search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் தலைவாஸ்
    X
    தமிழ் தலைவாஸ்

    புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்குமா?- தெலுங்கு டைட்டன்சுடன் இன்று மோதல்

    7-வது புரோ கபடி லீக்கில் தமிழ் தலைவாஸ் அணி தொடக்க போட்டியிலேயே வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
    7-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி ஐதராபாத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் யு மும்பை அணி 31-25 என்ற கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. 2-வது போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூர் புல்ஸ் 34-32 என்ற கணக்கில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரேட்சை தோற்கடித்தது.

    2-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ரோகித்குமார் தலைமையிலான பெங்களூர் புல்ஸ்- சுனில்குமார் தலைமையிலான குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூர் அணி தொடர்ந்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. குஜராத் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் வேட்கையில் இருக்கிறது.

    இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று தமிழக கபடி ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள்.

    கடந்த சீசன்களில் தமிழ் தலைவாஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. இதனால் இந்த சீசனில் வீரர்களை மாற்றி அமைத்து உள்ளது. இதற்கு நல்ல பயன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இந்தப்போட்டி தொடரில் அதிக புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் இருப்பவரும், 6 சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு ஆடியவருமான ராகுல் சவுத்ரியை தமிழ் தலைவாஸ் அணி தற்போது தன்வசப்படுத்தி உள்ளது. அஜய் தாகூருடன் இணைந்து அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    இதுதவிர சபீர்பாபு, மொகித் சில்வார், ரான்சிங் போன்ற சிறந்த வீரர்களும் எடுக்கப்பட்டு உள்ளனர். ஆல்ரவுண்டர் வரிசையில் மஞ்சித் சில்வார் சிறப்பாக செயல்படக்கூடியவர்.

    அபோசர் தலைமையிலான தெலுங்கு டைட்டன்ஸ் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரிடம் தோற்றது. இதனால் தமிழ் தலைவாசை வீழ்த்தி முதல் வெற்றியை பெறும் ஆர்வத்தில் இருக்கிறது.
    Next Story
    ×