search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலச்சரிவால் உடைந்த பாலம்
    X
    நிலச்சரிவால் உடைந்த பாலம்

    நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி -ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

    விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
    சிம்லா:

    இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் உள்ள சங்லா பள்ளத்தாக்கில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாகச் சுற்றுலாப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். 

    நிலச்சரிவின்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு உடைத்து கீழே பள்ளத்தாக்கில் விழுகிறது. இதில் அங்கிருந்த பாலம் உடைகிறது.


    சம்பவ இடத்திற்கு உடனடியாக மருத்துவ குழுவினர் விரைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கின்னார் மாவட்ட எஸ்பி சஜு ராம் ராணா தெரிவித்திருந்தார். 

    இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய விரும்புகிறேன்” என்று அதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதிவிட்டுள்ளார்.

    இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாய் வழங்குவதாக கூறி உள்ளார்.
    Next Story
    ×