search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    62 பந்தில் சதம் - அம்பதி ராயுடுவுக்கு டோனி பாராட்டு
    X

    62 பந்தில் சதம் - அம்பதி ராயுடுவுக்கு டோனி பாராட்டு

    ஐ.பி.எல். தொடரில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 62 பந்தில் சதம் அடித்த அம்பதி ராயுடுவை, வெற்றிக்கு பிறகு கேப்டன் டோனி பாராட்டி உள்ளார். #SRHvCSK #Dhoni #AmbatiRayudu
    புனே:

    ஐ.பி.எல் போட்டியில் ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தி சென்னை அணி ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றது. புனேயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சன்ரைசஸ் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரர் அம்பதி ராயுடு அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 62 பந்தில் 100 ரன்குவித்தார். இதில் 7 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். ஐ.பி.எல் போட்டியில் அவரது முதல் சதம் இதுவாகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். இதன் மூலம் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. தான் விளையாடிய அனைத்து ஐ.பி.எல். போட்டிகளிலும் ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி என்ற முத்திரையை சென்னை சூப்பர் கிங்ஸ் பதித்தது.

    2 ஆண்டு தடைக்கு பிறகு விளையாடும் அந்த அணி இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருகிறது. ஐதராபாத்தை மீண்டும் வீழ்த்தியது. ஏற்கனவே அந்த அணியை அதன் சொந்த மண்ணில் 4 ரன்னில் வென்று இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர்கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-


    இந்த ஆடுகளத்தில் 2-வது பகுதியில் பந்து அதிகமாக ‘சுவிங்’ ஆகும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி நடக்காதது அதிர்ச்சியாக இருந்தது. வாட்சனும், அம்பதி ராயுடுவும் சிறப்பாக ஆடினார்கள். வாய்ப்பு கிடைத்த போது பவுண்டரிகளாக விளாசினார்கள். இல்லையென்றால் ஐதராபாத் அணி நிர்ணயித்த 180 ரன்னை சேஸ் செய்வது கடினமாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு முன்பே அம்பதி ராயுடுக்கு அணியில் இடத்தை ஒதுக்கி வைத்து விட்டேன். ஏனென்றால் அவர் திறமை மீது உயர்ந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். வேகப்பந்து, சுழற்பந்து என இரண்டிலும் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர்.

    அவரை பார்த்தால் அதிரடி பேட்ஸ்மேன் மாதிரி தெரியாது. ஆனால் எப்போதுமே சிறந்த ஷாட்களை ஆடக் கூடியவர். அதனால் கேதர் ஜாதவ் உடல் தகுதியுடன் இருந்தால் ராயுடுவை தொடக்க வீரராக களம் இறக்க முதலிலேயே முடிவு செய்துவிட்டேன். ஜாதவ் 4 அல்லது 5-வது வீரராக களமிறங்க முடிவு செய்தோம்.

    எதிர்பாராதவிதமாக நாங்கள் ஒரு போட்டியில் மட்டுமே சென்னையில் ஆடினோம். அடுத்து புனேக்கு வந்து விட்டோம். இங்கும் ரசிகர்கள் ஆதரவு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை அணி 13-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 18-ந்தேதி சந்திக்கிறது. ஐதராபாத் அணி 17-ந்தேதி பெங்களூரை எதிர்கொள்கிறது. #SRHvCSK #CSKvSRH #Dhoni #AmbatiRayudu
    Next Story
    ×