என் மலர்
நீங்கள் தேடியது "திசையன்விளை"
- டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
- பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான சுமார் 150 கடைகள் கொண்ட மார்க்கெட் இயங்கி வருகிறது.
திசையன்விளையின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் வாரச்சந்தையும் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை செயல்பட்டு வருகிறது.
இந்த சந்தையில் காய்கறிகள், மளிகை பொருட்கள், பழங்கள், கருவாடு, மீன், சிக்கன், மட்டன், தின்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதோடு குளிர்பான கடைகள், டீக்கடைகள், ஓட்டல் என அனைத்து கடைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது.
இந்த கடைகள் வியாபாரிகளுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் தரை வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு கடைகள் வைத்திருப்போர் தற்காலிகமாக தென்னந்தட்டி மற்றும் தகர சீட்டு கொண்டு தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் வாரச்சந்தை நடைபெற இருந்த நிலையில் அதிகாலை பேரூராட்சி சந்தையின் வெளிப்புறம் அமைந்துள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள், திடீரென சந்தையின் உள்புறம் இருந்து புகை மண்டலமாக வருவதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது சந்தை வடக்கு வாசல் நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள பழக்கடை மற்றும் அதனை அடுத்துள்ள துணிக்கடை ஆகிய 2 கடைகளும் தீப்பிடித்து மளமளவென கொளுந்து விட்டு எரிந்துள்ளது.
இதனை கண்ட அந்த பகுதியில் நின்றவர்கள் உடனடியாக அங்கு இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சி செய்துள்ளனர். தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாததால் உடனடியாக திசையன்விளை தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். மேலும் சந்தை முழுவதும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் தீ விபத்தில் திசையன்விளையை சேர்ந்த ராபர்ட் பாக்கியசீலன்(வயது 30) என்பவரின் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பழக்கடை, வாகனேரியை சேர்ந்த அன்னக்கிளி(48) என்பவரின் ரூ.5 லட்சம் மதிப்புள்ள துணிக்கடை மற்றும் தராசு, மர அலமாரி, தளவாடப் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளது.
தீ விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பேரூராட்சிக்கு சொந்தமான திசையன்விளை தினசரி மற்றும் வாரச்சந்தையில் இது போன்று தீ விபத்து அடிக்கடி நடைபெறுவது தொடர் கதையாகி வருகிறது. பேரூராட்சி சந்தையினை நவீனப்படுத்திட ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே ஸ்மார்ட் மார்க்கெட்டாக மாற்றினால் மட்டுமே இதுபோன்ற தீ விபத்தை தடுக்க முடியும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
- வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி பகுதியில் புலிமான்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் இருக்கிறது.
இங்குள்ள ராமன்குடியில் இருந்து ஆத்தாங்கரை பள்ளிவாசல் செல்லும் மெயின் சாலையில் இருந்து புலிமான்குளம் செல்லும் அணுகு சாலையில் இன்று அதிகாலை கரடி ஒன்று சுற்றிக்கொண்டிருந்தது.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அச்சம் அடைந்தனர். மேலும் இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியதால் மக்கள் அந்த பகுதியில் குவிந்து கரடி நடமாட்டத்தை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினர்.
தகவல் அறிந்து உவரி போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் கரடி மாயமாகிவிட்டது. தற்போது வனத்துறையினர் கரடியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உணவு தட்டுப்பாடு, வாழ்விட அழிப்பு அல்லது மனிதர்களின் அத்துமீறல் போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இது போன்று குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து விடுகிறது.
தற்போது இந்த கரடியால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்பாக, அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதனிடையே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், கரடியை கண்டால் அதற்கு அருகில் செல்லாமல் உடனடியாக வனத்துறை அல்லது தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம்.
- சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சரத். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தர்ஷினி என்ற 2½ வயது பெண் குழந்தை உள்ளது.
