search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை
    X

    கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை

    கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் சரவணன்.

    சாய்ராம் கல்லூரியில் இவர் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற மாணவர் சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை.

    இதுபற்றி மறுநாள் அவரது தாய் சங்கரி ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆனால் சரவணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் சரவணனின் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.

    இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் கல்குவாரியில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது காஞ்சிபுரம் மாவட்ட காயார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் ஆதம்பாக்கத்தில் மாயமான மாணவர் சரவணன் உடல் என்பது தெரிய வந்தது. சரவணனின் தலையில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சரவணனை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று கடத்தி கொலை செய்துள்ளனர்.

    பின்னர் பெரிய கல்லை கட்டி உடலை குவாரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரவணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.

    சரவணனுக்கு நண்பர்கள் அதிகம். வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் எங்கு சென்றார்? கொலையாளிகளிடம் சிக்கியது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. கடந்த 22-ந்தேதி காணாமல்போன அன்று சரவணன் கடைசியாக யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    காதல் தகராறில் கொலை நடந்ததா? நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது இதுதொடர்பாக சரவணன் படித்துவந்த என்ஜினீயரிங் கல்லூரியில் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும்போது, கொலையாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

    இதன்மூலம் கூலிப்படையினர் சரவணனை கடத்திச் சென்று கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    மாணவர் சரவணனின் உடலை மீட்ட காயர் போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    மாயமாகி 7 நாட்களுக்கு பின்னர் சரவணன் உடல் மீட்கப்பட்டதால் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. அவரது போட்டோ மற்றும் பெற்றோர் கூறிய அடையாளத்தை வைத்தே சரவணனின் உடல் அடையாளம் காணப்பட்டது.

    Next Story
    ×