search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு - சட்டம் ஒழுங்கை கண்காணிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு

    அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
    • அயோத்தியில் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ஒத்திவைத்தது.
    • இதன் தீர்ப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என்ற நிலையில் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.
    • தீர்ப்பை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

    இதுதொடர்பாக முதலில் நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாகப் பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது.
     
    ஆனால், அலகாபாத் கோர்ட்டு தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அப்பீல் மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது.

    இதற்கிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, 'வாழும் கலை' அமைப்பாளர் ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

    இந்த குழு இந்துக்களையும், முஸ்லிம்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. 4 மாதங்களாக நடந்த சமரச பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் தோல்வியில் முடிந்தது.

    அயோத்தி பிரச்சனை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. 40 நாட்களாக நடைபெற்ற வாதப் பிரதிவாதங்கள் அக்டோபர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்து,

    சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெறவுள்ள நவம்பர் 17-ம் தேதிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விரைவில் அளிக்கவுள்ள தீர்ப்பு அனைவராலும் மதிக்கப்பட வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்  என மாநில அரசுகளுக்கும், அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

    அந்த அறிக்கையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    Next Story
    ×