search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதிய பாராளுமன்ற கட்டிடம்
    X
    புதிய பாராளுமன்ற கட்டிடம்

    புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

    புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். கட்டுமான பணி 2 ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை.

    எனவே, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்துக்கு அருகிலேயே புதிய கட்டிடம் எழுப்பப்படுகிறது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

    அதன்படி, புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு இன்று (வியாழக்கிழமை) அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டி வைக்கிறார். பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார்.

    மத்திய மந்திரிகள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். சில மாநிலங்களின் கவர்னர்கள், முதல்-மந்திரிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள்.

    ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்படுகிறது. 2022-ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே ஆண்டில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அதற்குள் புதிய பாராளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது.

    அதைத்தொடர்ந்து தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும். பாராளுமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்தப்படும்.

    டாடா நிறுவனம், புதிய பாராளுமன்ற கட்டுமான பணிகளை மேற்கொள்கிறது. 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது.

    நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

    மக்களவையில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும்.

    பாராளுமன்ற கூட்டு கூட்டத்தின்போது, மக்களவையில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
    Next Story
    ×