search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு
    X

    1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த எதிர்ப்பு

    • திருச்சியில் மாநில கல்விக்கொள்கை வகுப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நீதிபதி முருகேசன் கலந்துகொண்டார்
    • ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் அவர்களின் மனநலன் பாதிக்கும் என்பதால் இதனை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை

    திருச்சி:

    தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து க்களை தெரிவித்தனர்.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் பேசும் போது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் அவர்களின் மனநலன் பாதிக்கும்.

    ஆகவே இதனை முழுமையாக நிறுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களுக்கு பரிசோ தனை அடிப்படையில் புதிய திட்டங்கள் செயல்முறை தேவையில்லை.

    கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களின் கற்றல் மற்றும் நடத்தை முறையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அனைத்து வகுப்புகளுக்கும் நன்னெறி கல்வி பாட போதனை வகுப்பு நடத்த வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றார். அவரின் கருத்தை பெரும்பாலானவர்கள் ஆதரித்து ஆரவாரம் செய்தனர்.

    மேலும் சமூக நீதிக்கு முரணான ஆசிரியர் தகுதித்தேர்வு கூடாது என்பன உள்ளிட்ட 20 அம்ச கருத்துகள் அடங்கிய மனுவினை நீதிபதியிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். பெற்றோர்கள் தரப்பில் பேசும்போது, மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயமில்லாமல் போய்விட்டது.

    ஆசிரியர்களின் பிரம்புக்கு மட்டுமே குழந்தைகள் அச்சப்படுவார்கள். ஆகவே மாணவர்களை நல்வழிப்படுத்த வேறு வழிகளை கையாள வேண்டும் என்றனர்.

    பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த நீதிபதி முருகேசன், அதனை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு முன்னதாகவே அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நீதிபதியிடம் மனு அளித்த போது, மாநகரச் செயலாளர் அமல் சேசுராஜ், மருங்காபுரி வட்டாரச செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரத்தலைவர் வேளாங்கன்னி, மாநகரத் தலைவர் ரெக்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஹக்கிம் அலி, பவுல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×