search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான ஜெயசித்ரா- தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த மிதுன்
    X
    கைதான ஜெயசித்ரா- தண்ணீர் தொட்டியில் இறந்து கிடந்த மிதுன்

    பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் கொலை- பதுங்கியிருந்த தாய் சிக்கினார்

    பண்ருட்டி அருகே 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் புதுவையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா(வயது 27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லட்சன் வீட்டில் இருந்த அண்டாவில் இருந்த தண்ணீரில் பிணமாக கிடந்தான். அப்போது தாய் ஜெயசித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை போலீசார் பிடித்த போது, குழந்தை அண்டாவில் தவறி விழுந்து இறந்தது என்று கூறினார். இதை நம்பிய போலீசார் அவரை விட்டு விட்டனர்.

    இந்த சோக சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார். கடந்த 1-ந்தேதி சிலம்பரசன் வேலைக்கு சென்றார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர்.

    அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுனும் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

    இது குறித்து சிலம்பரசன் வளவனூர் போலீசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்பட்டனர்.

    இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. எனவே 2 மாவட்ட போலீசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை பிடிக்க தனிப்படை அமைத்தனர். அவர்கள் ஜெயசித்ராவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவரின் உறவினர்களை பிடித்து விசாரித்தனர். ஜெயசித்ராவின் செல்போன் நம்பரை ஆய்வு செய்து, அவர் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் சேகரித்தனர். ஆனால் ஜெயசித்ரா எங்கு இருக்கிறார்? என்ற தகவல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு பகுதியில் ஜெயசித்ரா பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பதுங்கியிருந்த ஜெயசித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் அவரை வளவனூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஜெயசித்ரா, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை வளவனூர் அருகே உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையின் முடிவில் குழந்தைகள் இறந்த விவரம் தெரிய வரும்.
    Next Story
    ×