search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ‘வெறுப்பு இல்லா உலகம் படைக்க அனைவரும் ஒன்றுபடுவோம்’ - பிரதமர் மோடி அழைப்பு

    காந்தியடிகளின் கனவை நனவாக்கும் வகையில், வெறுப்பு இல்லா உலகம் படைக்க அனைவரும் ஒன்றுபட்டு உழைப்போம் என சர்வதேச சிந்தனையாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
    புதுடெல்லி:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அமெரிக்காவின் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் பிரதமர் மோடி சிறப்பு கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். ‘இந்தியாவுக்கும், உலகுக்கும் காந்தி ஏன் தேவை?’ என்ற தலைப்பில் அவர் எழுதியிருந்த கட்டுரையில் கூறியிருந்ததாவது:-

    காந்திஜி அல்லது பாபு, உலகின் கோடிக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து துணிச்சலை அளித்து வருகிறார். பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் காந்தியின் எதிர்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு, காந்தி இந்தியராகவும், தென் ஆப்பிரிக்கராகவும் தெரிந்தார். இதற்கு காந்தியும் ஒப்புதல் அளித்திருப்பார். மனித சமூகத்தில் நிலவிய சில மிகப்பெரிய முரண்பாடுகளுக்கு பாலமாக விளங்கும் தனிப்பட்ட திறனை காந்தி பெற்றிருந்தார்.

    காந்தியின் கொள்கைகளை எதிர்கால சந்ததியினரும் நினைவில் கொள்வதை எப்படி உறுதி செய்யப்போகிறோம்? இதற்கு, புதிய கண்டுபிடிப்புகள் மூலம் காந்தியின் கொள்கைகளை பரப்புமாறு சர்வதேச சிந்தனையாளர்கள், தொழில் முனைவோர், தொழில்நுட்ப தலைவர்களை அழைக்கிறேன்.

    வெறுப்பு, வன்முறை, துன்பம் இல்லாத, வளமான உலகம் படைக்க தோளோடு தோள் நின்று அனைவரும் உழைப்போம். அதன் மூலமே காந்தியடிகளின் கனவை நனவாக்க முடியும். அதை தனது புகழ்பெற்ற பாடலான ‘வை‌‌ஷ்ணவ ஜனா தோ’ மூலம் அவர் விளக்குகிறார். அதாவது அடுத்தவரின் வலியை உணர்ந்து, துயரத்தை போக்குபவரே உண்மையான மனிதன் என காந்தியடிகள் குறிப்பிடுகிறார்.

    தேசியவாதியாக இல்லாத ஒருவரால் சர்வதேசவாதியாக இருக்க முடியாது என கடந்த 1925-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் காந்தியடிகள் எழுதியிருக்கிறார். தேசியவாதம் ஒரு உண்மைத்தன்மையை எட்டினால் மட்டுமே சர்வதேசவாதம் சாத்தியமாகும் என அதில் அவர் கூறுகிறார்.சமூகத்தின் அனைத்து பிரிவினர் மீதும் அவர் அபரிமிதமான நம்பிக்கை வைத்திருந்தார். 1917-ம் ஆண்டு ஆமதாபாத்தில் ஜவுளித்துறையினர் மிகப்பெரிய வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். மில் உரிமையாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த இந்த போராட்டத்தை, காந்தியடிகள் மத்தியஸ்தராக இருந்து முடிவுக்கு கொண்டு வந்தார்.

    தொழிலாளர்களின் நலனுக்காக ‘மஜூர் மகாஜன் சங்கம்’ என்ற அமைப்பை அவர் உருவாக்கினார். மேலோட்டமாக பார்த்தால் இது மற்றுமொரு அமைப்பாகத்தான் தோன்றும். ஆனால் மிகப்பெரிய விளைவுகளை இந்த அமைப்பு உருவாக்கியது.அந்த நாட்களில் ‘மகாஜன்’ என்ற வார்த்தை உயர்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வார்த்தையாக இருந்தது. ஆனால் இதில் தொழிலாளர்கள் அல்லது மஜூர் என்ற பெயரை இணைத்ததன் மூலம் சமூக கட்டமைப்பை ஏற்படுத்தினார். அந்த மொழித்தேர்வு மூலம் அவர் தொழிலாளர்களின் பெருமையை அதிகரித்தார்.

    மகாத்மா காந்தியை பொறுத்தவரை, விடுதலை என்பது அன்னிய ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல. மாறாக, அரசியல் சுதந்திரத்துக்கும், தனிநபர் அதிகாரத்துக்கும் இடையேயான ஆழமான தொடர்பையும் அவர் பார்த்தார்.

    இவ்வாறு பிரதமர் மோடி தனது கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தார்.
    Next Story
    ×