என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன.
    • 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் மற்றும் கடலுக்கு அருகில் நாழிக்கிணறு தீர்த்தம் உள்பட 24 தீர்த்த கட்டங்கள் உள்ளன. தற்போது நாழி கிணறு தீட்டத்த கட்டம் மட்டும் பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது.

    பொதுவாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும் வெளியே வருவதும் இயல்பு. இந்த நேரங்களில் கடலில் இருந்து ஏதாவது கல்வெட்டுகள், மற்றும் பாறைகள் வெளியே தெரியும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் கரையில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.

    அதனை அங்கிருந்த பவுர்ணமி சித்தர் என்பவர் அதை கண்டு கல்வெட்டு மீது திருநீறு பூசி அதில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துக்களை பார்த்த போது கந்த மாதன தீர்த்தம் என்று எழுதப்பட்டிருந்தது.

    இந்த கல்வெட்டு 24 தீர்த்த கட்டங்களில் ஒன்றாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுபவர்கள் பாவங்களை நீக்கி அவர்களை பரிசுத்தமாக்கும் என்பது ஐதீகம். இதுவும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகத்தினர் வந்து கல்வெட்டை எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்துள்ளனர்.இந்த கல்வெட்டை ஏராளமான பக்தர்கள் பார்த்து வணங்கி சென்றனர்.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.
    • கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து வழிபட்டு செல்கின்றனர்.

    நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதால் பக்தர்கள் வசதிக்காக திருப்பதி இணையாக சாமி தரிசனம் செய்யயும் வகையில் மெகா திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பணிகள் முடிந்து பக்தர்கள் தங்கும் விடுதி, இரண்டாம் கட்டமாக பக்தர்கள் காத்திருக்கும் அறை, அலுவலக கட்டிடம் கலையரங்கம் என முடிவுற்ற பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

    அடுத்த கட்டமாக கோவில் திருப்பணிகள் உள்பட அனைத்து பணிகளும் முடித்து ஜூலை 7-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதையொட்டி இன்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் திடீரென மயக்கம் அடைந்தாலோ அல்லது ஏதேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் உடனடியாக வெளியேற அவசர கால வழி அமைக்கப்பட்டுள்ளது.

    கோவில் வளாகத்தில் தற்போது பெருந்திட்ட வளாக பணிகள் நடைபெற்று வருவதால் நாழிக்கிணறு வாகன நிறுத்தம் தற்காலிகமாக நாளை 31-ந்தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக பக்தர்கள் வாகனங்கள் டி.பி. ரோட்டில் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள வாகன நிறுத்தத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், பக்தர்கள் வந்த வாகன நெருக்கடியாலும் பக்தர்கள் வாகனங்கள் தெப்பக்குளம் அருகிலும், தாலுகா அலுவலகம் அருகிலும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் நகர எல்லைக்குள் வாகன நெருக்கடி காணப்பட்டது.

    • ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.
    • இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடி பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ்.

    இவர் கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் பேன்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா (வயது 50). இவர்கள் குடும்பத்துடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து வருகின்றனர்.

    சொந்த ஊரான ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், அவரது மனைவி கிளாடிஸ் ரேபேக்கா மற்றும் கிளாடிஸ் ரேபேக்காவின் தங்கையான சென்னை நியூ பெருங்களத்தூரை சேர்ந்த ஸ்டெபி புஷ்பா செல்வின், அவரது கணவர் சரண், சிறுமி அவினா (5) மற்றும் உறவினர்கள் என மொத்தம் 7 பேர் ஆழ்வார்திருநகரி அருகே தென்திருப்பேரையை அடுத்த மாவடிப் பண்ணையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்துள்ளனர்.

    ஆற்றில் குளிப்பதற்காக கிளாடிஸ் இறங்கினார். அவருடன், அவரது தங்கை மகளான அவினாவும் ஆற்றில் இறங்கி குளித்தனர்.

    இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் இருவரும் ஆற்று நீரில் மூழ்கினர்.

    உடனே கரையில் இருந்த உறவினர்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் இருவரும் கிடைக்கவில்லை. சிறிது நேர தேடலுக்கு பிறகு இருவரையும் ஆற்றுக்குள் இருந்து மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு அழைத்து சென்றனர்.

    இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டனர் என்று தெரிவித்தனர். இதைக்கேட்ட அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்திருநகரி போலீசார் பிரேத பரிசோதனைக்காக இருவரது உடல்களையும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார்.
    • நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு நிதி வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிப்பதாக கூறி மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கம் அருகே கனிமொழி எம்.பி. தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி , தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் மூலமாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்தி வருகின்றார். நிதி மந்திரி, விவசாய துறை மந்திரியை நானும், தமிழக நிதித்துறை அமைச்சரும் நேரில் சந்தித்து நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினோம். ஓரிரு வாரங்களில் நிதி வரும் என்றார்கள். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இதையடுத்து தமிழக முதலமைச்சர் இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன்படி பாராளுமன்றத்தில் கேள்வி கேட்கும்போது ரூ.4034 கோடி தர வேண்டிய பணத்தை 5 மாதங்களாக தரவில்லை என்று கேட்டோம். ஆனால் அதற்கும் பதில் இல்லை.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். நாங்கள் போராடியதைக் கண்டு எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டன. இதனால் பாராளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டன.

    போராட்டத்தை கை விடுங்கள். ஏப்ரல் முதல் வாரத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் பலமுறை இதுபோன்று உறுதியளித்து தரவில்லை என்றபோது எப்படி இவர்கள் கூறுவதை நம்ப முடியும்.

