என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை சண்முக சுந்தரம் செய்தார்.
    • தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த 72 வயது முதியவரான சண்முகசுந்தரம் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற பின்னர், அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக யோகா, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்று கொடுத்து வருகிறார்.

    இந்நிலையில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் தாமிரபரணி ஆற்றில் மிதந்தபடி ஜல யோக சூரிய நமஸ்காரம் செய்து தாமிரபரணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் சிறுவயது முதலே குழந்தைகள் தற்காப்பு கலைகளுடன் நீச்சலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆழ்வார்திருநகரி தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரில் மிதந்து யோகாசனம் செய்வதற்கான பயிற்சியை சண்முக சுந்தரம் தனது 72-வது வயதில் செய்து வருகிறார்.

    தண்ணீரில் மிதந்தபடி சூரிய நமஸ்காரம், ஜல யோகா மற்றும் பல்வேறு ஆசனங்களை அவர் செய்தார். 72 வயதிலும் அவர் தண்ணீரில் மிதந்தப்படி யோகா செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து சண்முக சுந்தரம் கூறுகையில், தற்போது யோகா, சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்பு கலைகளை இலவசமாக கற்று கொடுத்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் நீச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். முந்தைய காலங்களில் ஆற்றில் ஓடும் தண்ணீரில் குளித்து கொண்டு இருந்தோம். இப்போது குளியறையில் குளித்து வரும் நிலையில் குழந்தைகளுக்கு நீச்சலே தெரிவதில்லை. அந்த குழந்தைகள் மழை காலங்களில் தண்ணீர் இருக்கும் இடங்களுக்கு வரும் போது நீச்சல் தெரியாமல் கஷ்டப்படுகின்றனர்.

    இந்த தவறு நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆற்றில் யோகா செய்தேன். குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது. பள்ளிக்கூடங்களில் நீச்சல் பயிற்சிகள் எடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு ஏராளமான பொருட்கள், கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர்கள் கோவிந்தராஜ், இருதயராஜ் குமார், இசக்கி முத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது திரேஸ்புரம் அண்ணா காலனி அருகே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் மூட்டைகளை படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர்.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்கள் தப்பி விடாத வகையில் அனைவரையும் பிடித்தனர். பின்னர் படகுகளில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் 10 மூட்டைகளில் 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

    அவற்றை இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட படகுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன் (வயது 20) அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனீஸ் (25) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட வலி நிவாரண மாத்திரைகளின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று நள்ளிரவில் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதி கடற்கரையில் 4 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் (80 ஆயிரம் எண்ணிக்கை ) கிடந்தது தெரியவந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அதனை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர். கைப்பற்றப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.20 லட்சமாகும். 

    • பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகே தமிழ்நாடு தொழில் ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை (டிட்கோ) சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

    இதற்காக ஆதியாகுறிச்சி, மாதவன் குறிச்சி, வெங்கட் ராமானுஜபுரம், சிறுநாடார் குடியிருப்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1,200 நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டது. மேலும், இந்த பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 4 தாசில்தார்கள் நியமனம் செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் விளை நிலங்களை கையகப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாய நிலங்களை கையகப்படுத்தப்படுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அருகில் விண்வெளி பூங்கா அமைப்பதற்காக ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் 1200 ஏக்கர் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உடன்குடி மெயின் பஜாரில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 20 கிராமமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், சமூகஆர்வலர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    • ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
    • கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலான அரசு பஸ்கள் வந்து செல்லாமல் நேரடியாக செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    எல்.எஸ்.எஸ்., எஸ்.எப்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட் என போர்டுகளை மாட்டிக்கொண்டு புதுக்குடியிலேயே பயணிகளை இறக்கிவிட்டு நேரடியாக செல்வதற்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட கலெக்டர் இளம் பகவத் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக வந்த 5 அரசு பஸ்கள் உட்பட 6 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் அனைத்து பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் வந்து செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.

    ஆனால் அவரது உத்தரவை மீறி ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக சென்ற பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் 6 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காமல் அரசு பஸ்கள் நேரடியாக செல்வதை கண்டித்து மார்ச் 6-ந்தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ரத்னா சங்கரிடம் மனு அளித்தனர்.

    இந்நிலையில், புதுக்குடி புதிய பாலம் அருகில் போக்குவரத்துக் கழகத்தினரோடு இணைந்து போலீசாரும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் பஸ்கள் உள்ளே சென்று வர அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று காலை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேரடியாக செல்ல முயன்ற அரசு பஸ்சை போக்குவரத்து கழக பணியாளர் வழிமறித்து உள்ளே சென்றுவர அறிவுறுத்தினார். அவரிடம் வாக்குவாதத்தில் கண்டக்டர் ஈடுபட்டதை அறிந்த பொதுமக்கள் திரண்டு வந்ததை தொடர்ந்து அந்த பஸ் உள்ளே சென்று வந்தது.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நெல்லையில் இருந்து திருச்செந்தூர் சென்ற தனியார் பஸ் பயணிகளை புதுக்குடியில் இறக்கிவிட்டு நேரடியாக சென்றது தெரியவந்ததும், அந்தப் பஸ் திருச்செந்தூரில் இருந்து மீண்டும் திரும்பி ஸ்ரீவைகுண்டம் வந்தபோது பொதுமக்கள் சிறை பிடித்தனர்.

