search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூலிப்படையினர் வந்த கார்.
    X
    கூலிப்படையினர் வந்த கார்.

    பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல்- திருமணத்துக்கு மறுத்த வாலிபரை கொல்ல கூலிப்படை அனுப்பிய பெண்

    பேஸ்புக் காதலரை தீர்த்து கட்ட பெண் அனுப்பிய கூலிப்படையினர் 9 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி வீரபாண்டி அருகில் உள்ள காட்டுநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அப்போது பேஸ்புக் மூலம் மலேசியாவை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அறிமுகமானார். அவர்கள் 2 பேரும் பேஸ்புக் மூலமே நண்பர்களாக பேசி வந்துள்ளனர். மேலும் நாளடைவில் செல்போன் மூலம்பேசி வந்துள்ளனர்.

    அவர்களுக்கு இடையே பணபரிமாற்றமும் நடந்துள்ளது. இந்த சமயத்தில் அமுதேஸ்வரி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரிடம் கூறி உள்ளார். ஆனால் தன்னைவிட வயது அதிகம் என்பதால் தன் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என கூறி அசோக்குமார் மறுத்து விட்டார். அதன்பிறகு மலேசியாவில் இருந்து கவிதா என்பவர் அசோக்குமாரின் செல்போனுக்கு பேசி உள்ளார். தான் அமுதேஸ்வரியின் அக்கா என்று அறிமுகமாகி உள்ளார்.

    திருமணத்துக்கு சம்மதிக்காததால் அமுதேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என அசோக்குமாரிடம் கூறினார். மேலும் இந்த விபரத்தை அவர் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தெரிவித்ததால் அவரை வேலையில் இருந்து நீக்கி விட்டனர். இதனையடுத்து அசோக்குமார் தனது சொந்த ஊருக்கே வந்து விட்டார்.

    அதன்பிறகு தேனிக்கு வந்த கவிதா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அசோக்குமாரிடம் கூறி உள்ளார். இல்லை எனில் தானும் தற்கொலை செய்து கொள்ளுவேன் என்றும் எனது சாவுக்கு நீதான் காரணம் என எழுதி வைப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.

    இதனையடுத்து அசோக்குமார் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின்பேரில் தேனி போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அமுதேஸ்வரி, கவிதா ஆகிய 2 பெயர்களிலும் பேசியது ஒரே நபர்தான் என உறுதிசெய்தனர். அவரது பாஸ்போட்டை வாங்கி சோதனை செய்ததில் அவரது பெயர் விக்னேஸ்வரி (45) என தெரிய வந்தது. வாலிபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நோக்கத்தில் மலேசியாவில் இருந்து வந்த விக்னேஸ்வரியை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிய அசோக்குமாரை தீர்த்து கட்ட விக்னேஸ்வரி முடிவு செய்தார். இதனையடுத்து பேஸ்புக் மூலம் தேனியை சேர்ந்த 9 பேரை தேர்வு செய்தார். தான் பணம் தருவதாகவும் அசோக்குமாரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறி அவரது போன் எண் மற்றும் புகைப்படங்களை அளித்துள்ளார்.

    அதன்பேரில் போடி அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அவர்கள் தங்கி உள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இது குறித்து போடி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் அசோக்குமாரை தீர்த்து கட்டுவதற்காக அவரது நடவடிக்கைகளை மறைந்திருந்து கண்காணித்து வந்ததாக தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அன்பரசன் (24), கமுதியை சேர்ந்த முனுசாமி (21), அய்யனார் (39), முருகன் (21), ராமேஸ்வரத்தை சேர்ந்த ஜோசப் (20), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த யோகேஸ் (20), கார்த்திக் (21), தினேஷ் (22), விளாம்பட்டியை சேர்ந்த பாஸ்கரன் (47) ஆகிய 9 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்ய திட்டம் தீட்டி கொடுத்த விக்னேஸ்வரி மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேஸ்புக் மூலம் மலர்ந்த காதல் கொலை செய்யும் அளவுக்கு சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×