என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை.
    • பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை.

    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அவருக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது:-

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை இன்று, நேற்று அல்ல. பாகிஸ்தான் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுக்கக்கூடிய பதிலடி அறத்தின் அடிப்படையில் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத மையங்களைதான் நாம் அழிக்கின்றோம். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவில் உள்ள மக்கள் மீது போர் தொடுத்து நம் மீது போர் தொடுக்கும்போது நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் கோழைகள். இந்தியாவை பொறுத்த அளவில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் டிரோன் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றோம்.

    இந்தியாவில் தொடர்ந்து அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்து வரும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நமது அரசு தொடங்கி நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய அரசுக்கும், எல்லையோர மக்களுக்கும் துணை நிற்க வேண்டும்.

    2016-ம் ஆண்டு பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தினார்கள். அதனைப் பார்வையிட பாகிஸ்தான் ராணுவத்தினரை அழைத்து வந்தோம். திரும்பிச் சென்றவர்கள் நமது நாட்டை அவமானப்படுத்தினர். அதே ஆண்டு, உரி பகுதியில் ராணுவ முகாமில் 23 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். 2019-ல் புல்வாமா தாக்குதலில் 46 பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

    தற்போது 2025-ம் ஆண்டு பஹல்காமில் 25 இந்தியர்கள், ஒரு நேபாளி உட்பட 26 பேரை தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். அதில் அவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர் என்று பார்த்து படுகொலை செய்துள்ளனர். ஒவ்வொரு தீவிரவாத தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி கொடுத்து வந்திருக்கிறது.

    நமது நாட்டு கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டில் தான் அந்த அரசு இருக்கிறது. இந்த தாக்குதல் இன்று, நாளை முடிய போவது இல்லை. அறத்தின் அடிப்படையில் போர் தொடுத்து வருகின்றோம்.

    நாம் ரஷியா-உக்ரைன் போல் எல்லையை பிடிப்பதற்காக போர் நடத்தவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராக நடத்துகின்றோம். நாம் பொருளாதாரத்தில் பலமாக இருக்கிறோம். பாகிஸ்தான் நலிவடைந்த நிலையில் இருக்கிறது. 12-க்கு 1 என்ற அளவில் இருந்து வருகிறது.

    நாம் நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில் இல்லாமல் ஆக்க முடியும்.

    பாகிஸ்தான் கூட சண்டை போடுவதால் நமக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எறிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். ஆகவே, ஒற்றுமையாக ஒரு தாய் பிள்ளையாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். போர் இன்று, நாளை முடியாது. இதற்கு மேல் நாம் போக தான் போகிறோம். இனி இந்தியாவில் ஒரு உயிர் எடுப்பதற்கு பாகிஸ்தான் பலமுறை யோசிக்க வேண்டும்.

    இந்திய அரசுக்கு, ராணுவத்துக்கு ஆதரவாக தமிழக முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் பேரணி வரவேற்கத்தக்கது. இதுபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூரின், ராணுவத்திற்கும், இந்திய அரசுக்கும் ஆதரவான பேச்சு மிக மிக வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. தமிழக அரசின் 4 ஆண்டு ஆட்சி சாதனை என்பது சாதனையா? வேதனையா? என்பதை பின்னர் பேசுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.
    • தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி என்.டி.பி.எல். அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் என்.எல்.சி.யில் வழங்குவது போன்று ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 22 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் காரணமாக என்.டி.பி.எல். அனல்மின் நிலையத்தில் 2 அலகுகள் மூலம் தலா 500 வீதம் உற்பத்தி செய்யப்படும் 1000 மெகாவாட் மின்சார உற்பத்தி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 3-ந்தேதி முதல் யூனிட் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவு 2-வது யூனிட்டும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் மின்சார தேவை அதிகமாக இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் வெகுவாக பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதற்கிடையே தமிழக அரசுக்கு சொந்தமான தூத்துக்குடி அனல் மின் நிலையத்திலும் ஏற்கனவே சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக 2 அலகுகளில் 420 மெகாவாட் மின்சார உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும், சிறந்த சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

    தற்போது பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று காலையில் இருந்தே திருச்செந்தூரில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிகிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் பக்தர்கள் சுமார் 4 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் பக்தர்கள் வந்த வாகனங்கள் நிறுத்த வசதிக்காக போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே தற்காலிக வாகன நிறுத்தம் அமைத்திருந்தனர். மேலும் குடிநீர் வசதிக்காக கோவில் வளாகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

    • தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.இ.ரோட்டில் டி.எஸ்.எப். வணிக வளாகம் எதிரே தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது.

    இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தும்பு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வரத் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தும்பு குடோன் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் 2 வண்டிகளில் காவலாளி மாவட்ட அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தூத்துக்குடி நிலைய அலுவலர் முருகையா மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை உடனடியாக போராடி அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் திருமண மண்டபம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
    • தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை கொடுத்திருந்தனர்.

    இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஒரு ஆளுநராக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக அவரது தலையீடுகள் இருந்தது. இது போன்ற விஷயங்களை தமிழக ஆளுநர் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார். இதற்கு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்துள்ளது.

    எப்போதும் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை கூட்டுகிறார். அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி துணைவேந்தர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனை சரியான முடிவாகத்தான் பார்க்கிறேன். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

    எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் கொடுமையானது. இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது, தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளினால் தீவிரவாதத்திற்கும், அவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ம.தி.மு.க.வை கடந்து வைகோ சிறந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

    அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார். வைகோவிற்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதனை தமிழகத்தின் குரலாக தான் பார்க்க வேண்டும் தவிர மதிமுகவின் குரலாக பார்க்க கூடாது. அரசியலை கடந்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போவது மதிமுகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள், திமுக தலைமை கண்டிப்பாக பரீசிலிக்கும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
    • சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.

    சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.

    காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.

    மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.

    இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.

    • லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.
    • இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோகுல்நகரை சேர்ந்தவர் கண்ணன். இவர் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் சோனகன்விளை நீல்புரம் பகுதியில் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்வதற்கு லோடு ஆட்டோவில் சென்றுள்ளார்.

    அப்போது நீல்புரத்தை சேர்ந்த ஜெபராஜ் என்ற கற்கண்டு (வயது 60) மோட்டார் சைக்கிளில் எதிரில் வந்துள்ளார். அப்போது லோடு ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் உரசியதாக கூறப்படுகிறது.

    இதில் கண்ணனை, ஜெபராஜ் அடித்தாராம். இது தொடர்பாக நேற்று இரவு கண்ணனுக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் நீல்புரம் ஜெபராஜ் வீட்டிற்குச் சென்று தட்டிகேட்டுள்ளனர்.

    அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் ஜெபராஜை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த ஜெபராஜ் திருச்செந்தூர் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். தந்தை ஜெபராஜ் தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் நவீன்(32) திருச்செந்தூருக்கு விரைந்து வந்துள்ளார்.

    அங்கு அவரது தந்தை தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நவீன் ஆதரவாளர்களும், மற்றொரு தரப்பினரும் திருச்செந்தூர் யூனியன் அலுவலகம் முன்பு வைத்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

    அப்போது இருதரப்பின ரிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவரை மாறி மாறி அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொண்டனர்.

    இந்த சம்பவத்தில் நவீன், திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கந்தவேல் (21), நட்டார் ஆனந்த் (20) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

    இதற்கிடையே சம்பவ இடத்தில் தெருவோர ஓட்டலில் பிரைடு ரைஸ் வாங்க வந்த தூத்துக்குடி பூபால்ராயபுரம் விஜயபி ரகாஷ் (27) என்பவருக்கு முதுகு, கால் ஆகிய இடங்கள் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

    காயமடைந்த அனைவருக்கும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த கந்தவேல், நட்டார் ஆனந்த் ஆகியோர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஜெபராஜ், அவரது மகன் நவீன் திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சி்கிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஏ.டி.எஸ்.பி. திபு, டி.எஸ்.பி. மகேஷ்குமார், தாலுகா இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குரும்பூர் மற்றும் திருச்செந்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இந்த சம்பத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதம்.
    • சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா தலைமையில் இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று இரவு 10 கார்களில் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

    அவர்கள் வந்த வாகனங்கள் தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடி வந்த போது சுங்கச்சாவடிக்கு கட்டணம் செலுத்தாமல் கடந்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தததால், காரில் வந்தவர்கள் இறங்கி வந்து அங்கிருந்த பேரிகாடை தூக்கி வீசி உள்ளனர்.


    மேலும் சுங்கச்சாவடியில் இருந்த கண்ணாடி மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சூறையாடி உள்ளனர்.

    மேலும்,அங்கு பணியில் இருந்த ஊழியர்களான தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த பாபு என்ற பரமசிவம் (வயது 45), நெல்லையை சேர்ந்த அண்ணாவி என்ற ஆகாஷ் (27) ஆகியோரை நாற்காலியால் தாக்கி உள்ளனர். இதில் பாபு என்ற பரமசிவத்திற்க்கு தலையில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.

    அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த திடீர் சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்

    இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் அங்கு பதிவாகி இருந்த சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இயக்க தலைவர் இசக்கிராஜா உட்பட 30 பேர் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்துதல்,கொலை முயற்சி, தீண்டாமை வன்கொடுமை மற்றும் பொது இடத்தில் ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    • இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.
    • சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    திருச்செந்தூர்:

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி திருச்செந்தூர் மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்ற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 12-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரின் கல்வி வளர்ச்சிக்கு உதவியவர். விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியவர். ஆன்மீக பணிகளை மேற்கொண்டவர். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லோருக்கும் உதவிய வேந்தர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்.

    பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர், அவரது புகழ் என்றென்றும் வாழ்க! என்றென்றும் வாழ்க!!

    இவர் அவர் கூறினார்.

    • கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓட்டம்.
    • கைதானவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை அடுத்த தேரிப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி வசந்தா (வயது 70).

    இவர்களது மகள் சபீதா, மகன் வினோத் ஆகியோர் கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மற்றொரு மகனான விக்ராந்த் சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

    விக்ராந்த் ஆனந்தபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜெயபால் இறந்துவிட்டதால் வசந்தா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    நேற்று சபீதா தனது தாயாருக்கு போன் செய்தார். வெகுநேரமாகியும் வசந்தா அழைப்பை ஏற்கவில்லை. இதனால் அவர் தனது தம்பி விக்ராந்துக்கு போன் செய்து விபரத்தை கூறினார்.

    உடனே விக்ராந்த் தேரிப்பனையில் உள்ள தனது உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பினார். அவர் வசந்தா வீட்டுக்கு சென்றபோது முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

    அதே நேரம் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. அதன்மூலம் வீட்டுக்கு சென்றபோது வசந்தா இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் தலையணையால் அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வசந்தா அணிந்திருந்த நகைகள் அறுத்து எடுக்கப்பட்டது தெரியவந்தது.

    இதுகுறித்து அவரது மகன் விக்ராந்த் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பி.க்கள் சுகுமார், மகேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.


    தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் செல்வரதி (24) என்பவர் நேற்று வசந்தா வீடு அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதும், இதனால் அவரை வசந்தா கண்டித்ததும் தெரியவந்தது.

    எனவே இந்த விரோதத்தில் செல்வரதி வசந்தாவை கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதினர். இதைத்தொடர்ந்து செல்வரதியை போலீசார் தேடியபோது அவர் கணவர் ஊரான மீரான்குளத்துக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் செல்வரதியை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் வசந்தாவை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு வசந்தா அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி வந்தது உறுதியானது.

    இதையடுத்து போலீசார் செல்வரதியை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையை பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே நகைக்காக சிறுவனை கடத்தி கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக ஒரு வழக்கு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த கொலையில் செல்வரதியுடன் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பரிகார பூஜைகள் செய்து சிறப்பு வழிபாடு செய்து செல்வது வழக்கம்.

    அந்த வகையில் பவுர்ணமி நாளான நேற்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன்கள் மற்றும் பஸ்கள் மூலம் காலையில் இருந்தே கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கி நிலாச்சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். சில பெண்கள் கடற்கரையில் அகல் விளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    பவுர்ணமி சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் கடற்கரையில் தங்கிய பக்தர்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான இன்று கோவில் நடை அதிகாலை 4மணிக்கு திறக்கப்பட்டது. 4.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    ×