search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
    X

    திண்டுக்கல் அருகே சாலை விபத்துகளில் வாலிபர் உள்பட 2 பேர் பலி

    திண்டுக்கல் அருகே இன்று நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள எஸ்.வாடிப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (வயது 32). விவசாயி. இவர் இன்று தனது உறவினர் நாகராஜ் (32), தனுசுராஜா (15) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் - பழனி சாலையில் வந்து கொண்டு இருந்தார்.

    சுரைக்காய் பட்டியைச் சேர்ந்த ரத்தினசாமி (27) என்பவரது தந்தை முருகானந்தத்தை பாம்பு கடித்து விட்டது. அவரை காரில் ஏற்றிக் கொண்டு ரத்தினசாமி அண்ணா பல்கலைக்கழகம் அருகே வந்து கொண்டு இருந்தார்.

    முன்னால் சென்று கொண்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது கார் பயங்கரமாக மோதியதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் மண்டையன் (45). இவர் ஒரு காரில் கரூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அவருடன் சின்னதம்பி என்பவரும் சென்றார். தாடிக்கொம்பு அருகே பைபாஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த போது எதிரே சேலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது.

    இதில் காருக்குள் சிக்கிய மண்டையன் சம்பவ இடத்திலேயே பலியானார். சின்னதம்பி படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த சேலத்தை சேர்ந்த பச்சை முத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×