சரத் கோவையில் உள்ள ஒரு பொம்மை கடையில் வேலை பார்த்து வருகிறார். இதனால் பிருந்தா தனது குழந்தையுடன் திசையன்விளை அருகே உள்ள மகாதேவன் குளத்தில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை பிருந்தா நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த தனது குழந்தை தர்ஷினி இறந்துவிட்டதாக கூறினார். அவரது பேச்சில் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனே குழந்தையை திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அதேநேரத்தில் சிறுமியின் உதடு, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததால் டாக்டர்கள் சந்தேகம் அடைந்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சிறுமி உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பிருந்தாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில் சில வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்ததால் சிறுமி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட போதிலும், பிருந்தாவுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது அவர்களுடன் தனிமையான இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது குழந்தையை தனியாக வீட்டில் விட்டு விட்டு செல்ல முடியாது என்பதால் குழந்தையையும் அழைத்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திசையன்விளை அருகே உள்ள துவரம்பாடு பகுதியை சேர்ந்த ஐஸ்கிரீம் கடை நடத்தி வரும் வாலிபரான லிங்கசெல்வம் (28 ) என்பவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முத்துசுடர் (28), பெஞ்சமின் (28) ஆகியோருடன் மதுபோதையில் பிருந்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து குழந்தையுடன் பிருந்தாவை 3 பேரும் அழைத்துச்சென்றுள்ளனர். பின்னர் திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமத்தில் இருட்டு நிறைந்த பகுதியில் அந்த வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது சிறுமி தர்ஷினி அழுதுள்ளார். உடனே அவர்களில் 2 வாலிபர்கள் தர்ஷினியை சற்று தூரத்திற்கு அழைத்து சென்று தின்பண்டம் கொடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் 2 பேரும் அங்கிருந்தபடி மது குடித்துக்கொண்டு இருந்தனர். சிறுமி தின்பண்டம் சாப்பிட்டதும் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். போதையில் இருந்த வாலிபர்கள், சிறுமி என்றும் பாராமல் குளிர்பானத்தில் மதுவை கலந்து சிறுமிக்கு கொடுத்துள்ளனர். அதனை குடித்த சிறுமி அழுதுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் சிறுமியின் மூக்கை பொத்தியும், தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் போன சிறுமியை வாலிபர்கள் 3 பேரும் சேர்ந்து பிருந்தாவிடம் ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் தனது குழந்தை கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக பெற்றோரிடம் பிருந்தா நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து பிருந்தாவை கைது செய்த போலீசார், கள்ளக்காதலில் ஈடுபட்டு சிறுமியையும் கொலை செய்த லிங்க செல்வன், முத்து சுடர், பெஞ்சமின் உள்ளிட்டவர்களையும் கைது செய்தனர்.
- இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
- கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தெற்கு தெரு மாரியம்மன் கோவிலில் நேற்று இரவில் வழக்கம்போல் பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டிச்சென்றனர்.
பின்னர் கோவிலுக்கு தாமதமாக வந்த பக்தர் ஒருவர் சாமி கும்பிடுவதற்காக கோவில் கதவின் துவாரம் வழியாக அம்மனை பார்த்து வழிபட்டார்.
அப்போது அம்மன் சிலையில் கண் திறந்து இருப்பதாக பக்தி பரவசத்துடன் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். அம்மன் சிலையை செல்போனிலும் புகைப்படம் எடுத்தார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனால் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் இன்று காலை மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.
அப்போதும் அம்மனின் கண் திறந்து இருந்ததாகவும், கோவில் பூசாரி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்ததும் கண் மூடியதாகவும் கோவிலின் அருகே வசித்து வரும் பக்தர் குட்டி என்பவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
- திசையன்விளை பகுதியில் மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள குளங்கள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
- கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது.
திசையன்விளை:
திசையன்விளை பகுதியில் பருவகால மழை சரியாக பெய்யாததால் இங்குள்ள முதலாளிகுளம், எருமைகுளம், செங்குளம், குருவி சுட்டான்குளம், சுகாதியாகுளம் உள்பட அனைத்து குளங்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.
இதுவரை பெய்த மழையால் ஒரு அடி ஆழம் கூட நனையவில்லை. இப்பகுதியில் சென்ற ஆண்டும் கால மழை சரியாக பெய்யவில்லை. விவசாயிகள் தங்கள் பயிர்களை காப்பாற்ற 400 முதல் 600 அடி ஆழம் வரை ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதில் கிடைத்த தண்ணீரில் சொட்டுநீர் பாசனம் மூலம் விவசாயம் செய்து வந்தனர்.
கோடை வெயிலால் ஆழ்துளை கிணறு மூலம் கிடைத்த தண்ணீரும் வற்றிவிட்டது. இதனால் தென்னை மற்றும் முருங்கை விவசாயிகள் தண்ணீரின்றி அவதிபட்டனர். இந்த ஆண்டாவது நல்ல மழை பெய்யும் பயிர்களை காப்பாற்றிவிடலாம் என நம்பிக்கையில் இருந்தனர்.
இந்த ஆண்டும் இதுவரை மழை சரியாக பெய்யாததால் சென்ற ஆண்டு நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று கவலை அடைந்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை இல்லை இன்று காலையிலும் வெயில் அடிக்கிறது.
- திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
திசையன்விளை:
திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பஸ்சில் சிக்கினார்
அங்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலைமீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.
இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து திசையன்விளை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான ராஜேந்திரன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரனின் மனைவி பிச்சைக்கனி தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்து பிச்சுவிளை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
- ஈனமுத்துக்கும், சுடலைக்கும் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- ஈனமுத்துவை அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள அழகப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஈனமுத்து(வயது 40). அதே ஊரில் நடுத்தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் சுடலை(28). இவர்களுக்குள் தோட்டத்தில் ஆடு, மாடுகள் மேய்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று 2 தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஈனமுத்துவை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்த கருப்பன், அவரது மனைவி பார்வதி, சுடலை, அவரது மனைவி சுப்புலெட்சுமி, பானு ஆகியோர் சேர்ந்து அடித்து உதைத்து ரத்தக்காயம் ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈனமுத்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இதேபோல் சுடலை தன்னை ஈனமுத்து, கருப்பன், மகேஷ் ஆகியோர் தாக்கி காயப்படுத்தியதாக புகார் அளித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பிரிய ராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- வி.எஸ்.ஆர். பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் நீட் நுழைவுத்தேர்வு எழுதினர்.
- அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும் பெற்றனர்.
திசையன்விளை:
மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 7-ந்தேதி நடந்தது. இந்த தேர்வினை திசையன்விளை வி.எஸ்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் எழுதினர். இதில் அனைத்து மாணவர்களும் வெற்றிபெற்றனர்.
மாணவர்கள் அஸ்வந்த் 557 மதிப்பெண்களும், முத்துராமன் 512 மதிப்பெண்களும், அனிஷ் 487 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் படிப்பதற்கு இடம் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தாளாளர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், பள்ளி முதல்வர் பாத்திமா எலிசபெத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.
- தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
- தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.
40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.
நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார்.
திசையன்விளை:
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திசையன்விளையில் அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டி 4 நாட்கள் நடைபெற்றது.
முதல்பரிசு
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியில் பெண்கள் இறுதி ஆட்டத்தில் வடக்கு ெரயில்வே மற்றும் சென்ட்ரல் ெரயில்வே அணிகள் மோதின.
இதில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வடக்கு ெரயில்வே அணி வெற்றி பெற்று முதல் பரிசு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த சென்ட்ரல் ரெயில்வே அணி ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், 3-வது இடம் பிடித்த சவுத் சென்ட்ரல் அணிக்கும், 4-வது இடம் பிடித்த கிழக்கு ரெயில்வே அணிக்கும் தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது.
சபாநாயகர் அப்பாவு
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும், கிரீன் ஆர்மி அணியும் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் அணி 41:30 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசு ரூ.2 லட்சம் மற்றும் கோப்பையை தட்டி சென்றது. 2-வது இடம் பிடித்த கிரீன் ஆர்மி அணிக்கு ரூ.1½ லட்சம் மற்றும் கோப்பையும் 3-வது இடம் பிடித்த சென்னை வருமானவரித்துறை அணிக்கும், 4-வது இடம் பிடித்த பெங்களூர் பரோடா வங்கி அணிக்கும் தலா ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் கிடைத்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் வெற்றி கோப்பைகளை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசு கோப்பைகளை வி.எஸ்.ஆர். சுபாஷ் மற்றும் வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வழங்கினார். ஆண்கள் பிரிவில் முதல் பரிசை நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா ஆரோக்கிய எட்வின், 2-வது பரிசை ராதாபுரம் யூனியன் துணைத் தலைவர் இளையபெருமாள், 3-வது பரிசை மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் நம்பி, 4-வது பரிசை அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் சாந்தாமகேஸ்வரன் மற்றும் மயோபதி குழும தலைவர் டாக்டர் ராமசாமி ஆகியோர் வழங்கினர்.
பரிசளிப்பு
பெண்கள் பிரிவில் முதல் பரிசு தொகையை ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ் வழங்கினார். 2-ம் பரிசு தொகையை ராதாபுரம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்தாக் டென்னிசன், 3-வது பரிசு தொகையை உறுமங்குளம் பொன் இசக்கி பாண்டியன், நவலடி சரவணகுமார், கஸ்தூரிரங்கபுரம் பாலன் ஆகியோரும், 4-வது பரிசு தொகையை ராதாபுரம் கூட்டுறவு சங்க தலைவர் அரவிந்தன், சிதம்பராபுரம் பேபி முருகன், உதயத்தூர் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி மணிகண்டன் ஆகியோர் வழங்கினர்.
பரிசளிப்பு விழாவில் பாளையங்கோட்டை யூனியன் தலைவர் தங்கபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், களக்காடு ஒன்றிய செயலாளர் பி.சி.ராஜன், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், கல்லிடைக்குறிச்சி நகர செயலாளர் இசக்கி பாண்டியன், மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் முரளி மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார்.
- டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியாற்றும் வகையில் பல்வேறு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ராதாபுரம் அருகே உள்ள பாப்பாங்குளத்தை சேர்ந்த ராஜ் என்பவரது மனைவி சுபத்ரா தேவி (வயது24) என்பவர் நேற்று முன்தினம் இரவில் பிரசவ வலி ஏற்பட்டு பிரசவத்திற்காக திசையன்விளை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
அப்போது அங்கு டாக்டர்கள், நர்சுகள் இரவு பணியில் இல்லை. இதனால் குடும்பத்தினர் செய்வதறியாமல் திகைத்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பிரசவ வலியால் துடித்த சுபத்ரா தேவிக்கு தானாகவே அழகான பெண் குழந்தை பிறந்தது.
அதன் பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சுபத்ரா தேவி மற்றும் குழந்தை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1 மணி நேரமாக பிரசவ வலியால் கர்ப்பிணி பெண் துடித்த நிலையில் டாக்டர்கள் இல்லாததால் உறவினர்கள் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலை அப்பகுதி மக்கள் திசையன்விளை அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் நுழைவு வாயில் கதவை இழுத்து பூட்டினர். டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட யாரையும் ஆஸ்பத்திரிக்குள் அவர்கள் அனுமதிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த போராட்டம் நீடித்த நிலையில் தகவல் அறிந்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரிய ராஜ்குமார், உதய லட்சுமி ஆகியோர் வந்து பொது மக்களை சமாதானம் செய்தனர்.
ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் தலைமையில் குழுவினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்களிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இல்லாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் 24 மணி நேரமும் பிரசவம் பார்க்கப்படும் என்று பெயர் பலகை மட்டும் பெரிதாக வைத்துள்ளீர்கள். ஆனால் டாக்டர்களோ, நர்சுகளோ இரவு நேர பணியில் இருப்பதில்லை.
மேலும் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்தாலும் கூட, அருகில் உள்ள சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கோ தான் சிகிச்சை பெறுவதற்கு அனுப்பி வைக்கிறீர்கள். எனவே 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஜனவரி மாதத்திற்குள் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பார்கள். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட்டார மருத்துவ அலுவலர் கோலப்பன் உறுதி அளித்தார்.
இதையடுத்து பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி கோவில் உள்ளது.
- அம்மன் கண்களில் வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை செக்கடி தெருவில் ஸ்ரீதேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 21 நாட்களுக்கு முன்பு வருஷாபிஷேக விழா நடந்தது. அதன்பின்னர் தினமும் காலையில் கோவிலில் பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவில் பூசாரியான தர்மராஜ், கோவில் நடையை திறந்து பூஜை செய்தார். அப்போது அம்மன் கண்களில் இருந்து வெள்ளை நிறத்தில் ஒளி வீசியதாக கூறப்படுகிறது. அதை அங்கு சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பார்த்து வியந்துள்ளனர். இந்த தகவல் பக்கத்தில் வசிப்பவர்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது.
உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்து வியப்புடன் பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்கள் செல்போனில் படம் பிடித்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதைப்பார்த்து அக்கம் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் வந்து ஆச்சரியத்துடன் பார்த்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் நடை மதியம் 1 மணிக்கு அடைக்கப்பட்டது.

இந்த அதிசய நிகழ்வு குறித்து கோவில் பூசாரி தர்மராஜ் கூறியதாவது:-
தினமும் காலை 9 மணிக்கு கோவில் நடையை திறந்து பூஜை செய்வேன். அதன்படி நேற்றும் காலையில் வந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் நெய்வேத்தியம் உள்ளிட்டவற்றை செய்தேன். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அம்மனே வந்து நேரடியாக என்னை சந்தித்தது போல் உணர்ந்தேன். அம்மன் கண்ணை திறந்து என்னை பார்த்தது போல் இருந்தது.
அம்மனுடைய இடது கண் மனிதர்களின் கண் போல் 2 புறமும் வெள்ளையாகவும், நடுவில் கருவிழியும் இருப்பது போல் இருந்தது.
என்னை பார்த்து அம்பாள் கேள்வி கேட்பது போல் உணர்ந்தேன். அந்த நேரம் தரிசனம் செய்ய வந்த ஒருவர் வந்தார். அவரை அம்மனை பார்க்க சொன்னேன். உடனே அம்மனை பார்த்த அந்த பக்தர், வலது கண் மனித கண் போல் காட்சியளிப்பதாக தெரிவித்தார். இது உண்மைதானா என்பது குறித்து சந்தேகம் அடைந்து அக்கம்பக்கத்தில் இருந்த அனைவரையும் அழைத்து காண்பித்தேன்.
என்னுடைய 50-வது வயதில் நான் தற்போது பூஜை செய்து வருகிறேன். வீடுகளில், கோவில்களில் பூஜை செய்துள்ளேன். ஆனால் இதுவரை இப்படி ஒரு அதிசய நிகழ்வை கண்டதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






