search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருகாவூரில் நடமாடும் வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் ஒருவரின் உமிழ்நீரை சேகரித்த போது எடுத்த படம்.
    X
    விருகாவூரில் நடமாடும் வாகனம் மூலம் மருத்துவக்குழுவினர் ஒருவரின் உமிழ்நீரை சேகரித்த போது எடுத்த படம்.

    கள்ளக்குறிச்சியில் கொரோனாவுக்கு புத்தக கடை உரிமையாளர் பலி - மேலும் 102 பேருக்கு தொற்று உறுதி

    கள்ளக்குறிச்சியை சேர்ந்த புத்தக கடை உரிமையாளர் கொரோனாவுக்கு பலியானார். மேலும் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 102 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் 1621 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 810 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு புத்தக கடை உரிமையாளர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் விவரம் வருமாறு:-

    கள்ளக்குறிச்சி சேலம் மெயின்ரோட்டை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் அப்பகுதியில் புத்தக கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தனிவார்டில் அனுமதித்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 450 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 102 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட் டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1621-ல் இருந்து 1723 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 890 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் நேற்று ஒரே நாளில் 148 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 958 ஆக உள்ளது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் நோய் தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் கிராம பகுதிகளுக்கு சென்று தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுடைய உமிழ்நீரை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    அதன்படி முடியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருண் விவேக் தலைமையிலான மருத்துக்குழுவினர் தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராம பகுதிக்கு நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சென்று அங்கிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
    Next Story
    ×