ்ந்து வருகிறது.

    ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தான் விவசாயம் செழிக்கும் என்பது மதுரை மாவட்ட மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் இருந்தாலும் அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

    மதுரை மட்டுமல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டில் கலந்துகொண்டு இதுவரை 300 பரிசுகளை குவித்த மதுரை கருப்பன் காளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளையர்கள் பந்தாட காத்திருக்கிறது. இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காளை கருப்பனுக்கு விசே‌ஷ பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    தினமும் நீச்சல், மணல் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பருத்திக் கொட்டை, பேரிச்சம்பழம், கடலைப்புண்ணாக்கு, கடலை மிட்டாய் உள்ளிட்ட சத்தான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் இதுவரை நடைபெற்ற ஏராளமான
    ஜல்லிக்கட்டு
    போட்டிகளில் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட பரிசுகளை குவித்த காளை கருப்பன், சுமார் ஒரு கிலோ எடை கொண்ட வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 5 பவுன் எடை கொண்ட தங்க ஆபரணங்களை அணிவித்து அழகு பார்த்து வருகிறார் மதுரை ஹோட்டல் அதிபரான ஜெயராமன். தனது ஜல்லிக்கட்டு காளை கருப்பனை தன் பிள்ளையை போல தினமும் பராமரித்து வளர்த்து வருகிறார்.

    காளைக்கு அணிவிக்கப்பட்ட 5 பவுன் நகை.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், இதுவரை பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொண்டு கருப்பன் 300-க்கும் மேற்பட்ட பரிசுகளை குவித்துள்ளது. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், புதுக்கோட்டை, விராலிமலை, சிராவயல், அரளிப்பாறை, தர்மபுரி, ஈரோடு, குமாரபாளையம், கண்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் கருப்பன் களமிறங்கியது.

    இதுவரை எந்த மாடுபிடி வீரர்களாலும் கருப்பனை பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பரிசுகளை அள்ளி வந்த வீரன் எங்கள் கருப்பன். தங்க காசுகள், குத்துவிளக்கு, மோட்டார் சைக்கிள், சைக்கிள், மிக்சி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பரிசுகளை கருப்பன் வென்றுள்ளது. தினந்தோறும் உரிய பயிற்சிகள் மற்றும் சத்தான உணவுகளை வழங்கி வருகிறோம்.

    வருகிற 14-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களமிறங்க காளை கருப்பனுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காளை கருப்பன் களமிறங்கினால் வாடிவாசல் அதிரும், அடக்க நினைக்கும் இளைஞர்கள் கூட அடங்கி விலகியோடும் வீரமும் தீரமும் காளை கருப்பனுக்கு உண்டு. இந்த போட்டியிலும் நிச்சயம் வீரர்களை பந்தாடி வெற்றிப்பரிசை கருப்பனே பெறும் என்று கம்பீரத்தோடு சொன்னார் ஜெயராமன்.

    இவரைப்போல மதுரை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் போட்டிகளில் பங்கேற்க தயாராகி வருகின்றன.


    Next Story
    ×