என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22-ந்தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதில் ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.
நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெறவில்லை. 5 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. 4 பிளே-ஆப் இடங்களுக்கு 7 அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான சண்டை காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததால் இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் கடந்த 8-ந்தேதி இரவு நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டம் (58-வது லீக் ஆட்டம்) பாதியில் கைவிடப்பட்டது. அத்துடன் ஐ.பி.எல். தொடர் ஒருவாரம் தள்ளிவைக்கப்படுவதாக அடுத்த நாளில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா- பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை தொடர்ந்து, அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள், பாதுகாப்பு முகமை உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய ஐ.பி.எல். போட்டி இன்று (சனிக்கிழமை) தொடங்கி ஜூன் 3-ந் தேதி வரை நடைபெறும் என்று கடந்த 12-ந் தேதி அறிவித்தது. எஞ்சிய ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணையும் வெளியிடப்பட்டது.
இதன்படி பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப்- டெல்லி அணிகள் இடையிலான மோதல் உள்ளிட்ட 13 லீக் ஆட்டங்கள் பெங்களூரு, ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத் ஆகிய நகரங்களில் அரங்கேறுகிறது. லீக் சுற்று வருகிற 27-ந் தேதி நிறைவு பெறுகிறது. முதலாவது தகுதி சுற்று 29-ந்தேதியும், வெளியேற்றுதல் சுற்று 30-ந்தேதியும், இரண்டாவது தகுதி சுற்று ஜூன் 1-ந் தேதியும், இறுதிப்போட்டி ஜூன் 3-ந்தேதியும் நடைபெறுகிறது. 'பிளே-ஆப்' சுற்று நடைபெறும் இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், 8 நாள் இடைவெளிக்கு பிறகு திருத்தி அமைக்கப்பட்ட புதிய அட்டவணையின்படி 58-வது லீக் ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்து வீறுநடை போடுகிறது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்து விடும்.
சென்னைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது கைவிரலில் காயம் அடைந்த கேப்டன் ரஜத் படிதார் முழு உடல் தகுதியை எட்டி இருப்பது பெங்களூரு அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். போட்டி ஒத்திவைக்கப்படாமல் இருந்திருந்தால் அவர் இரண்டு ஆட்டங்களை தவறவிட வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கும். அதே சமயம் போட்டி தள்ளிவைக்கபட்டதால் தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இந்தியா வரவில்லை. 18 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்திய அவர் ஒதுங்கி இருப்பது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாகும்.
பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி (505 ரன்) சூப்பர் பார்மில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் ஆடும் முதல் ஆட்டம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கேப்டன் ரஜத் படிதார், டிம் டேவிட், ஜேக்கப் பெத்தேல் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி இங்கிடி, சுயாஷ் ஷர்மா பலம் சேர்க்கின்றனர்.
கொல்கத்தா அணி 12 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை (பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 11 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நல்ல ரன்-ரேட்டுடன் இருப்பதுடன், மற்ற அணிகளின் முடிவும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான கதவு திறக்கும்.
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். வெங்கடேஷ் அய்யரின் பேட்டிங் மெச்சும்படி இல்லை. ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் அவ்வப்போது கைகொடுக்கிறார்கள். பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா, ஹர்திஷ் ராணா மிரட்டக்கூடியவர்கள். சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி (இங்கிலாந்து) விலகி இருப்பது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்த பெங்களூரு அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு முதல் அணியாக நுழைய தீவிரம் காட்டும். அதேநேரத்தில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை இழக்காமல் இருக்க கொல்கத்தா அணி எல்லா வகையிலும் போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் கொல்கத்தா 20 ஆட்டங்களிலும், பெங்களூரு 15 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பெங்களூருவில் நேற்று மழை பெய்தது. இதேபோல் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. ஒரு வேளை மழையால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டால் கொல்கத்தாவின் அடுத்த சுற்று கனவு தகர்ந்து விடும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பெங்களூரு: விராட் கோலி, பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல் அல்லது மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், லுங்கி இங்கிடி, யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா.
கொல்கத்தா: ரமனுல்லா குர்பாஸ், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி அல்லது மனிஷ் பாண்டே ,ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அன்ரிச் நோர்டியா அல்லது ஸ்பென்சர் ஜான்சன்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் பயணம்செய்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த 7-ம் தேதி ஓய்வு பெற்றார். இதனால் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருக்கிறார். சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் பேசியதாவது:
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் சுப்மன் கில் என எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா கேப்டன் பதவிக்கு நல்ல தேர்வாக இருப்பார். அதே நேரத்தில் இந்திய அணியில் மிகவும் அனுபவமிக்க வீரரான ரவீந்திர ஜடேஜாவை மறந்து விடக்கூடாது. அவரது பெயரும் கேப்டன்ஷிப்புக்கான பரிசீலனையில் இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு இளம் வீரரை கேப்டனாக உருவாக்க நினைத்தால், அவரை முதலில் 2 ஆண்டுகள் துணை கேப்டனாக நியமித்து பயிற்சி அளியுங்கள். அதன்பிறகு அவரிடம் முழு நேர கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம்.
