search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை இடிக்கும் காட்சி
    X
    கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை இடிக்கும் காட்சி

    நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு- சட்டவிரோத கட்டுமானம் என குற்றச்சாட்டு

    சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.
    மும்பை:

    நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார். இதற்கு மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்- கங்கனா ரணாவத் இடையே வார்த்தை போர் நடந்தது.

    இதையடுத்து சொந்த ஊரான இமாசல பிரதேசத்தில் தங்கியுள்ள கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு கமாண்டோ பாதுகாப்பு வழங்கியது. மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியினருடன் மோதல் காரணமாக மும்பை பாந்திராவில் உள்ள தனது அலுவலகத்தை மும்பை மாநகராட்சி இடிக்கலாம் என கங்கனா ரணாவத் நேற்று முன்தினம் அச்சம் தெரிவித்து இருந்தார்.

    இந்தநிலையில் பாந்திரா, பாலிஹில்லில் உள்ள நடிகை கங்கனா ரணாவத்தின் பங்களா வீட்டில் பல்வேறு சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி அவருக்கு நேற்று காலை நோட்டீஸ் வழங்கியது. நடிகையின் வீட்டில் யாரும் இல்லாததால் அவரது வீட்டு வாசலில் அதிகாரிகள் நோட்டீசை ஒட்டிச்சென்றனர்.

    கங்கனா ரணாவத்தின் பங்களாவில் உரிய அனுமதி இல்லாமல் கழிவறை பகுதியை அலுவலகமாக மாற்றியதாகவும், படிக்கட்டு பகுதியில் புதிய கழிவறைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார். மேலும் மாநகராட்சியின் நோட்டீசுக்கு நடிகை கங்கனா ரணாவத் 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

    இந்நிலையில் கங்கனா ரணாவத்தின் வக்கீல் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், கங்கனா ரணாவத் வீட்டில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கங்கனா ரணாவத்தை அச்சுறுத்த முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

    இதனையடுத்து இன்று காலை 11 மணியளவில் மும்பை மாநகராட்சி சார்பில் மீண்டும் கங்கனா வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அதிகாரிகள் முன்னிலையில் கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. மும்பை மாநகராட்சியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில், கங்கனாவின் வக்கீல் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
    Next Story
    ×