search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை
    X
    ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

    2-வது முறை கொரோனா தாக்கியதில் நர்ஸ் உயிரிழப்பு

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு நர்ஸ் உயிரிழந்தார். 2-வது முறை தொற்று தாக்கியதில் அவர் பலியானார்.
    சென்னை:

    கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள், போலீசார், தூய்மை பணியாளர்களிடம் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. எனவே கொரோனாவின் பிடியில் அவர்களும் சிக்கி வருகிறார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்தனர்.

    இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் இருந்த நர்ஸ் உயிரிழந்தார்.

    உயிரிழந்த நர்ஸ் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர். அவருக்கு வயது 53. இவர் கடந்த மார்ச் மாதம் முதல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் அவரை கொரோனா தாக்கியது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை முடிந்து 2-வது பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததும், வீடு திரும்பினார்.

    பின்னர் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு ஓய்வில் இருந்தார். இந்தநிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி ஏற்பட்டது. மீண்டும் அவர் பரிசோதனை செய்து கொண்டதில் 2-வது முறையாக கொரோனா தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மதியம் உயிரிழந்தார். அவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை நர்ஸ் கண்காணிப்பாளர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×