search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் - கேரள ஐகோர்ட்டு
    X

    சபரிமலை கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் - கேரள ஐகோர்ட்டு

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் என்று கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் கேரள பா.ஜனதா கட்சியை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டபோது பிற மதத்தை சேர்ந்தவர்கள் அங்கு சென்றதால் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. மத நம்பிக்கை இல்லாதவர்கள் சரிமலைக்கு செல்ல தடைவிதிக்க வேண்டும். சபரிமலைக்கு இந்துக்கள் அல்லாதவர்களையும், உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களையும் அனுமதிக்கக்கூடாது.

    இந்து மதத்தில் நம்பிக்கை உண்டு என்று எழுதி வாங்கிய பின்புதான் அவர்களை அனுமதிக்க வேண்டும். திருப்பதி கோவில், சோமநாதர் கோவில்களில் இதுபோன்ற நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்து பொது வழிபாட்டுத்தலத்தில் தரிசனம் செய்வது தொடர்பான நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்களையும் மத நம்பிக்கை இல்லாதவர்களையும் சபரிமலை தரிசனத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல போலீசார் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு சபரிமலைக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கை அனைத்து மதத்தினருக்கும் உரிமை உள்ளது ஆகும். மத நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே சபரிமலை கோவிலுக்கு செல்லலாம் என்று கூறுவது தவறு. சபரிமலை அனைவருக்கும் பொதுவான கோவிலாகும். அனைத்து மதத்தினரும் சபரிமலைக்கு செல்வதில் தவறு இல்லை.



    இருமுடி கட்டு இல்லாமலும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம். ஆனால் 18-ம் படி வழியாக செல்ல வேண்டும் என்றால் இருமுடி கட்டு கண்டிப்பாக தேவை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் மறுபுறம் உள்ள படி வழியாக சென்று ஐயப்பனை தரிசக்கலாம்.

    சபரிமலைக்கு வரும் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டும் இதைத்தான் கூறி உள்ளது. சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாவர் மசூதிக்கு சென்றுவிட்டுதான் வருகிறார்கள்.

    இந்த மனு தாக்கல் செய்தவர் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு உள்ளார். இந்த மனு மீதான விசாரணை 2 வாரத்திற்கு பிறகு நடைபெறும். தேவசம்போர்டும், கேரள அரசும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் சபரிமலைக்கு சாமி தரிசனத்திற்கு வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி பெண் வக்கீல்கள் சார்பிலும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. #SabarimalaTemple #KeralaHighCourt

    Next Story
    ×