search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    விமானத்தில் வந்த போது நெஞ்சுவலியால் பயணி மரணம்

    விமானத்தில் வந்த போது நெஞ்சுவலியால் பயணி மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    குவைத்தில் இருந்து சென்னை வரும் குவைத் ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக சென்னையில் அதிகாலை 1.30 மணிக்கு தரை இறங்க வேண்டும்.

    அதே போல நேற்று முன்தினம் 287 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. நள்ளிரவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது அதில் பயணம் செய்த திருப்பதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு பாலாஜி (46) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

    அவர் இது குறித்து விமான பணிப் பெண்களிடம் கூறினார். அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் விமான பைலட்டுக்கு தகவல் கூறினர். அவர் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து வழக்கமான நேரத்துக்கு முன்பாக சென்னைக்கு இயக்கி வர உத்தரவிடப்பட்டது. அதன்படி அதிகாலை 12.30 மணிக்கு விமானம் சென்னை வந்தடைந்தது. அப்போது மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். அவர்கள் விமானத்திற்குள் ஏறி ஸ்ரீனிவாசலு பாலாஜியை சோதனை செய்தனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

    இது குறித்து விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    விமானத்தில் பயணி யாராவது இறந்தால் விமானத்தை முழுமையாக சுத்தம் செய்து விட்டுதான் இயக்கப்படும். அதன்படி விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது.

    இதனால் 2.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக அதிகாலை 5 மணிக்கு குவைத்துக்கு புறப்பட்டு சென்றது.

    Next Story
    ×