search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்
    X
    சமூக வலைதளத்தில் வைரலாகும் வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்

    கேரளாவில் கல்லூரி விழாவின் போது பாகிஸ்தான் தேசியக்கொடி ஏந்திச் செல்லப்பட்டதா?

    கேரளாவில் பாகிஸ்தான் தேசியக்கொடியை கல்லூரி மாணவர்கள் ஏந்திச் சென்றார்களா? இல்லையா? என்பது குறித்து பார்ப்போம்.
    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், பேராம்பிரா அருகில் உள்ள கலைக் கல்லூரியில் மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரசாரம் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது, அந்தக் கல்லூரியில் பயிலும் சில மாணவர்கள் பாகிஸ்தானின் தேசியக்கொடியைப் போன்ற வடிவமைப்பு கொண்ட ஒரு கொடியை ஏந்தி வந்தனர். அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பைச் சேந்தவர்கள்.

    அவர்கள் கொடியை ஏந்தி வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து காவல் துறையின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து, வன்முறையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல்படுவது, சட்டவிரோதமாகக் கூடுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 30 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 6 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. 

    இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகவும் மாறியது. இதையடுத்து இதன் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில் அது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தேசியக்கொடியின் மையப்பகுதியில் பிறை நிலாவின் வடிவம் இடம்பெற்றிருக்கும், ஆனால் கேரள கல்லூரி மாணவர்கள் பயன்படுத்திய கொடியில் பிறை நிலாவின் வடிவம் இடதுபுற ஓரத்தில் இடம்பெற்றிருந்தது.

    கொடிகள்

    இந்த வீடியோ வைரலாக காரணம், அது எடுக்கப்பட்ட விதமும், அந்த கொடியின் வடிவமைப்பும் தான். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாணவர் பிரிவான முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் கொடியை டெய்லர் தவறுதலாக தைத்ததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 

    முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பின் கொடியில் வெள்ளை நிறமும், பச்சை நிறமும் சமமாக இருக்கும், ஆனால் பாகிஸ்தான் தேசியக்கொடியில் உள்ளது போல் கொடியை வடிவமைத்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும் பிறை நிலாவின் வடிவத்தை வைத்து இது பாகிஸ்தான் கொடி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

    இதுபோன்று வைரலாகும் செய்திகளின் உண்மைத்தன்மையை அறியாமல் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும்.
    Next Story
    ×