    எனவே தான் மக்களுடன் சேர்ந்து போராட வேண்டும் என்று அமைச்சர்கள், எம்.பி.க்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி, தொடர்ந்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு தொடர்பாக கேள்வி எழுப்பியபோது அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் தவறான, பொய்யான தகவலை கூறுகிறார்.

    தி.மு.க., காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது சாதாரண மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டே வந்தனர். மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்வோம் என்று கூறி ரூ.2 ஆயிரம் கோடி நிதியை வைத்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கும் ஆட்சி தான் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி.

    நல்லவர்கள் போல் தமிழர்கள் மீதும், தமிழ்நாடு மீதும் அக்கறை இருப்பவர்கள் போல் வேடமிட்டு வருகின்றனர். கல்வி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் மோடி ஆட்சிக்கு மனம் வரவில்லை. 2024-25 மத்திய பட்ஜெட்டில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்தார்கள்.

    ரூ.86 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்த போது இதில் ரூ.10 ஆயிரம் கோடி துண்டு விழுவது குறித்து கேள்வி எழுப்பினோம். தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்வோம் என்று ஒன்றிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இந்த நிலையில் தான் பா.ஜ.க. அரசின் பட்ஜெட் உள்ளது. அதனால் தான் பொறுத்தது போதும் என்று மக்களுடன் களத்தில் தி.மு.க. இறங்கி போராடி வருகிறது. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி தரும் வரை பாராளுமன்றத்திலும், மக்களோடு இணைந்து களத்திலும் தி.மு.க. போராடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்

    எட்டயபுரம் அருகே காதலிக்க மறுத்த சிறுமி மீது வாலிபர் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்தார். இதில் உடல் கருகி பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சிறுமி எட்டயபுரம் போலீசாருக்கு அளித்த அந்த வாக்குமூலத்தில், 'பாட்டியின் வீட்டில் தனியாக இருந்தபோது சந்தோஷ் தனது நண்பருடன் வந்தார். சந்தோஷ் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் என் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு, அவர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர்' என்று கூறியிருந்தார்.

    அதன் அடிப்படையில் சந்தோஷ், முத்தையா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் வாலிபரால் மண்எண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட சிறுமி பலியானார்.

    கடந்த 23-ந்தேதி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். 

    • தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை.
    • டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் தங்களிடம் ஒப்பந்தம் செய்து உள்ள எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு புதிய ஒப்பந்தப்படி சில திருத்தங்களை கொண்டு வருகின்றன. அதே போன்று வாடகையையும் குறைத்து உள்ளன.

    இது போன்ற கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி தென்மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது.

    இதனை தொடர்ந்து எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் துறைமுகத்தில் இருந்து எரிவாயுவை நிரப்ப செல்லாமல் தூத்துக்குடியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், கொச்சி துறைமுகத்தில் இருந்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் தினமும் சுமார் 200 டன் எரிவாயு தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள பாரத் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.

    அங்கிருந்து சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். இதனால் தூத்துக்குடியில் 47 லாரிகள் ஓடவில்லை. தற்போது டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் எரிவாயு வினியோகத்தில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

    • ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
    • வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

    சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.

    வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.

    பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.

    • டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
    • ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் உள்துறை மந்திரியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவை தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி தாமதமாகி உள்ளது. அதுதொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் தொடர வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் மனு அளித்தோம்.

    ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்ததுதான். பிரிந்தது மட்டுமல்ல, இந்த கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.

    என்றைக்கு அ.தி.மு.க.வின் கோவிலாக இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் இவர் தலைமையில் ரவுடிகள் மூலம் தாக்கினார்களோ அன்றைக்கே அவர் இந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படை யில் அவர் இணைத்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.

    அவர் தவிர, நிறைய பேர் இந்த கட்சியில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கூட பல பேர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் பலர் இணைந்து வருகிறார்கள்.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும், அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இலங்கை அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவர்களுடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்களை கைது செய்வது எல்லாம் கண்டனத்துக்குரியது. அதை நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

    நான் முதலமைச்சராக இருக்கும்போதும், அம்மா முதலமைச்சராக இருக்கும் காலத்திலும் சரி, கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களை விடுதலை செய்து அழைத்து வந்திருக்கிறோம்.

    அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் எடுத்து செல்லப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறோம்.

    நாங்கள் எதிர் கட்சிதான். ஆட்சியில் இல்லாத போது உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சியல்ல.

    டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை.

    காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது.

    தி.மு.க. மட்டும்தான் அ.தி.மு.க.வின் ஒரே எதிரி. தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    * சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.

    * பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.

    * காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    * மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    * ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
    • காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.

    * அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.

    * குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.

    * தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.

    அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
    • நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    மகாகவி பாரதியாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரது இல்லம் அமைந்துள்ளது.

    அவரை போற்றும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவு இல்லமாக மாற்றினார்.

    எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள அவரது நினைவு இல்லம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பகுதி நேர நூலகமும் இயங்கி வருகிறது.

    மகாதேவி என்பவர் இல்லத்தின் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை பார்வையாளர் நேரம் முடிந்த உடன் இல்லத்தின் காப்பாளர் கதவுகளை மூடினார். அப்போது பாரதியார் இல்லத்தின் முன்பு மேல்மாடியின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ்தளத்தின் மேற்கூரையும் இடிந்து அதில் இருந்து கற்கள் விழுந்தன.

    இந்நிலையில் பாரதியார் நினைவு இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைப்பு செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எட்டயபுரத்தில் அமைந்துள்ள நூறாண்டு பழமையான பாரதியார் பிறந்த இல்லத்தின் மேல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை விழுந்துவிட்டது. இந்த நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தமிழக நிதி அமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

    பொதுப்பணிதுறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விரைவில் மறுசீரமைக்கப்படும். அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×