அடுத்த 2 ஆண்டுக்கு ஜடேஜாவை கேப்டனாக நியமித்து அவரது தலைமையின் கீழ் கில்லுக்கு பயிற்சி அளிக்கலாம். ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்று நம்புகிறேன். இதனால் கில்லுக்கு கவுரவம் கிடைத்தால் அது அவர் கேப்டனாக மாறுவதற்கு எளிதாக இருக்கும்.
ஐ.பி.எல். தொடரில் ஒரு சீசனில் நன்றாக செயல்பட்டதை வைத்துக் கொண்டு டெஸ்ட் போட்டியில் கேப்டன்ஷிப்பை செய்து விட முடியாது. டெஸ்ட் கேப்டன் உள்ளூர் முதல் தர போட்டியில் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது.
- நானாக இருந்திருந்தால், ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார் என ரவி சாஸ்திரி கூறினார்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நீங்கள் சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பீர்கள் என ரோகித் சர்மாவிடம் கூறியதாக இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் போட்டிகளில் டாஸ் சுண்டப்படும்போது, ரோகித் சர்மாவை நான் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். டாஸ் சுண்டப்படும்போது, பேசுவதற்கு அதிக நேரம் இருக்காது. இருப்பினும், ஒருபோட்டியின்போது ரோகித் சர்மாவிடம் நான் பேசினேன்.
நான் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், நீங்கள் பார்டர் -கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருந்திருக்க மாட்டீர்கள் என அவரிடம் கூறினேன்.
தொடர் இந்தியாவின் கையை விட்டு நழுவவில்லை. அதனால், நீங்கள் கடைசி போட்டியில் விளையாடியிருப்பீர்கள். அந்த சூழலில் போட்டியில் நீங்கள் விளையாடியிருக்க வேண்டும். சிட்னியின் சவாலான ஆடுகளத்தில் டாப் ஆர்டரில் நீங்கள் 35-40 ரன்கள் எடுத்திருந்தால் அந்த தொடர் சமனில் கூட முடிந்திருக்கலாம்.
ஆனால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது. நானாக இருந்திருந்தால், ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட்டில் விளையாடியிருப்பார். அது என்னுடைய ஸ்டைல். அதனை ரோகித் சர்மாவுக்கு தெரியப்படுத்தினேன். இந்த விஷயம் நீண்ட நாள்களாக எனக்குள் இருந்தது. அதனை வெளிக்கொண்டு வர வேண்டும் என நினைத்தேன். அதனை ரோகித் சர்மாவிடம் கூறிவிட்டேன்
என ரவி சாஸ்திரி கூறினார்.
- இந்தியா- இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ- இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 போட்டிகளில் மோதுகிறது.
- இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து லயன்ஸ் அணியும் 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரனும் துணை கேப்டனாக துருவ் ஜூரலும் நியமிக்கப்பட்டுள்ளனர். ருதுராஜ், இஷான் கிஷன் ஆகியோர் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.
18 பேர் கொண்ட இந்திய ஏ அணி:-
அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல் (துணை கேப்டன்)), நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் காம்போஜ், ருதுராஜ், கான்போஜ், தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே, கலீல் அகமது.
- மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது.
மும்பை:
இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்க தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் கலந்து கொண்டனர்.
அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர்.
மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. இவர்கள் 3 பேரின் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டன.
- ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன்.
- பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் இந்தியா செல்லக்கூடாது என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என்னிடம் மீண்டும் இந்தியாவுக்குச் சென்று ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்று சொன்னால், நான் நிச்சயமாக 'முடியாது' என்று சொல்லி இருப்பேன். அது மிகவும் எளிதான முடிவாக இருந்திருக்கும். வாழ்க்கையும் பாதுகாப்பும் மிகவும் முக்கியமானவை. நமது சம்பளம் அல்ல. இது தனிப்பட்ட முடிவு. யாரையும் கட்டாயப்படுத்தியோ, அழுத்தத்தை உணர வைத்தோ மீண்டும் போய் விளையாட வேண்டும் எனச் சொல்ல முடியாது.
பணமா? பாதுகாப்பா? என்ற கேள்வி வந்தால் பாதுகாப்பு தான் முக்கியம் என்பேன். இது எனது தனிப்பட்ட முடிவு. எந்தவொரு வீரரும் ஐபிஎல் அல்லது பாகிஸ்தான் சூப்பர் லீகில் விளையாடியாக வேண்டுமென்ற அழுத்தத்தை எதிர்கொள்ள கூடாது.
மேலும், ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி ஜுன் 3-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஒரு வார காலத்தில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக வீரர்கள் தயாராக வேண்டி உள்ளது. அதையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
என ஜான்சன் கூறியுள்ளார்.
- மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.
