search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய்-குழந்தை உயிரிழப்பு
    X

    களக்காடு அருகே செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய்-குழந்தை உயிரிழப்பு

    களக்காடு அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் தாய்-குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி நம்பிதோப்பை சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி அகிலா (வயது 26). பி.இ. பட்டதாரி. இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அகிலா கர்ப்பமடைந்தார்.

    தலைபிரசவத்திற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிதோப்பில் உள்ள தனது தந்தை சுந்தரராஜன் வீட்டிற்கு வந்தார். அவருக்கு திருக்குறுங்குடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று (6-ந் தேதி) மாலையில் அகிலாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை உறவினர்கள் பிரசவத்திற்காக திருக்குறுங்குடி அரசு சுகாதார நிலையத்தில் மாலை 4 மணிக்கு அனுமதித்தனர். அப்போது அங்கு டாக்டர் இல்லை என்று கூறப்படுகிறது. இரு செவிலியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். டாக்டர் வராமல் செவிலியர்களே அகிலாவிற்கு பிரசவம் பார்த்தனர்.

    இரவு 7.45 மணிக்கு அகிலாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் அகிலாவும், அவரது ஆண் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் இல்லாததாலும், செவிலியர்களே பிரசவம் பார்த்ததாலேயே தாய், குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    தலை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இது குறித்து தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தர், நாங்குநேரி தொகுதி செயலாளர் ஈழவளவன், மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு துணை செயலாளர் பெரும்படையார், ஒன்றிய துணை செயலாளர் முருகன், தி.மு.க. நகர செயலாளர் கசமுத்து, ம.தி.மு.க. நகர செயலாளர் திருநாவுகரசு உள்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் , கிராம மக்கள், உறவினர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு 8 மணிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணியில் இல்லாத டாக்டர் மீதும், தவறான முறையில் பிரசவம் பார்த்து, இளம் பெண்ணும், குழந்தையும் உயிரிழப்புக்கு காரணமான செவிலியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    இதையடுத்து நாங்குநேரி டி.எஸ்.பி. இளங்கோவன், தாசில்தார் ரகுமத்துல்லா, சுகாதார துணை இயக்குனர் செந்தில்முருகன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


    மாவட்ட கலெக்டர் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது வரை உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி தொடர்ந்து அவர்கள் இரவு முழுவதும், விடிய, விடிய அங்கு தரையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

    எனினும் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் ஆகும். ஆப்ரே‌ஷன் தியேட்டர் வசதியும் உள்ளது. 4 டாக்டர்கள் பணி புரிகின்றனர். இதில் 3 டாக்டர்கள் மேல் சிகிச்சைக்கு சென்று விட்டதால் தான் டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்முருகன் தெரிவித்தார்.

    மேலும் இளம்பெண்ணுக்கு பிரசவம் பார்த்த செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் நேற்று இரவு 8 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 8 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இன்று அதிகாலை 4 மணிக்கு போராட்டத்தை கைவிட்டனர்.

    சுந்தர்ராஜன்- சுசீலா தம்பதியினருக்கு அகிலா ஒரே மகள் ஆவார். ஒரே மகளை பறி கொடுத்த அவர்களும், உறவினர்களும் கதறி துடித்தது காண்போர் நெஞ்சை கரைப்பதாக இருந்தது.

    இது குறித்து அப்பகுதியினர், பொதுநல அமைப்பினர் கூறும்போது, ‘திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் செவிலியர்கள் நோயாளிகளிடம் எரிச்சலுடன் பேசுவதையும், அலட்சியமாக ஊசி போடுவதுமாக இருந்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட சுகாதார துறைக்கு பலமுறை பொதுமக்கள் மனு அளித்தும் சுகாதார துறையினர் கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் நடந்து கொண்டதே உயிரிழப்புக்கு காரணம்’ என்று கூறினர்.

    மேலும் இதுவரை டாக்டர்கள் இல்லாமல் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×