search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீரமரணம் அடைந்த வீரர்கள்
    X
    வீரமரணம் அடைந்த வீரர்கள்

    எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் -2 இந்திய வீரர்கள் வீரமரணம்

    எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
    ஸ்ரீநகர்:

    பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறலில் ஈடுபடுகிறது. எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் வாயிலாக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து கண்டனங்கள் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் தொடர்கிறது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதலை தொடங்கியது. சுந்தர்பானி செக்டாரில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லையில் பதற்றம் உருவானது.

    பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் பிரேம் பகதூர் காத்ரி, சுக்பீர் சிங் ஆகியோர்  பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு முகாமிற்கு கொண்டு வரப்பட்டனர். எனினும் அவர்கள் இருவரும் சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இத்தகவலை ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார். 

    வீர மரணம் அடைந்த வீரர்களின் உயர்ந்த தியாகம் மற்றும் கடமை மீதான அவர்களின் பக்திக்கு நாடு எப்போதும் அவர்களுக்கு கடன்பட்டிருக்கும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

    நேற்று பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×