சிட்னி:
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். இருப்பினும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் மீண்டும் ஐ.பி.எல். தொடருக்கு திரும்ப மாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி அணி நிர்வாகத்திற்கு அவர் தெரிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற குறைந்தபட்சம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் முன்னணி வீரரான இவரது விலகல் டெல்லி அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது.
நடப்பு ஐ.பி.எல். 12 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2022 மெகா ஏலத்தில் எடுப்பதாக அணி நிர்வாகம் கூறியது.
- ஆனால் ஏலத்தில் எடுக்காமல் காயத்திற்கான மாற்று வீரராக தேர்வு செய்தது.
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தலைமையில் ஆர்சிபி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்து விடும்.
இந்த சீசனில் ரஜத் படிதார் 11 போட்டிகளில் 239 ரன்கள் அடித்துள்ளார். ஆர்சிபி அணி 2022 ஏலத்தின்போது தன்னை ஏலம் எடுப்பதாக உறுதி அளித்தது. ஆனால் ஏலம் எடுக்கவில்லை. காயம் காரணமாக ஒருவர் விலகியதால் மாற்று வீரருக்கு அழைப்பு விடுத்தது. இதனால் வருத்தம் அடைந்தேன். கோபமும் அடைந்தேன் என ரஜத் படிதார் தெரிவித்தார்.
இது தொடர்பாக ரஜத் படிதார் கூறியதாவது:-
ஐபிஎல் 2022 ஏலத்தின்போது, ஏலத்தில் உங்களை எடுக்க இருக்கிறோம். தயாராக இருக்கவும் என அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல் வந்தது. இதனால் ஆர்சிபி அணிக்காக விளையாடும் மற்றொரு வாய்ப்பை பெற இருக்கிறோம் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள் இருந்தது. ஆனால் மெகா ஏலத்தில் என்னை ஏலம் எடுக்கவில்லை. இதனால் சற்று வருத்தம் அடைந்தேன்.
ஏலத்தில் எடுக்காததால், என்னுடைய உள்ளூர் போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன். பின்னர், காயம் காரணமாக லவ்னித் சிசோடியா அணியில் இருந்து விலகியுள்ளார். இதனால் மாற்று வீரரான உங்களை தேர்வு செய்ய இருக்கிறோம் என என்கு அழைப்பு வந்தது. நான் வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், மாற்று வீரராக செல்ல விரும்பவில்லை. ஏனென்றால், எனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பது தெரியும். மேலும் வெளியில் உட்கார விருப்பம் இல்லை.
விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர் அணியில் இருக்கும்போது ஆர்சிபி நிர்வாகம் கேப்டன் பதவியை தந்தபோது எனக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் விராட் கோலி எனக்கு நம்பிக்கை அளித்தார்.
இவ்வாறு ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.
- சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகிறது.
- போர் பதற்றத்தால் தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடக்கும் 58-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்- நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.
இதற்கிடையே போர் பதற்றத்தால் அவசரமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா வரத் தொடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், வெஸ்ட் இண்டீசின் ரொமாரியோ ஷெப்பர்டு, இங்கிலாந்தின் ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டன், தென்ஆப்பிரிக்காவின் இங்கிடி உள்ளிட்டோர் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் இணைந்தனர்.
இந்நிலையில் நேற்று பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால் சின்னசாமி மைதானத்தில் மழை நீர் தேங்கி நின்றது. இதனை பார்த்த ஆர்சிபி வீரர் டிம் டேவிட் மைதானத்தில் இறங்கி மழையில் ஆனந்த குழியல் போட்டார். மேலும் குழந்தையாக மாறிய அவர் மைதானத்தில் விரிந்திருந்த தார்பாயில் சறுக்கி விளையாடினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்ளில் வைரலாகி வருகிறது.
- லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்த முக்கியமான விளையாட்டு வடிவத்திற்கு சூழலை வழங்குகிறது.
லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்று பவுமா தெரிவித்துள்ளார்.
- மயங்க் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்தின் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
- புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.
மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே, இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியம் கொடுக்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இன்னும் 13 லீக் ஆட்டம் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- லீக் ஆட்டத்துடன் வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.
- இங்கிலாந்து- இந்தியா டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 20-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித், விராட் கோலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
இதையடுத்து, எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை நாளை பிசிசிஐ இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. புதிய கேப்டனை நியமிப்பது தொடர்பாக தலைமை பயிற்சியாளர் கம்பீருடன் பிசிசிஐ நாளை ஆலோசனை நடந்த உள்ளது . ஆலோசனைக்கு பிறகு புதிய கேப்டன் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் விளையாடுவதற்காக ஜூன் 6-ந் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்துடன் இருந்து வெளியேறும் அணியில் உள்ள வீரர்கள் ஜூன் 6-ம் தேதி பயிற்சியாளர் கம்பீருடன் புறப்படுவார்கள்.
மீதமுள்ள வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிறகு ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து புறப்படுவார்கள் என தெரிய வந்துள்ளது.






