
குஜராத்தின் டோல்கா தாலுகாவில் பதார்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது நிலத்திற்கான ஆவணங்களில் திருத்தம் செய்வதற்காக தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். அப்போது வருவாய் அதிகாரியும், அவரது உதவியாளரும் நிலத்தை அளந்து, திருத்தம் செய்து ஒப்புதல் வழங்க ரூ.25 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அவர், லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்.
உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார், வருவாய் அதிகாரியையும், உதவியாளரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டம் தீட்டினர். அதன்படி நிலத்துக்காரர் பணம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். வருவாய் அதிகாரியிடம் இருந்து ரூ.20 லட்சமும், உதவியாளரிடம் இருந்து 5 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது.