search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் மேக்ஸ்வெல்
    X
    விக்கெட் கைப்பற்றிய உற்சாகத்தில் மேக்ஸ்வெல்

    ஐபிஎல்: சென்னை அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

    174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர்.
    புனே:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று புனேயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணிகள் மோதின. முதலில் ஆடிய பெங்களூரு அணி,  8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக மகிபால் லாம்ரர் 42 ரன்கள் சேர்த்தார். டூ பிளெசிஸ் 38 ரன், விராட் கோலி 30 ரன் சேர்த்தனர்.

    இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு, ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். கெய்க்வாட் 28 ரன்களும், அதிரடியாக ஆடிய கான்வே 56 ரன்களும் அடித்தனர். 

    அதன்பின்னர், உத்தப்பா (1), அம்பதி ராயுடு (10), ஜடேஜா (3) ஆகியோர் தாக்குப்பிடிக்காத நிலையில், அதிரடி காட்டிய மொயீன் அலி 34 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி 2 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதனால் சென்னை அணி தோல்வியை நோக்கி பயணித்தது. 

    கடைசி ஓவரில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் சிக்சர் அடித்த பிரிட்டோரியஸ் இரண்டாவது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து தீக்சனா ஒரு சிக்சர் உள்பட 7 ரன்களே சேர்த்தார். அந்த ஓவரில் எக்ஸ்ட்ரா 4 ரன்கள் உள்பட மொத்தம் 17 ரன்களே கிடைத்தது. இதனால் பெங்களூரு அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

    பெங்களூரு தரப்பில் ஹர்சல் பட்டேல் 3 விக்கெட் கைப்பற்றினார். மேக்ஸ்வெல் 2 விக்கெட் எடுத்தார்.
    Next Story
    ×