search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி
    X
    ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி

    காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார் பிரதமர் மோடி

    காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.
    ஜம்மு:

    நரேந்திர மோடி இந்நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார்.

    காஷ்மீரின் ஸ்ரீநகரில் இருந்து 123 கி.மீ. தூரத்தில் குரெஸ் ராணுவ முகாம் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜனதா தலைமையிலான ஆட்சி மலர்ந்து பிரதமரானதும், முதன் முறையாக மோடி இங்கு வந்து ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 

    ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இனிப்பு வழங்கினார்.

    2015-ம் ஆண்டு பஞ்சாப்பில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். 2016-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை இமாச்சலப் பிரதேசம் மாநில எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்.

    அதைதொடர்ந்து, 2017-ம் ஆண்டு மீண்டும் குரெஸ் ராணுவ முகாமிலும் 2018-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் ஹர்சில் எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுடனும் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார்.

    இந்நிலையில், தீபாவளி நாளான இன்று காஷ்மீரின் ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் காவல் காக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தார்.

    முதலில் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்களில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். 

    வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி

    பின்னர் அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாடிய பிரதமர் மோடி அவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும் அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு தனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காஷ்மீரை கைப்பற்றுவதற்காக 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் முதல் படைப்பிரிவு 27-10-1947 அன்று காஷ்மீருக்கு நுழைந்தது.

    அந்த நாளை குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 27-ம் தேதி ‘இன்பான்ட்டரி டே’ என்று நமது ராணுவ வீரர்களால் நினைவுகூர்ந்து கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்த  ‘இன்பான்ட்டரி டே’ தினமும் தீபாவளி பண்டிகையும் ஒரே நாளில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×