என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    • மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்குளம், செய்துங்கநல்லூர், புதுக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ள சத்தக்காரன் பட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அந்த சமயத்தில் ஊருக்குள் பொதுமக்கள் சென்று வர தற்காலிகமாக குழாய்கள் மூலம் பாதைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு முதல் பெய்து வந்த தொடர் மழையால் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் பாலத்திற்காக தோண்டப்பட்டு குழிகள் முழுவதும் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் காலை முதல் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.


    உடனடியாக இந்த பாலத்தை சரி செய்து போக்குவரத்து நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையில் கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான சாலையில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    மேலும் தொடர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
    • காலை 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பெரும் திருவிழா விமர்சையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி பெரும் திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது. நாளை (3-ந்தேதி) கொடியேற்றம் நடக்கிறது.

    இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரானை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

    3,4,5,6-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு மேல் குடைவருவாயில் தீபாராதனை நடக்கிறது.

    6-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. அன்று இரவு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் எந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    7-ம்திருவிழாவான 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    8,10,11,12-ம் ஆகிய திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது

    8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் கோவிலில் சேர்க்கையை பொறுத்து பூஜை நேரங்கள் மாறுபடும்.

    10-ம்திருவிழாவான 12-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்.
    • ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் பணிகளை புறக்கணித்து அனல் மின் நிலையம் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று காலை முதல் தொடங்கினர். இரவு தொடர்ந்த போராட்டம் இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் நிலையங்கள் மற்றும் மின்சார விநியோக பிரிவில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் 10 ஆண்டுகள் ஆன ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என கூறினர். ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தூத்துக்குடியில் அனல் மின் நிலையம் முன்பு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான ஒப்பந்த தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    குறைந்தபட்ச ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். மாதம் 5-ந் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வார விடுமுறையுடன் கூடிய ஊதியம் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். ரசீது வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் காத்திருப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் காரணமாக கோடைகாலத்தில் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக கூறப்படுகிறது.

    • தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா?
    • எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறார்

    தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "திமுகவின் 64 பக்க தேர்தல் வாக்குறுதியில் அவர்கள் சொன்னதை பாராளுமன்றத்தில் கனிமொழி பேசியிருக்கிறாரா என்றால் இல்லை. எப்படி 2021 தேர்தலில் 525 வாக்குறுதிகள் கொடுத்து எடப்பாடி ஏமாற்றி கொண்டிருக்கிறாரே. அதே போல பாராளுமன்ற தேர்தலில் 64 பக்க தேர்தல் அறிக்கையை கொடுத்து அதை நிறைவேற்றாமல் இன்றுவரை இருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    அதிமுக கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதி கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஏமாற்றியதாக திண்டுக்கல் சீனிவாசன் வாய் தவறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற மார்ச் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு அன்றைய தினம் கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி, தொடர்ந்து காலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் (சிவன் கோவில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    வருகிற 10-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் வருகிறார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து பகல் 12 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேருகிறார்.

    11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 9-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    12-ந்தேதி (புதன்கிழமை) 10-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று விநாயகர், சுவாமி, அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரதவீதியில் வலம் வந்து நிலையம் சேர்தல் நடக்கிறது.

    மறுநாள் (13-ந்தேதி) 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    14-ந்தேதி 12-ம் திருவிழா அன்று மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும்.
    • சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசியதாவது:-

    2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்? 2026 தேர்தலில், ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

    1990-ம் ஆண்டு தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார். இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர்.

    ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளார். அனைவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.

    இன்று புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க வேண்டும். அதை மனப்பாடம் செய்து விட்டு ஓட்டு கேட்பது போல் நின்று விட்டு சென்று விடுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை சண்முக சுந்தரம் செய்தார்.
    • தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான சண்முகசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றில் மிதந்தபடி ஜல யோக சூரிய நமஸ்காரம் செய்து தாமிரபரணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் சிறுவயது முதலே குழந்தைகள் தற்காப்பு கலைகளுடன் நீச்சலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்வதற்கான பயிற்சியை சண்முக சுந்தரம் தனது 72-வது வயதில் செய்து வருகிறார்.

    தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை அவர் செய்தார். 72 வயதிலும் அவர் தண்ணீரில் மிதந்தப்படி யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சண்முக சுந்தரம் கூறுகையில், தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் நீச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தோம். இப்போது குளியறையில் குளித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு நீச்சலே தெரிவதில்லை. அந்த குழந்தைகள் மழை காலங்களில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு வரும் போது நீச்சல் தெரியாமல் கஷ்டப்படுகின்றனர்.

    இந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆற்றில் யோகா செய்தேன். குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சிகள் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு ஏராளமான பொருட்கள், கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது திரேஸ்புரம் அண்ணா காலனி அருகே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் மூட்டைகளை படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் தப்பி விடாத வகையில் அனைவரையும் பிடித்தனர். பின்னர் படகுகளில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில் 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட படகுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 20) அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனீஸ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று நள்ளிரவில் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதி கடற்கரையில் 4 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் (80 ஆயிரம் எண்ணிக்கை ) கிடந்தது தெரியவந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அதனை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.20 லட்சமாகும். 

    • பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 4 தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 20 கிராமமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.

    ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
    • பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செய்துங்க நல்லூரில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர்வழியாக வந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ்சுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுதொடர்ந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

    ஆனால் அதையும் அரசு பஸ் டிரைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இன்று காலை மீண்டும் நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவை குண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் மற்றொரு பஸ்சில் வந்த டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பஸ்சை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல அறிவுறுத்தினார். அதற்கு பிறகு அந்த பஸ் ஊருக்குள் சென்றது.

    இதைத்தொடர்ந்து வந்த மற்றொரு பஸ்சும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் செல்ல முயன்றது. அந்த பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தால் நானே அபராதம் விதிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனியாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது.
    • ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

    ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டப்பொம்மன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய மணியையும் பழமை மாறாமல் புதுப்பித்து நிறுவி உள்ளனர். கும்பாபிஷேக தினத்தன்று ராஜகோபுர மணி மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக ராஜகோபுரத்தைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு, அவற்றில் நின்று தொழிலாளர்கள் பழங்கால சிற்பங்களுக்கு வர்ணம் பூசுகின்றனர். சேதமடைந்த சிற்பங்களையும் புதுப்பிக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    ×