search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக எம்பி ஆ.ராசா
    X
    திமுக எம்பி ஆ.ராசா

    பாராளுமன்றத்தில் புறநானூறுக்கு திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்த திமுக எம்பி ஆ.ராசா

    நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியதற்கு திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
    புது டெல்லி:

    பாராளுமன்றத்தில் கடந்த ஜூலை 5ம் தேதி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, வரி விதிப்பு முறை குறித்தும் வரி வசூல் குறித்து பேசிய அவர், புறநானூற்றில் பிசிராந்தையார் பாடிய ‘யானை புக்க புலம் போல’ என்ற பாடலை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அந்த பாடல் வரிகள் வருமாறு:-

    ‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
    மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
    நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
    வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
    கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
    மெல்லியன் கிழவனாகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம் போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே’

    “வயலில் விளைந்துள்ள நெற்கதிர்களை அறுத்து, நெல்மணிகளை பிரித்து அரிசியாக்கிப் பின் சோற்றுக் கவளமாக்கி யானைக்கு உண்ணத் தந்தால், ஒரு துண்டு நிலத்தில் விளையும் அரிசியும் கூட அந்த யானைக்குப் பலநாள் உணவாகும். அப்படிச் செய்யாமல் அந்த யானையையே வயலுக்குள் சென்று பயிரை மேயுமாறு விட்டுவிட்டால், அதன் வாய்க்குள் செல்லும் நெல்லை விட அதன் கால் பட்டுக் கசங்கும் கதிர்களே மிகுதியாக இருக்கும்.

    நிர்மலா சீதாராமன்

    அதேபோல வரித் திணிப்புச் செய்து, இரக்கமின்றித் தன் குடிமக்களைக் கசக்கிப் பிழிந்து வரிவசூல் செய்ய அரசன் முற்பட்டால், அந்த நாடு ‘யானை புக்க புலம்’ போல அவனுக்கும் பயன் தராமல், மக்களும் பயன்கொள்ள வழியில்லாமல் சீர்கெடும்” என்பதுதான் அந்த பாடலின் விளக்கம்.

    இந்நிலையில் புறநானூறு பாடலை சுட்டிக்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு பட்ஜெட்டினை விமர்சித்துள்ளார்.

    அவர் கூறுகையில், ‘ஈற்றலும் இயற்றலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு’ எனும் திருக்குறள் வரியினை மேற்கோள் காட்டி, ‘உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும்.

    என்னைப் பொருத்தவரை இந்த 4 அம்சங்களில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் முற்றிலும் தோற்றுவிட்டது’ என விளக்கம் கூறினார். 
    Next Story
    ×