    கடந்த 2 நாட்களாக ஊருக்குள் வராத பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்த நிலையில் இன்று 3-வது நாளாக போராட்டம் நீடித்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் பொதுமக்களை தொடர்பு கொண்டு, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வராமல் சென்ற அந்த தனியார் பஸ்சுக்கு அபராதம் விதிக்கப்படும். பயணிகள் இருப்பதால் அந்த பஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். இதனை ஏற்ற பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் தொடங்கும் நேரங்களில் ஸ்ரீவைகுண்டத்தில் பஸ்களுக்காக நீண்ட நேரம் காத்திருந்து பழகிய பயணிகள், கடந்த 2 நாட்களாக அதிக அளவிலான அரசு பஸ்கள் உள்ளே வந்து செல்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.
    • பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    நெல்லையில் இருந்து திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், ஏரல், முக்காணி, ஆத்தூர், காயல்பட்டினம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு தினம்தோறும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் என 100-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில மாதங்களாக திருச்செந்தூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் இருந்து வரும் பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் பயணிகளை வெளியே உள்ள புதுக்குடி மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு செல்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு செய்துங்க நல்லூரில் கலெக்டர் இளம்பகவத் ஆய்வு நடத்தினார். அப்போது, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர்வழியாக வந்த 5 அரசு பஸ்கள் மற்றும் ஒரு தனியார் பஸ்சுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் இதுதொடர்ந்தால் தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துச் சென்றார்.

    ஆனால் அதையும் அரசு பஸ் டிரைவர்கள் கண்டு கொள்ளவில்லை. இன்று காலை மீண்டும் நெல்லை மற்றும் திருச்செந்தூரில் இருந்து வரும் அரசு பஸ்கள் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்தவுடன் ஸ்ரீவை குண்டம் பகுதி மக்கள் ஊருக்குள் செல்லாமல் வந்த பஸ்சை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த சமயத்தில் மற்றொரு பஸ்சில் வந்த டிக்கெட் பரிசோதகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி பஸ்சை ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்ல அறிவுறுத்தினார். அதற்கு பிறகு அந்த பஸ் ஊருக்குள் சென்றது.

    இதைத்தொடர்ந்து வந்த மற்றொரு பஸ்சும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாமல் நேர் வழியில் செல்ல முயன்றது. அந்த பஸ்சை மறித்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விசாரித்த போலீசார் ஏற்கனவே மாவட்ட கலெக்டர் இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். தொடர்ந்து இதுபோல் ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்தால் நானே அபராதம் விதிப்பேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தனியாக இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தி அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் நேற்று முன்தினம் இரவு அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்தபோதும், இதுகுறித்து அறிவுறுத்தி உள்ளார். ஆனால் மாவட்ட கலெக்டரின் உத்தரவை மதிக்காத அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    • 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது.
    • ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-7-2009 அன்று கும்பாபிஷேக விழா நடந்தது. 16 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி, அறநிலையத்துறை சார்பில் ரூ.100 கோடி என மொத்தம் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாக பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இதில் ஒரு பகுதியாக 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜகோபுரத்தில் தலா 7¾ அடி உயரமுள்ள செம்பாலான 11 அடுக்குகள் கொண்ட 9 கலசங்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு பழமைமாறாமல் புதுப்பிக்கப்பட்டது. பின்னர் அவற்றில் வரகு நிரப்பப்பட்டு ராஜகோபுரத்தின் உச்சியில் மீண்டும் பொருத்தப்பட்டது.

    ராஜகோபுரத்தில் 9-வது நிலையில் கட்டப்பொம்மன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட பெரிய மணியையும் பழமை மாறாமல் புதுப்பித்து நிறுவி உள்ளனர். கும்பாபிஷேக தினத்தன்று ராஜகோபுர மணி மீண்டும் ஒலிக்கவுள்ளது. ராஜகோபுரத்தை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இதற்காக ராஜகோபுரத்தைச் சுற்றிலும் கம்புகளால் சாரம் கட்டப்பட்டு, அவற்றில் நின்று தொழிலாளர்கள் பழங்கால சிற்பங்களுக்கு வர்ணம் பூசுகின்றனர். சேதமடைந்த சிற்பங்களையும் புதுப்பிக்கின்றனர்.

    கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால் கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    • ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும்.
    • பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள ஜே.ஜே. நகர் பகுதி கடற்கரையில் தினசரி இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் அதிகாலை நேரத்தில் நடை பயணம் மேற்கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இன்று ஜெ.ஜெ. நகர் கடற்கரை பகுதியில் இருந்து வீரபாண்டி பட்டினம் கடற்கரைக்கு செல்லக்கூடிய பகுதி வரை நடைபயணம் மேற்கொண்டு இருக்கும்பொழுது கடற்கரை பகுதியில் இருந்து கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த ஆமை சுமார் 3 ½ அடி நீளமும் 50 கிலோ எடையும் இருக்கும் என்று தெரிகிறது.

    இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இந்த ஆலிவ் ரெட்லி வகை ஆமை திருச்செந்தூர் முதல் ராமேஸ்வரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனமாகும். கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் ஆமையை ஆர்வமுடன் பார்த்து புகைப்படம் எடுத்தும் சென்றனர்.

    ஆனால் தற்போது ஆமைகள் கடலில் முட்டையிட்டு இனபெருக்கம் செய்யும் காலம் என்பதால் இந்த ஆமையானது முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிப்பட்டும் அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயங்கள் ஏற்பட்டும் இறந்திருக்கலாம் அல்லது ஏதாவது மீன்பிடி படகுகளில் மோதி இறந்திருக்கலாம் என தெரிகிறது.

    கடந்த 2 வாரங்களில் இந்த ஆமையோடு சேர்த்து மொத்தம் 3 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. கடந்த 2 வாரத்திற்கு முன்பு கடற்கரையில் 100 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் 10 கிலோ எடைகொண்ட ஆமை ஒன்றும் நேற்றைய தினம் 10 கிலோ எடை கொண்ட ஆமையும் கரை ஒதுங்கியது.

    இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் அருகே ஜெ. ஜெ. நகர் கடற்கரை பகுதியில் 50 கிலோ எடைகொண்ட 3½ அடி நீளமுடைய கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இது போன்று சமீப நாட்களாக கடல் வாழ் உயிரினங்களான டால்பின், ஆமை உள்ளவைகள் தொடர்ந்து அடுத்தடுத்து இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருவது திருச்செந்தூர் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சென்னை கடற்கரையில் கடந்த மாதம் இதுபோல் அதிக அளவில் கடல் ஆமைகள் வாழ்ந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

    • எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.
    • தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று கூறினால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்.

    * எல்லா வரியையும் ஜிஎஸ்டி வழியாக வசூல் செய்து கொண்டு தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்பதா?

    * எந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது.

    * தமிழ்நாடு மக்களுடைய போர்குணம் எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    • நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
    • சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாக, சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். தற்போது முக்கிய பிரபலங்கள், அரசியல் கட்சியினர், சினிமா நடிகர்கள், நடிகைகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் சாமி தரிசனம் செய்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

    • கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
    • தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மெயின் சாலையில் ஏழாயிரம் பண்ணையை சேர்ந்த ஆபிரகாம் என்பவரின் குடும்பத்தினர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். தரைத்தளம் மற்றும் மாடியில் 2 தளங்கள் என கடை செயல்பட்டு வருகிறது.

    தரைத்தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றும் அவரின் மகன் ஜோயல் இருவரும் பார்த்து வருகின்றனர். மாடியில் உள்ள முதல் தளத்தில் உள்ள கடையை ஆபிரகாம் மற்றொரு மகன் பிரபு பார்த்து வருகிறார். மேலும் மாடியில் உள்ள 2-வது தளத்தை குடோனாக பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மாடியில் உள்ள முதல் தளத்தில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று 2 தீயணைப்பு வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருந்த போதிலும் இந்த தீ விபத்தில் முதல் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள காலணிகள், ஷூக்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

    தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    விபத்து குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    • இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு அருகே முனியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45). உப்பள தொழிலாளி.

    இவரது எதிர் வீட்டை சேர்ந்தவர் சுரேஷ் (40). பெயிண்டர். இவர்கள் இருவருக்கும் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ், அரிவாளை எடுத்து ராஜாவின் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்தையாபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், கொலை செய்யப்பட்ட ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்துக்கு தூத்துக்குடி நகர கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் அவரது தலைமையிலான தனிப்படை போலீசார் பெயிண்டர் சுரேசை இரவோடு இரவாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரை வழியாக இலங்கைக்கு படகு மூலம் பீடி இலை, மஞ்சள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க போலீசார் தொடர்ந்து தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான பொருட்களை கைப்பற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமர், தலைமை காவலர் மணிகண்டன், இருதயராஜ் குமார், இசக்கிமுத்து, முதல் நிலை காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் நேற்று இரவு முதல் கடற்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் கடற்கரை செல்லும் சாலையில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட சுமார் 30 கிலோ எடை கொண்ட 15 மூட்டை சமையல் புளி, 1 லட்சம் எண்ணிக்கையிலான இங்கிலாந்து நாட்டு சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும்.

    இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்து கொண்ட கடத்தலில் ஈடுபட்டவர்கள் பொருட்களைக் கடற்கரை ஓரமாக போட்டுவிட்டு பைபர் படகில் தப்பி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×