search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகிந்த ராஜபக்சேவுடன் உரையாடிய பிரதமர் மோடி
    X
    மகிந்த ராஜபக்சேவுடன் உரையாடிய பிரதமர் மோடி

    நண்பர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - பிரதமர் மோடி தமிழில் டுவீட்

    எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியா - இலங்கை இடையேயான உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டனர்.

    இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்சே மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவது இது முதல் தடவையாகும்.

    காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது,  இலங்கை பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், தனது அழைப்பை ஏற்று, இந்தியா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான மெய்நிகர் உச்சி மாநாடு நடத்த ஒப்புதல் தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி  குறிப்பிட்டார்.

    இந்நிலையில், எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தமிழில் கூறியிருப்பதாவது:

    எனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி, பொருளாதார உறவு, சுற்றுலாத் துறை, கல்வி, கலாசாரம், பரஸ்பர நலன் அடிப்படையிலான பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட தனித்துவமிக்க இந்திய-இலங்கை இருதரப்பு உறவுகள் குறித்து மீளாய்வு செய்தோம்.

    இந்தியா- இலங்கை பௌத்தஉறவை மேம்படுத்த USD 15 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறியத் தருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக புத்த பெருமான் போதனைகள் எமது நாகரிகங்களுக்கு வழிகாட்டுகின்றன. குஷிநகர் சர்வதேச விமான நிலையத்துக்கான முதல் சேவையில் இலங்கை பௌத்த யாத்திரிகர்களை வரவேற்க இந்தியா ஆவலுடன் உள்ளது.

    மேம்பட்ட வர்த்தகம் மற்றும் முதலீடு, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்பாடல் திட்டங்கள் ஊடாக பொருளாதார நட்புறவை வலுவாக்குவதில் இந்தியாவும் இலங்கையும் அர்ப்பணிப்புடன் உள்ளன. பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக போராட எமது பாதுகாப்புசார் உறவை தொடர்வதுடன் அது மேலும் வலுவாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×